Wednesday, December 31, 2008

காங்கிரஸ் காரரை காதலிக்கும் யாழ்பாணத்து தமிழ்ப்பெண்

தமிழகத்தில் அகதியாக வந்துள்ள ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பெண்,தமிழகத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ்காரரை தீவிரமாக காதலிக்கிறார்.அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்.


யாழ் பெண் : நீங்கள் ரொம்ப அமைதியானவராய் இருக்கிறீர்கள், உங்கள் வடிவுடைய முகத்தில் உள்ள அமைதிதான் உங்கள் மேல் என்னை காதல் கொள்ள வைத்தது, நீங்கள் எப்படி என் மேல் காதல் கொண்டீர்கள்

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : ஏன் பயப்படுகிறீர்கள், நான் அங்கட கருவாகி இங்கட எங்கம்மா ஷெல்லடிக்கு பயந்து அகதியா வந்து உங்கள் மண்ணில் பிறந்தவள்,என்னை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்.?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : எனக்கும் புலிக்கும் எந்த தொடர்பும் இல்லை,நான் இப்போது சமையலில் கூட புளி சேர்ப்பதில்லை, சாம்பார் கூட வட நாட்டுக்காரர்களுக்கு பிடித்த மாதிரி புளி போடாமல் வெக்கிறேன், நீங்கள் என்ன நம்பலாம், நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் நினைத்துப்பார்க்க முடியவில்லை.பதில் சொல்லுங்கள்?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : இங்கட தமிழ்நாட்டில் அகதியா பொறந்து,வெட்டவெளியில் எங்கட வாழ்க்கையை கழிச்சு,எப்படியோ அடிச்சு பிடிச்சி நல்ல கல்வியும் கற்றேன், உங்களுக்கு கற்றவர்களை மிகவும் பிடிக்கும்தானே, உங்களுக்கு ஏத்த மாதிரி என்ன மாத்திக்கறேன்,என்ன ஏற்றுக்கொள்வீர்களா?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : உங்களுக்கு என் மேல் அன்பு உண்டு எதுவோ உங்களை தடுக்கிறது, உங்களின் மனது மாறி நீங்களும் என்றாவது மேலிடத்தில் பேசி என்னை ஏற்றுக்கொள்வீர்கள் எண்டு நம்புகிறேன்.அந்த கதிர்காமம் முருகன் நம்மட காதலை சேத்துவைப்பான்.

மேலிடம்: யப்பா யாரோ ஒரு யாழ் பொண்ணு உன்ன காதலிக்குதாமே அத கல்யாணம் பண்ணிக்கோ.ஆனா அந்த பொண்ணும் காங்கிரஸ்ல சேர சொல்லுப்பா சரியா.

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன். மன்னிக்கவும் மேலிடம் சொல்லுக்கு கட்டுப்படறேன்

ஒரு வழியா திருமணம் முடிந்தது.

காங்கிரஸ் பெண் :மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

Monday, December 29, 2008

பதிவுத் திருடர்களுடன் வருங்கால முதல்வர்

வருங்கால முதல்வர் : அரச கவி வாழ்கையிலே இன்னைக்கு தான் உருப்படியான காரியம் பண்ணி இருக்கியரு, நோகாம நொங்கு திங்கவங்களை பாத்து பேச ஏற்ப்பாடு எப்படி பண்ணுனீங்க

அரச கவி : அவிங்க வழியிலே போய் அவங்களை பிடிச்சேன், இதெல்லாம் உங்களுக்கு புரியாது, அதனாலே வந்த வேலையை பார்ப்போம் .

வ.மு : அறிவுத்தனமா கேள்வி கேட்டா "உனக்கு புரியாதுன்னு" அறிவு பூர்வமா பதில், இருக்கட்டும்..இருக்கட்டும்

அரச கவி : நிலா நிலா ஓடிவா..நிலா நிலா ஓடிவா

வ.மு: யோவ் என்ன பள்ளி ௬டத்து புள்ளைக பாட்டு திடிர்ன்னு எடுத்து வுடுரீரு, நான் கேட்கவே இல்லையே

அரச கவி : ஸு .. ஸு, இது இவங்களோட ரகசிய பாசை, இவங்க அப்படிதான் பேசிக்குவாங்க

வ.மு : ஆமா இது ஒரு பெரிய ராணுவ அமைப்பு, ரகசிய பாசை, தோசை ன்னு

(பதிவு திருடர்கள் வருகிறார்கள்)

அரச கவி : வணக்கம் ஆஇ, உச,முதல்வர் ஐயா இது இவங்க எம்ப்லோயீ நம்பர், இவங்க சொந்த பேரு என்னனு எனக்கும் தெரியாது.

வ.மு : ஒ. இவங்க சோலியே இதுதானா?, வணக்கம் ஆஇ, உச சமிப காலமா நிறையா பதிவுகளை, சினிமாவிலே கதையை திருற மாதிரி திருடி உங்க இணைய தளத்துல போடுறீங்க, இப்படி நோகாம நொங்கு திங்கனும்ன்னு யோசனை எப்படி வந்ததது

ஆஇ : இதுல யோசிக்க என்ன இருக்கு, கோவில் மாடு வயல் வெளியிலே மேயுற மாதிரி பதிவுகள்ல்ல மேய்வோம், நல்லா இருக்க பதிவை காப்பி பண்ணுவோம், திருட மாட்டோம்

அரச கவி : மாடு நல்ல தீனி கிடைக்க இடத்துல மேயற மாதிரி நல்ல சரக்கு இருக்க இடத்திலே மேயுவீங்க

உச : சரியா சொன்னீங்க அரச கவி , உங்களுக்கு அறிவோ அறிவு

வ.மு : ஹும். பாராட்டு எல்லாம் அப்புறம், நீங்க செய்றது தப்புன்னு தோணலையா? எடுக்கிறதுக்கு முன்னாடி கேட்கணும்ன்னு தெரியாதா, திறந்த வீட்டுல எதோ நுழைந்த மாதிரி வந்தா எப்படி?

உச : ஐயா நீங்க ரெம்ப கேள்வி கேட்குறீங்க, எங்களுக்கு பதில் சொல்லி பழக்கம் இல்லை.

வ.மு : இதுக்காவது பதில் சொல்லுங்க என் நமிதாவை திருடினது யாரு... என் நமிதாவை திருடினது யாரு

அரச கவி : என்னது உங்க நமிதாவா? சொல்லவே இல்லை,அதாவது திருடி தான் பழக்கம், பதில் சொல்லி பழக்கம் இல்லைன்னு சொல்லுறாங்க

உச : அவங்க நமிதாவை பத்தி எழுதின பதிவை பத்தி சொல்லுறாங்க, ஐயா பல கம்பனிகள் இதே தொழில் செய்யுறாங்க, நீங்க கேக்கிறது தமிழ் நாட்டுல முருகன்னு ஒருத்தரை தெரியும், அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்கிற மாதிரி இருக்கு

அரச கவி : இந்த பதிவை எழுதினவனை விட ரெம்ப அறிவாளிகள் நீங்க.

உச : கதையை திருடி படமா எடுத்தா வழக்கு போடலாம், பதிவை திருடி போட்டா வழக்கு போட முடியாதே

வ.மு : நம்ம கட்சி கொள்கையிலே இதையும் சேர்த்து கொள்வோம், வருங்கால முதல்வர், முதல்வர் ஆனால் உங்களுக்கு கையிலே காப்பு கொடுப்போம்

உச : தங்கமா கொடுங்க, அடகு வச்சி இன்னும் ரெண்டு கம்ப்யூட்டர் வாங்கணும், வேலைக்கும் ஆள் எடுக்க வசதியா இருக்கும்.

அரச கவி :கட்டடம் கட்ட ஆள் எடுக்கிற மாதிரி சொல்லுற, மண்டைய கசக்கி பிழிஞ்சி நாங்க பதிவு எழுதுறோம், நீங்க லாவகமா நவட்டிட்டு போய், என்னவோ நீங்களே எழுதின மாதிரி போடுறது நல்லா இல்லை

ஆஇ : அருமை..அருமை

வ.மு : என்ன அரச கவி பேசியே மனசை மாத்தீட்டீங்க போல

ஆஇ : ஐயா நான் புதுசா ஒரு பதிவு கிடைச்சு இருக்கு அதை பத்தி சொல்லுறேன்,உச நம்ம தணிக்கை குழுவுக்கு இந்த பதிவை அனுப்பி வை, அவங்க சரி பார்த்த உடனே காப்பி பண்ணலாம், மன்னிக்கணும் இது எமெர்ஜென்சி பதிவு, அதனாலே இதுக்கு நாங்க உடனே பதில் சொல்லணும், ஹும், நீங்க என்ன சொன்னீங்க.

வ.மு: அரச கவி இவங்க அடங்க மாட்டங்க போல தெரியுதே .

அரச கவி: ஐயா இது நம்ம இடி விழுந்த இருளாண்டி யோட "பதிவு திருடர்களுடன் வருங்கால முதல்வர்"

வ.மு : அவன் பதிவு எழுதி முடிக்கும் முன்னாடியே திருடிட்டாங்க,படம் வெளியிலே வரும் முன்னாடி இணைய தளத்துல முழு படமும் வலம் வருகிற மாதிரி இருக்கு

அரச கவி: வகை வஞ்சனை இல்லாம திருடுறாங்க, இவங்களையெல்லாம் பார்த்தா நம்ம பதிவு எழுத முடியாது, அதனாலே நாம் இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போவோம் .

வ.மு : இந்த மாதிரி அட்டு பதிவுகளை ௬ட விடுறது இல்லை, இங்க வந்ததே தப்பு .

ஆஇ : ஆமா உண்மைதான் என்ன ரகசியம் தெரிஞ்ச நீங்க, எங்களுக்கு ரெண்டு பதிவு காப்பி அடிக்க துப்பு கொடுக்கணும்.

வ.மு : கொடுக்கலைன்னா ?

உச : நாங்க கொடுப்போம்

அரச கவி: என்னது?

ஆஇ : அங்கே பாருங்க

வ.மு : நாங்க அங்க பார்க்கிறது இருக்கட்டும், நீ இங்கே பார்

உச :சாட், பூட், திரி..சாட், பூட், திரி....சாட், பூட், திரி..சாட், பூட், திரி..

(அனைவரும் இந்த பதிவை படிச்சு புட்டு ஓடுற மாதிரி ஓடி விடுகிறார்கள்)

அரச கவி: தப்பிச்சு ஓடுறதுக்கு பயன்படுத்திற ரகசிய பாசை, எப்படி முதல்வர் இப்படி?

வ.மு : புதுசா பதிவு வந்திருக்குன்னு கடை பக்கம் எட்டி பார்க்க வந்தவங்களை பார்த்து இப்படி பயந்து ஓடுறாங்க

அரச கவி: இதுக்கு முடிவு சொல்ல முடியாது, வழக்கம் போல இருக்கிறதை நாம சுட்டுட்டு போவோம்

Friday, December 26, 2008

பா.ம.க: தமிழ் நாட்டின் தலிபான்கள்??

எல்லாம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது.... 

"எங்கள் மண்ணில் சோவியத் படைகளுக்கு இடமில்லை..." என்று சில வருடங்களுக்கு முன் தலிபான்கள் ஆரம்பித்த போது உண்மை முகங்களையும் நோக்கங்களையும் புரிந்து கொண்டவர்கள் அதிகமில்லை...
..
இசை மதத்திற்கு எதிரானது...இசை நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை...பெண்கள் உடல் முழுதும் மூட வேண்டும்...கண்கள் கூட வெளியே தெரியக் கூடாது...குடும்பத்து ஆண் இன்றி வெளியே செல்லக் கூடாது...மது முற்றிலும் ஒழிப்பு... 

கோர முகங்களின் சில பகுதிகள் வெளி வந்த போதும் பலருக்கு உறைக்கவில்லை....

நல்லது தான சொல்றாங்க....என்று ஜால்ரா தட்டியவர்கள் பலர்... 

ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது, தாடி வளர்க்க வேண்டும்..தினம் ஐந்து முறை தொழாவிட்டால் சவுக்கடி.... பெண்கள் பள்ளிகள் இழுத்து மூடப்படும்...வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விபச்சாரி பட்டம்...கல்லடி மரணம்....மது முற்றிலும் ஒழிப்பு அதே சமயம் உலக நாடுகளுக்கு ஒப்பியம் கடத்தலாம்.. பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெடி குண்டு...மாணவிகள் கடத்தல்.... 

உண்மையான முகங்கள் வெளியே வந்த போது அய்யோ அய்யோ என்று அலறி என்ன பயன்?? 

பொது மக்களை நேருக்கு நேர் சந்தித்து பெருவாரியான ஓட்டுக்களில் வெற்றி பெற்ற திரு.அன்பு மணி பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை கொண்டு வந்த போது வாழ்த்தி வரவேற்றவர்கள் அனேகம் பேர்....

சரி, பொது இடம் என்றால் என்ன?? மக்கள் அடர்ந்த கும்பலான பிரதேசங்கள் பொது இடம் என்றால் சரி...ஆனால், காடு, ரோடு, தெரு, குட்டிச்சுவரு, ரோட்டு ஓரமாக நிற்கும் என் சொந்தக் கார் என்று எல்லா இடமும் பொது இடமென்றால்...  

சிகரெட்டில் ஆரம்பித்தது இப்பொழுது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது...

பத்து மணிக்கு மேல் மது விற்பனைக்கு தடை....

அடுத்த கட்டம் என்ன என்பதை பதவி ஆசையற்ற, என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வந்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று ஒரு காலத்தில் சத்தியம் செய்த திரு. ராமதாஸ் கொஞ்சமும் மறைக்கவில்லை...  

முழுமையான மதுவிலக்கு என்பதே எங்களின் குறிக்கோள்.... 

அப்படியானால் மது குடிப்பவர்கள் என்ன செய்வது?? திருந்துங்கள் என்று சொல்லக் கூடும்...ஒருவன் மதுக் குடிப்பதும் குடிக்காததும் அவனவன் விருப்பம்..அவனவன் காசில் அவனவன் குடிக்கிறான்... ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட இவர்களுக்கு என்ன அதிகாரம்?? 

ராமதாசிடம் பிச்சை வாங்கி யாரும் குடிக்கவில்லை...யார் காசையும் திருடியோ ரோடு போட கான்ட்ராக்ட் வேணும்னா 10% கமிஷன் என்று ஊர்ப்பணத்தை கொள்ளையடித்தோ குடிக்கவில்லை....என் பணம்!  

குடித்து விட்டு கலாட்டா செய்கிறார்கள் என்று சில ஒழுக்க சீலர்கள் சொல்லக்கூடும்... குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களை சிறையில் அடைக்க ஏற்கனவே சட்டம் இருக்கிறது.... 

சரி, கலாட்டா செய்வதால் மதுவுக்கு முழு தடை என்றால், அரசியல் வியாதிக‌ளால் தான் பல கலவரங்கள் நடக்கின்றன... தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு எரித்ததும், தினகரன் பத்திரிகை ஊழியர்களை எரித்ததும்....வட மாவட்டங்களில் பல ஜாதிக் கலவரங்களுக்கு காரணமும் அரசியல் வியாதிகள் தான்....

அப்படியானால் அரசியல் கட்சிகளை தடை செய்தால் என்ன??? அதிலும் வன்முறையாலேயே வளர்ந்த கட்சி, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட ஒருவரை முக்கிய பொறுப்பில் வைத்திருந்த கட்சி ஒன்றிருக்கிறது....இந்த கட்சியை முதலில் தடை செய்து சமூக நீதியை நிலை நாட்டினால் என்ன??  

பா.ம.கவின் வரலாற்றை திரும்பி பார்த்தால்...தலிபான்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை...  

"வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்...." (எல்லா இடங்களிலும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் ‍ தலிபன்)  

"நீதிபதிகள் பதவியில் வன்னியருக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்" (ஒரு முஸ்லிம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்... தலிபன்

"உலகின் சிறந்த ஜனநாயக வாதி ராமதாசுக்கு மதுரையில் கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீது உருட்டுக் கட்டை தாக்குதல்" ( அமெரிக்காவில் 9/11 தாக்குதல்...தலிபன்)  

"பாபா படப்பெட்டி கடத்தல்" (அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை..இசைத்தட்டு விற்பனை செய்யும் கடைகள் அடித்து நொறுக்கல்: தலிபன்)  

"தமிழ் நாட்டில் எல்லாரும் தமிழில் மட்டுமேபடிக்க வேண்டும்...ஆனால் அதே சமயம் அவரது பேரக்குழந்தைகள் டெல்லியில் தமிழ் சொல்லித் தராத ஒரு பள்ளியில் படிப்பார்கள்" (மக்கள் எல்லாரும் கடும் குளிரில் பஞ்சத்தில் வாட, உல்லாசமாக இருந்த தலிபன் அரசின் முக்கிய புள்ளிகள்

"தமிழ் எழுதாத பெயர்ப்பலகை மீது தார் பூச்சு.....ஆனால் என் பேரக் குழந்தைகளின் பெயர் சம்யுக்தா...சங்கமித்ரா...." (புத்தர் சிலைகளை உடைத்து நொறுக்கிய தலிபன்கள்!)  

குடிக்கிற நாய்ங்களுக்கு தான் இதனால பிரச்சினை...எனக்கெல்லாம் ஒண்ணுமில்ல...நானெல்லாம் ரொம்ப நல்லவன் என்று நினைக்கும் ஒழுக்க சீலர்கள் பா.ம.க வின் கடந்த கால வரலாற்றை கொஞ்சம் எண்ணிப் பார்ப்பது நல்லது..  

எது எப்படி போனாலும் எனக்கென்ன என்று நினைத்தால்..... சாரு நிவேதிதாவின் வலைத் தளத்தில் Rev. Martin Niemoller சொன்னதாக படித்தது... 

In Germany, the Nazis first came for the communist 
and I did not speak up because I was not a Communist  
Then they came for the jews, 
and I did not speak up because I was not a jew.  
Then they came for the trade unionists, 
and I did not speak up because I was not a trade unionist. 
Then they came for the Catholics, 
and I did not speak up because I was protestant.. 
Then they came for me, 
and by that time, there was no one left to speak up for me!

மீண்டும்....எல்லாம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது!

(இந்த பதிவை என் மற்றொரு வலைத் தளமான முரண்தொடையில் போடலாமா இல்லை வருங்கால முதல்வரில் போடலாமா என்று நீண்ட சிந்தனைக்கு பின், இந்த தளத்திலேயே இடுகிறேன்...வருங்கால முதல்வர்னு தளத்துக்கு பேர் வச்சிக்கிட்டு அரசியல் பேசாட்டி எப்படி? :))

அம்மா தாயே....ஓட்டுப் போடுங்கம்மான்னு அஞ்சா நெஞ்சன் அழகிரியே கேட்கும் போது அஞ்சு காசு பெறாத அது சரிக்கு என்ன வந்துச்சி? அதனால பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க எசமான்! பிடிக்காட்டி தமிழ்மண தம்ஸ் டவுன் குடுத்துட்டு போங்க!

இது திருட்டா இல்லை திரட்டியா

வருங்கால முதல்வர் அப்படின்னு கூகில் செய்யப்பட்டபோது வந்த தொடுப்பு இது.

இந்த பதிவை
வருங்கால முதல்வர்: வருங்கால முதல்வர் நடிகை நமீதாவுடன் பேட்டி
அப்படியே காப்பி பண்ணி போட்டிருக்கு
இங்கே

நம்ம பதிவ கூட நகலெடுத்துப்போடுறாங்கன்னு மகிழ்ச்சியா இருக்கு, ஆனா கூடவே எங்க குழமத்தோட இணைப்பையும் கொடுத்திருக்கலாம்.

பதிவர்களே நாங்க வலைப்பதிவுக்கு புதியவர்கள், இது என்ன என்று விளக்குங்கள்

நன்றி

வருங்கால முதல்வர் குழுமம்.

Tuesday, December 23, 2008

வணக்கமுங்க

இங்க கூட வேலை செய்யறவங்க நீங்க எந்த ஊர்ல இருந்து வந்தீங்கன்னு கேட்டா

பக்கத்துல தான் போர்ட் வொர்த், அப்படின்னு தான் சொல்லுவேன்.

கேட்டவன் டேய் உன்னை பார்த்தா கொஞ்சம் கருப்பனாட்டமும் தெரியற, கொஞ்சம் கீழ் நாட்டு சாயலும் (மெக்ஸ்சிகான்) தெரியுது
நீ எந்த நாட்டுல இருந்து வந்தைனு தாண்ட கேட்டேன்..
நமக்கு இந்தியா தான் சொந்த ஊரு,

இந்தியாவுல எங்க?
தெனிந்தியா, தமிழ்நாடு மாநிலம். சென்னை இல்லேன்னா மெட்ராஸ் கேள்வி பட்டு இருக்கீங்களா.. அங்க இருந்து தான் வரேன்

இப்போ கூட அங்க தீவிரவாதிங்க எதோ சாப்பட்டு கடையில தின்ன சோத்துக்கு காசு கேட்டதுக்கு சுட்டு புட்டானுகளே அந்த ஊரா?
ஆமாம், அந்த ஊருக்கு கொஞ்சம் பக்கம் தான் எங்க ஊரும்

அப்படின்னு கொஞ்சம் கதைய கட்டிட்டு விட்டா சாமின்னு எடத்த காலி பண்ணிட்டு வந்துடுவேன்..

இங்க எல்லாம் நம்ம ஆளுங்க இருக்கிறதால உண்மைய சொல்றேன்..

நமக்கு கோயமுத்தூரு பக்கமுங்க,
அங்க பக்கத்துல இருக்கிற ஈரோடு, அதுக்கு பக்கத்துல இருக்கிற கோபி, அதாங்க காசில்லாத சினிமாகாரங்க, கிராமத்து படம் புடிக்க வர்ற ஊருங்க நம்முளுது.
இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டா அதுக்கு பக்கத்துல இருக்கிற சொந்த ஊரு பேர சொல்லிடுவேன், அந்த ஊரை ரொம்ப பேருக்கு தெரியதுங்கரதால இதோட நிறுத்திக்கிறேன்.


நம்ம ஊரு கொஞ்சம் முன்னேறிய ஊருங்க..
இந்த குளோபல் வார்மிங், க்லீமிங் அப்படின்னு சொல்றத நாங்க முன்னமே தெரிஞ்சதால எங்க ஊருக்கு பஸ் எல்லாம் வேணாம், நீங்க ரொம்ப பிரியப்பட்டா காலைல பால் பீச்சரப்போ ஒன்னு, பொழுது சாஞ்சு சாணி அள்ளுனதுக்கு அப்புறம் ஒண்ணுனு வந்தா போதும்னு சொல்லிபுட்டோம்

இங்க இருந்து எப்படி நீ வருங்கால முதல்வர் ஆகா முடியும்னு கேக்கறவங்களுக்கு

முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊரு முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊருல இன்னும் திருட்டு கல்லு இறக்கிறாங்க முடியாதுன்னு நெனச்சுருந்தா டாஸ்மார்க் கடையில காச கொடுத்துட்டு ஊட்டுல சம்சாரங்கைல அடி வாங்கிட்டு தான் இருக்க முடியும் என்ன சொல்றீங்க .

முதல்வர் ஆகறதுன்னு அடுத்த பதிவுல சொல்ல்றேனுங்க.

தப்பா எதுனா சொல்லிருந்த மன்னிசுகிடுங்க, இப்போதைக்கு நான் உத்தரவு வாங்கிக்கிறேன் சாமி.

[எப்படியோ ஒரு மொக்க பதிவ போட்டு நானும் என்னோட கணக்க தொடங்கிட்டேன்]

Monday, December 22, 2008

விருது நகர் மாவட்டம் 02

இதுவும் மாவட்டம் பற்றிய பொத்தாம் பொதுவான பதிப்பு தான்.

விருது நகர் மாவட்டம் மொத்த பரப்பளவு 4243 சதுர கிமீ

மக்கள் தொகை மொத்தம் 17,51,548 (2001 கணக்கெடுப்பு படி)
படித்தவர்கள் 65% - 11,52,516

முக்கிய தொழில்கள்

தீப்பெட்டி தொழில் - சிவகாசி, சாத்தூர், விருதுநகர்

வெடி தொழில் மற்றும் அச்சகங்கள் - சிவகாசி

பருத்தி ஆலைகள் - ராசபாளயம்

மெட்ராஸ் சிமெண்ட்ஸ் - துலுக்கபட்டி

தமிழ்நாடு சிமெண்ட்ஸ்/ ஆஸ்பெஸ்டாஸ் - ஆலங்குளம்

டிவிஎஸ் நட்ஸ் அண்ட் போல்ட்ஸ் - ஆவியூர்

ஏற்றுமதி - ஏலக்காய், பட்டாசு, மிள்காய், எண்ணெய், தீப்பெட்டி


பக்தி ஸ்தலங்கள்

வில்லி புத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் சீனிவாசப் பெருமாள் கோவில்

இருங்கன் குடி மாரியம்மன் கோவில்

திருச்சுழி பூமிநாதர் கோவில்

விருது நகர் மாரியம்மன் கோவில்

இனி ஒவ்வொரு ஊரா அலசலாம்னு இருக்கேன். அதுல பங்குனி பொங்கல் பத்தி பட்டய கெளப்புவோம்ல.

மீசைக்காரரு, அவரு மூஞ்சில ஆசிட் அடிச்சவரு பத்தி எல்லாம் எழுதினா மண் மணம் போயி அரசியல் ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு. அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு இருக்கேன்.

Tuesday, December 16, 2008

நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 2

நெல்லை மாவட்டத்தைப் பத்திய போன பதிவிலே ஒரு முன்னுரையா பார்த்தேம், இந்த தடவை மாவட்டத்திலே இருக்கிற முக்கிய நகரங்கள் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.


நெல்லை மாவட்டத்திலே, திருநெல்வேலி,தென்காசி, ஆலங்குளம், பாவூர் சத்திரம், சங்கரன்கோவில், செங்கோட்டை,கடையநல்லூர்,புளியங்குடி,பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் ,குற்றாலம்,பாளையம்கோட்டை, அம்பாசமுத்திரம்,மணப்பாடு,நாங்குநேரி,சாத்தான்குளம்,,இதை தவிர நிறைய சின்ன நகரங்கள், கிராமங்கள் இருக்கிறது.


நான் ஊரு மேய்ந்த இடங்கள் எல்லாம் நெல்லை மாவட்டத்தின் வட பகுதிகளில் தான், அதனால அந்த இடங்களை முதல்ல சொல்லிகிறேன். நெல்லைக்கு சிறப்பு சேர்ப்பது காந்திமதி - நெல்லையப்பர் கோவில், இந்த கோவிலை பதிமூன்றாம் நூற்றண்டிலே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது,சிவன், பார்வதி கோவில் இது.தென்னகத்திலே மதுரைக்கு அடுத்த படியாக பழமையான நகரம், சில காலம் பாண்டியர்களின் தலை நகராகவும் இருந்ததாக கேள்வி(??).


இந்த கோவில்ல கடை வச்சு இருக்கவங்க எல்லாம் வாடகை ஒழுங்கா கட்டலைன்னு யாகம் நடந்தி வாடகை வசூல் பண்ணினாங்க, எல்லோரும் அவ்வளவு நாணயஸ்தர்கள் (பழமைபேசி??) .


இந்தியாவிலே கட்டப்பட்ட முதல் இரண்டு அடுக்கு பாலம்(?) நெல்லை சந்திப்பிலே உள்ளது.


தென் இந்தியாவில் உள்ள சிறந்த அறிவியல் அருங்காட்சியகங்களில் நெல்லையில் இருப்பதும் ஒன்று, நான் பள்ளியில் படிக்கும் போது கல்வி சுற்றுலா என்ற பெயரில் ஒரு முறை சொன்றுள்ளேன், அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.


பாளையம் கோட்டையும் நெல்லையும் இரட்டை நகரங்கள், இரண்டையும் பிரிப்பது தாமிரபரணி ஆறு,தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட், இங்கு இல்லாத கல்வி நிறுவனங்களை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம்.


பாளையம் கோட்டையிலே கோட்டை இன்னும் இருக்குதான்னு தொல் பொருள் துறையிடம் கேட்டாலும் விடை கிடைப்பது சந்தேகமே, அந்த அளவுக்கு பழமையை காப்பாற்றுவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.முருகன் குறிச்சியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயம் சுமார் 16 ம் நூற்றாண்டிலே கட்டப்பட்டது.சாராள் டக்கேர், ஜான்ஸ், சேவியர் கல்லூரிகள் எல்லாம் 100 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.


என்னதான் மாணவர் நகரம், ஆக்ஸ்போர்ட் ன்னு சொன்னாலும் பாளையம் கோட்டையை மேலும் அழகு சேர்ப்பது இங்கு உள்ள மத்திய சிறை, பல வரலாற்று தலைவர்களையும், வாலாட்டுற தலைவர்களுக்கும் மாமியார் வீடாக திகழ்ந்து இருக்கிறது, திகழ்கிறது,திகழும்.


வரலாற்று தலைவர்கள் - பாரதியார், கலைஞர்(??)


வாலாட்டுற தலைவர்கள் - என்னை மாதிரி நிறைய பேரு


விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனை நிலங்களாக மாறிக்கொண்டு வருகிறது, ஆனால் இன்னும் விவசாயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


மழை பெஞ்சா நெல்லு


பெய்யலைன்னா எள்ளு


தகவலை சுட்டு


சொல்லிபுட்டேன் இட்டு


தொட்டதை சொன்னேன்


விட்டதை சொல்லுங்க


இப்போதைக்கு இடைவேளை
சந்திப்போம் அடுத்த கடைவேளை

Monday, December 15, 2008

தஞ்சை மாவட்டம் : பட்டுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுப்புறம்.

பட்டுக்கோட்டை நகரம் தமிழகத்திற்கு இரண்டு பெயர்களால் பிரபலம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,பட்டுக்கோட்டை அழகிரி இவர்களை பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.இவர்கள் அல்லாமல் முன்னால் குடியரசுத்தலைவர் இரா.வெங்கட்ராமன், திராவிட இயக்கத்தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன்,எஸ்.டி.சோமசுந்தரம்,மற்றும் வாட்டகுடி இரணியன்(தகவலுக்கு நன்றி ஜோதிபாரதி) போன்ற பிரபலங்களை தந்த ஊர்

இந்த சிறிய நகரம், சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய பொருளாதாரத்தை நம்பி இருக்கும் வியாபார நகரம்.இந்நகரில் குறிப்பிட்டு சொல்லும்படி உள்ளது நாடியம்மன் கோவில், கிட்டத்தட்ட ஒரு வாரம் நடக்கும் அதன் திருவிழா,இத்திருவிழாவில் ஒரு சாதீய் அதிசயம் , செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கே முதல் மண்டகப்படி இந்த அதிசயம் இந்தியா முழுவதும் நடக்க நாடியம்மனை வேண்டுவோம்,சுற்றுப்புறத்தில் உள்ள துர்க்கையம்மன் /செல்லியம்மன் திருவிழாவும் பிரசித்தம்.

ஓரளவுக்கு பெரிய ஊராக இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படி பள்ளிகள் எண்ணிக்கை இல்லை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமே கல்விச்சாலை.கல்லூரிக்கு அதிராம்பட்டிணமோ, தஞ்சாவூரோ செல்லவேண்டும் இப்போது சில தனியார் சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி பண்ணை வீரிய தென்னைகளை உற்பத்தி செய்து சுற்றுப்புற கிராமங்களில் தென்னை தோப்புகளை உருவாக்குகிறது.

சுற்றியுள்ள கிராமங்களை பேராவூரணி பகுதி,முத்துப்பேட்டை,அதிராம்பட்டிணம் சார்ந்த கடற்கரை பகுதி,மதுக்கூர் பகுதி,பாப்பாநாடு பகுதி என எளிதில் பிரித்து அடையாளம் காணலாம். கடற்கரையை பகுதியில் விவசாயத்துடன் மீன்பிடித்தல் ஒரு தொழில்.மற்ற பகுதிகள் விவசாயம் மட்டுமே.

பெரும்பாலும் காவிரியின் கடைமடை விவசாயப்பகுதி ஆதலால் கல்லனைக்கால்வாயின் கிளை வாய்க்கால்களான கல்யாண ஓடை, ராஜாமடம் வாய்க்கால் மூலமே பாசணம், காவிரி திறந்து 40 நாள் கழித்து தண்ணீர் வந்தாலே அதிசயம்.இந்த அதிசயத்திலும் ஓரளவிற்கு விவசாயம் செய்கின்றனர்.

ஒருகாலத்தில் யானைகட்டி போரடித்து, பின்னர் சோழனை(பஸ்) கட்டி போரடித்து(வைக்கோலில் மிஞ்சியிருக்கும் நெல்லை எடுக்க) பின்னர் கதிர் அடிக்கும் இயந்திரம் , அறுவடை இயந்திரம் வந்து விட்ட நிலையில் முற்றிலும் இந்த பழக்கம் இப்போது இல்லை.இதனால் வாகனங்கள் சாலையில் வைக்கோலில் சிக்கும் வாய்ப்பு இனி இல்லை.

பேராவூரணி, குருவிக்கரம்பை பகுதியில் மொய்விருந்து எனப்படும் வினோதமான பழக்கமும் உண்டு, இதன் படி ஒருவர் மொய்விருந்து வைத்தால் அவருக்கு அப்பகுதியை சேர்ந்த உறவினர்கள் மொய்யாக சில ஆயிரங்களில் ஆரம்பித்து சில லட்சம் வரை மொய்யாக பணம் தருவர்.மொய்விருந்தில் பங்கேற்பவர்களுக்கு தடல்புடலான கறி விருந்து உண்டு. இம்மொய் விருந்தில் சில சமயங்களில் கோடி ரூபாய் வரை வருமாம். அதை வைத்து அவர்கள் புதிய தொழிலோ, தென்னந்தோப்போ வாங்கி பிழைத்துக்கொள்வர்.ஆனால் ஒருவர் 1000 ரூபாய் போட்டால், போட்டவர் மொய்விருந்து வைக்கும்போது இரண்டு மடங்காக போட்டால்தான் மரியாதை.திருப்பி போடவிட்டால் நாகரிகமாக டவுசர் உருவப்படும்.

இப்பகுதியில் தென்னை வளம் அதிகம், பொள்ளாச்சி இளநீர் அளவு புகழடையாவிடினும், நல்ல தரமான தேங்காய் இப்பகுதியில் விளைகிறது,பெரும்பாலும் எண்ணைய் தயாரிப்பிற்கு விற்பனை என நினைக்கிறேன். தென்னை உப தொழிலான கயிறு தொழிற்சாலைகள் சிலவும் உண்டு.

அதிராம்பட்டிணம் பகுதியில் பிடிக்கப்படும் மீன் இந்நகர மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு மீன் உணவாகிறது.மதுக்கூர்,பாப்பாநாடு பகுதிகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தே உள்ளது.மனோரா எனற சுற்றுலாத்தளமும் இக்கடற்கரையோரம் உள்ளது.

இந்நகரத்திற்கு சென்னை காரைக்குடி செல்லும் ஒரு ரயிலும் வருகிறது, இவர்களின் நீண்ட கால ஆசையான தஞ்சை-பட்டுக்கோட்டை ரயில் நிறைவேறுமா?

நாடியம்மன் கோவில்
விக்கி

பட்டுக்கோட்டை பகுதி பதிவர்கள் மேலும் தகவல் தருவார்கள்....பின்னூட்டமாக..

Friday, December 12, 2008

சோழமண்டலம் - மனதில் இனிக்கும் எம் மயிலாடுதுறை !


சகபதிவர் குடுகுடுப்பை தஞ்சை மாவட்டம் பற்றிய ஒரு தொடராக எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் பதிவின் இணைபதிவாக எங்கள் ஊரினை பற்றிய சில குறிப்புக்களுடன் நான்...!

சொந்த ஊரைப்பற்றி சொல்வதென்றாலே மனதுக்கு இன்பமான சூழல்தான் எப்பொழுதுமே எவருக்குமே! அதுவும் பிரிந்து சற்று தூரத்தில் இருப்பவர்களுக்கோ சொல்லொண்ணா இன்பமே சூழ்ந்திருக்கும்!

நினைவுகளில் பயணித்த இடங்களும் தெருக்களும் ஒன்றென்பின் ஒன்றாய் வந்து அலையடிக்கும்! (அதுவும் எனக்கு கொஞ்சம் நெறையாவே அடிக்குது பின்னே ஓவராத்தானே திரிஞ்சுருக்கோம்!)

ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த ஊரினை பற்றிய தகவல்களினை தெரிந்து வைத்திருத்தல் கட்டாயம் வேண்டும்! அது செய்திகளாக திரட்டியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியோர்களிடம் கேட்டு பெற்ற விசயங்களாக கூட இருக்கலாம்! அதுவும் அந்த ஊர் ,அதன் தெரிந்த வரலாறு,வாழ்ந்த முன்னோர்கள் என்று பல வாழும் எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையில் நமக்காய் எத்தனையோ நல்ல விசயங்கள் செய்து சென்றிருக்கும் நம்மூர் பெரியோர்களை பற்றியும் நமக்கான வாழ்விடம் தந்து சென்றவர்களையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் நன்று - முயற்சித்து!

தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாய் காவிரி டெல்டாவின் கடைமடையில் ஒரு நகரத்திற்குண்டான் அத்தனை அம்சங்களும் கொண்டது மயிலாடுதுறை!

மாயூரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின் மயிலாடுதுறை ஆனாலும் தேவார திருப்பதிகத்தில் திரு மயிலாடுதுறையாகவே குறிப்பிடப்பட்ட்டுள்ளது!

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஒரு சிறப்பு பெயர் எத்தனை எத்தனையோ ஊர்கள் இருந்தாலும் எத்தனைய் எத்தனையோ சிறப்புக்கள் வாய்த்திருந்தாலும் மாயூரம் தனிச்சிறப்பு மிக்க ஊர் என்ற பதத்தில் இவ்வரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.!

ஆற்றின் கரைகளில்தான் மயிலாடுதுறையின் மகத்துவம். காவிரி ஆறு செல்லும் பகுதியினை சுற்றி உருவாக்கப்பட்ட ஊர். நகரின் மையப்பகுதியில் காவிரி தவழ்ந்து செல்கிறாள் - கரை நிரையும் காலங்களில், ஊர் அழகு நிறையும் காட்சி!

மயிலாடுதுறை இரண்டு சிறிய ஊர்களும் அடக்கம்! திருவிழந்தூர் கூறைநாடு!

திருவிழந்தூர் வைணவ திருத்தலம் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும்!

கூறை நாடு 9 கஜம் கூறை புடவைக்கு பெயர் பெற்ற ஊராக, குடிசைத்தொழிலாக இன்றும் விளங்குகிறது!

கர்நாடக சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாக இருக்கிறது!

முதல் தமிழ் நாவல் எழுதிய பிரதாப முதலியார் வாழ்ந்த இடமாக வரலாற்றுச்செய்திகள் தெரிவிக்கின்றன.

சோழமண்டலத்தின் சிறப்புக்களை தம் பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் வெளிக்கொணர்ந்த திரு கல்கி அவர்கள் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி கற்றதும் மயிலாடுதுறையில்..!

கோயில் திருவிழாக்களுக்கு ஒரு போதும் குறைவில்லாதபடி ஊர் எங்கும் நிறைந்திருக்கும் சிவன் கோவில்களும், ஊரின் எல்லையில் அமைந்து சைவ சமய வளர்ச்சிக்கு பெரிதும் சேவைகளை மிக மெளனமாய் செய்து வரும் தருமை ஆதீனமடமும் கூட ஊரின் சிறப்பாய் பெருமை பொங்க உலகுக்கு சொல்ல முடியும்!

கடந்த பத்தாண்டுகளில் படு வேகமான வளர்ச்சி கண்டு பல புதிய கல்லூரிகள், பள்ளிகள் என்று நகரின் வேகம் எம்மை வியக்கவைத்துக்கொண்டே இருக்கிறது!



வேகமாய் முன்னேறிச்சென்றுக்கொண்டிருந்தாலும், அந்த வேகத்தில் சில சமயங்கள் சில விசயங்கள் மறைப்பட்டு போகும் அல்லது நம்மால் மறக்கப்பட்டு போகும் அது போன்று சில குறைகளாக இன்றும் கூட முழுமையாக பூர்த்தி அடையாத பேருந்து நிலைய விரிவாக்கமும்,ரயில் நிலைய விரிவாக்கப்பணிகளும் மக்களிடையே கொஞ்சம் சோர்வை தந்திருக்கின்றன. ஆண்டுகள் மாறி அரசியல் மாறினாலும் பிரச்சனைகள் தொடர்கின்றன - முடிவின்றி...!

எங்கள் ஊரின் பெருமைகளும் தொடரும் - முடிவின்றி...!

Thursday, December 11, 2008

விருது நகர் மாவட்டம் 01

பழைய விருதுபட்டி, இன்னைக்கு விருது நகர்ல ஆரம்பிச்சி வடக்க திருமங்கலம், தெற்க சாத்தூரு, கோயிலுபட்டி, கிழக்கால அருப்புக்கோட்டை, மேக்கால சீவில்லிபுத்தூரு, சிவாசி, ராசபாளயம்ன்னு இது தாங்க எங்க சாதி சனமெல்லாம் இருக்க பகுதி. இதுல திருச்சுழி, அபிராமம், கமுதி, முதுகொளத்தூரு, சாயல்குடி எல்லாம் வருமான்னு சொல்ல முடியாது.

நம்மூரு கரிசலு பூமிங்க. கந்தக பூமின்னும் சொல்லுவாக. எல்லாம் பெரும்பாலும் மானம் பாத்த பூமிங்க. காஞ்சு கெடுக்கிற மழ எங்கூரு பக்கம் பேஞ்சி கெடுக்கிறதுமுண்டு. விவசாயமுண்டு பாத்தீகன்னா பருத்தி, உளுந்து, சோளம், கம்பு. இடையிடையே கொஞ்சமா சும்மா ரொம்ப கொஞ்சமா நெல்லும் உண்டுங்க. பணப்பயிருக இருந்தாலும் நம்ம மக்க கிட்டயும், மண்ணுலயும் பெரும்பாலும் வறட்சிதான். எங்க பக்கம் பனங்கள்ளு, பதனி மற்றும் நொங்கு பேமஸ்.

விருது நகர் முழுக்க முழுக்க வியாபாரந்தேன். பால் சோறும், பக்கோடாவும் சாப்பிட்டு சாதுவாய் தெரிந்தாலும் வியாபார நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்த நாடார் மக்கள் நிறைந்த பகுதி. காமராசர் பிறந்த ஊரு. பர்மா கடை, அப்பறம் விருதுநகர் பொறிச்ச புரோட்டா.

சிவாசில தீப்பெட்டி ஆவீசுங்க ரொம்ப பேமசு. ஒரு காலத்துல அருப்புக்கோட்டை வரைக்கெல்லாம் பஸ் அனுப்பி தீப்பெட்டி ஆபீசுல வேலைக்கு ஆள் பிடிச்சிகிட்டு இருந்தாங்களாம். இப்ப காலம் மாறிப் போச்சு. அக்கம்பக்கத்துலேயே நிறைய ஆளுக வேலைக்கு கெடக்குது. குழந்தை தொழிலாளர் பத்தி பேசுற பயபுள்ளக எல்லாம் இங்கிட்டு பக்கம் வந்து பாத்தாதாம் தெரியும் நெச நெலம என்னன்னு. தீப்பெட்டி மட்டுமில்ல. காலண்டர்ல ஆரம்பிச்சு அமெரிக்கன் டாலர் வரைக்கும் அடிக்கிற அச்சாபீசுங்க சாஸ்தி இங்க.

சாத்தூரு பேனா நிப்புக்கு ஒரு காலத்துல பேமசு. இப்பமும் பேனா நிப்பு செய்யிறாகளாண்டு தெரியலே.

ராசபாளையம், கோயிலுபட்டி பக்கம் பருத்தி மில்லுங்க. சின்னிங் மில்லும்பாக. இங்கே தெலுகு பேசும் நாயக்கர், நாயுடு, ரெட்டியார்கள் அதிகம்.

சீவில்லி புத்தூரு பால்கோவா.

ரமண மகரிஷி அவதரித்தது திருச்சுழி.

அருப்புக்கோட்டை ரெண்டு தனியார் பள்ளிக்கூடங்க, ரெண்டு தனியாரு காலேசு, ரொம்ப காலமா இருக்க ஒரு பாலி டெக்னிக், அப்பறமா செயவிலாசு மில்லு. இம்புட்டுத்தேன். முக்கிய விசயம் அருப்புக்கோட்டை தண்ணிப் பஞ்சம். கோடை வந்தா கு... கழுவ கூட தண்ணி கெடக்காதது ஒரு காலம். இப்பம் கொஞ்சம் தேவல. வியாபாரிகளாக நாடார்களும், சவுராஷ்டிரா பேசும் செட்டியார்களும் போட்டி போடும் பகுதி இது. இங்கும் கொஞ்சம் உடைந்த தெலுகு மாட்லாடும் சனங்களும் கலவை இங்கே.

அபிராமம், கமுதி, முதுகொளத்தூரு இங்கன இருக்க மக்கமாரு எல்லாஞ் சேந்துதேன் திருநவேலிகாரவுகளோட சேந்து திருப்பாச்சில அருவா போடுற தொழில இன்னும் வாழ வச்சிகிட்டு இருக்காங்க. ஐயா முத்துராமலிங்கத் தேவர் பொறந்த பசும்பொன் இங்கிட்டுத்தான். நிறைய தேவர்கள் இங்கே.

திரைப்படங்களில் வெயில், மற்றும் புதுப்படமான பூ இரண்டும் எங்க பக்கத்து கதைகள கொஞ்சம் மண் வாசனையோட சொன்ன படங்கள். இன்னும் நான் பூ பார்க்கல. கேள்வி ஞானம் தான். அதனால நல்லா இல்லேனா என்னை அடிக்க வராதீங்க.

இது தாம் பொத்தாம் பொதுவா எங்க ஏரியா. இங்கிட்டெல்லாமே புரோட்டா, சால்னா பிரசித்தி. நல்ல நாளுன்னா, தீபாளி, பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேசம். தீமிதி ரொம்ப விசேசம். இப்ப முக்குக்கு முக்கு இன்ஜினியரிங் காலேசுக இருந்தாலும் அப்போலேர்ந்து பேமசு இவை தான்.

1) இன்ஜினியரிங் பள்ளிக்கோடம் சிவாசி மெப்கோ.
2) கோயிலுபட்டி நாலாட்டின் புத்தூர் நேசனல் இன்ஜினியரிங் காலேஜ்.
3) கிருஷ்ணன் கோயில் கலசலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ்.


இன்னும் மண் வாசனையோட விவரமா தெரிஞ்சுக்க ஐயா கி.ராசநாராயணனோட கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள் படிங்க. இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவு இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி.

Tuesday, December 9, 2008

கொங்கு நாடு அறிமுகம் - 2

வணக்கம்! அண்ணன் மகேசு அவிங்க கொங்கு நாட்டைப் பத்தி எழுதினதின் தொடர்ச்சியா நாம இப்ப. பாருங்க, கொங்கு நாடு அப்பிடின்னா, வடக்க கொள்ளேகால்ல இருந்து, அந்த மேற்குத் தொடர்ச்சிய மலையத் தொட்டாப்புல பன்னாரி, சத்தியமங்கலம், மேட்டுப் பாளையம், ஊட்டி, குருடிமலை, மருதமலை, நரசிபுரம், வாளையார், வெள்ளியங்கிரி மலை, பாலக்காட்டுக் கணவாய் முகப்பு, கோட்டூர், சமத்தூர், ஆனைமலை, வால்பாறை, காடம்பாறை, ஆழியாறு, எரிசனம்பட்டி, திருமூர்த்தி மலை, அமராவதி, சின்னாறு, மூணாறு எல்லை, பழனி மலை, அங்கிருந்து சாஞ்சாப்புல ஒட்டஞ்சத்திரம், சத்திரப்பட்டி, கரூர், அங்கிருந்து அப்பிடியே சாஞ்சாப்புல மொடக்குறிச்சி, நத்தக்காடையூர், சேலத்தைத் தொட்டாப்புல வெளிப்புறமா, ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுப்புல வந்து, அப்பிடியே மாதேசுவரம் மேட்டைத் தொட்டுட்டு, எங்க ஆரம்பிச்சமோ அந்த எடத்துக்கு வந்தா, அதாங்க‌ குத்து மதிப்பா சொல்லுற, இனிப்பான கொங்கு நாடு!

இந்நேரம் நாம பாத்தது கங்கு(ஓரம்)களைத்தான். உள்ளுக்குள்ள சொல்லணும்னா, பழனி, மடத்துக்குளம், உடுமலை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, செட்டிபாளையம், காட்டம்பட்டி, சமுத்தூர், காளியாபுரம், தாராபுரம், மூலனூர், கோவிந்தாபுரம், பெதப்பம் பட்டி, குடிமங்கலம், பூளவாடி, நெகமம், வீதம்பட்டி வேலூர், செஞ்சேரி மலை, பெரியபட்டி, பொங்கலூர், சுலதான் பேட்டை, சூலூர், சிங்காநல்லூர், கேத்தனூர், பல்லடம், திருப்பூர், மொடக்குறிச்சி, சித்தோடு, ஈரோடு, குமாரபாளையம், நாமக்கல், நம்பியூர், சேவூர், திருச்செங்கோடு, பெருந்துறை, சென்னிமலை, சிவன்மலை, சங்ககிரி, காங்கயம், சோமனூர், சின்னியம் பாளையம், அரசூர், கருமத்தம்பட்டி சதுக்கம், கோபி, கொடிவேரி, மேட்டூர், பவானி, அன்னூர், பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூரு, பேருர், ஆலாந்துறை, பூண்டி, பன்னாரி இதெல்லாம் நொம்ப முக்கியமான ஊருக, ஆனா இன்னும் நிறைய இருக்கு. கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு மூணும் தனிப்பட்ட பெரிய ஊருக.

இப்ப நாம சொன்ன ஊருகளைப் பத்தி எழுதினா, எழுதிட்டே இருக்கலாம். அதுக்கு முன்னாடி, கணேசன் ஐயாவிங்க பக்கத்துல போயி, கவியரசு கண்ணதாசன் அவிங்க கோயம்பத்தூரைப் பத்தி வெகு அழகாப் பாட்டுலயே வெவரஞ் சொல்லி இருக்காங்க. அதைப் பாத்திட்டு வாங்க. நாம அடுத்த பதிவுல, ஊர் ஊராப் போயி, அருமை பெருமைகளத் தெரிஞ்சுக்கலாம்.


கோயம்புத்தூர்!

இன்னும் விபரமா, தகவல்களை ந்ம்ம மூத்த பதிவர்கள் ஏற்கனவே பதிஞ்சு வெச்சிருக்காங்க. அதையும் ஒரு எட்டு, போயி பாருங்க. மேலதிகத் தகவல்கள்!

Monday, December 8, 2008

தஞ்சாவூரா, கொங்கா,நெல்லையா முதல் சுற்று. ஜோடி நம்பர் 1 பாணி விமர்சனம்.

வருங்கால முதல்வர் வலைத்தளத்தில் ஊர்களைப்பத்தி மொக்கையா அறிமுகப்படுத்துற எண்ணத்துல ஆரம்பிச்ச இந்த ஊர் அறிமுகம், மொக்கையாக இல்லாமல் தரமான பதிவா வாசகர்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சது தெரிஞ்சு முதல் சுற்றில் மூண்று மாவட்டங்களின் அறிமுகப்படலம் ஆரம்பம் ஆகியிருக்கு.வாசகர்கள் அவரவர் பாணியில் விமர்சனம் பண்ணியிருக்காங்க.

இப்போ இதுவரைக்கும் இடப்பட்ட பதிவுகள் நம்ம ஜட்ஜஸ் 3 பேரும் விமர்சனம் பண்ணப்போறாங்க

தஞ்சை பற்றி.

பீவா: தஞ்சாவூர் போஸ்ட்ல பாத்தீங்கண்ணா குடுகுடுப்பை மொக்கையா ஸ்டாட்ட் பண்ணாரு, நாலு போஸ்ட் போட்டாரு ஆனா அது மொக்ஸ் ஆவும் இல்ல சக்கையாவும் இல்ல. மொத்தத்தில கொஞ்சம் நெறயாவே மிஸ்ஸிங்.

பங்கீதா: சோ i dont know what to say abt it, tanjore பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எல்லா ஊர் பத்தியும் விரிவா சொல்லனும் அடுத்த roundla சொல்லுங்க.

பயிஸ்வர்யா : tanjore பத்தி சொல்லிட்டு இன்னும் காவிரி பத்தி சொல்லவே இல்ல, somthing is missing yaar, ஒரு பெப்பியா இல்லன்னுதான் சொல்வேன்.

கொங்கு பற்றி:

பீவா:என் சொல்ரதுங், எனக்கு ஒன்னும் புரியலங்.. மகேசு கலக்கிட்டாருங்..ஒரே பதிவில நிறைய விசயம் சொல்லிட்டாரு, குறிப்பா அந்த உச்சா போறதுக்கு பத்து நிமிசம் டைமெல்லாம் உச்ச கட்ட காமெடிங்க.

பங்கீதா:எனக்கு ஒன்னுமே புரியலங்க, கொங்குத்தமிழ் இல்லாம கொங்கிலீஸ்ல சொல்லி இருந்தா நாங்களும் தங்கிலிசுல விமர்சனம் பண்ணிருபோம். ஆனாலும் its fantastic post னு தான் சொல்வேன்.

பயிஸ்வர்யா : கொங்குன்னா எனக்கு என்னனே தெரியாது, நான் ஏதோ நொங்குன்னு நெனச்சேன்.டீப்பா பாத்தப்புரம்தான் தெரிஞ்சது, business ,industries its a very good informative post. keep it up. அடுத்த ரவுண்டுக்காக நானும் வெயிட் பண்றேன்.தென் அந்த சிறுவாணி வாட்டர் இஸ் பைன், இட்ஸ் பெட்டர் தேன் எனி அதர் மினரல் வாட்டர்.

நெல்லை பற்றி:

பீவா: நசரேயன் நிறைய spelling mistakes ஓட ஆரம்பிச்சுருக்கிறதா கொத்ஸ் சொல்றார் அதெல்லாம் கொஞ்சம் புத்திய தீட்டி சரி பண்ணனும், அவரு பாட்டுக்கு அருவா அது இதுன்றார். அடுத்ததா நாங்கூட ஒரு south subject பண்ணனும் உங்க டைரக்சன்ல அதுனால சும்மா விடுகிறேன்.

பங்கீதா:திருநெல்வேலின்னாலே அல்வாதான் ஞாபகத்து வருது, நீங்க அருவாவையும் அல்வாவையும் மிக்ஸ் பண்ணி நல்ல டேஸ்டா இருந்துச்சு.i like the mix of roughness and the softness.

பயிஸ்வர்யா : தாமிரபரணி ஹரியோட படம்தானே அதுல water flow வே இல்லன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.movie la எப்படி water flow ஆகும். அதுல நதியா நடிச்சத பத்தி நீங்க சொல்லிருக்கலாம்.

வாசகர்களே அடுத்தடுத்து கொங்கு பற்றி பழமைபேசி, தஞ்சை கோவில்கள் திருவிழாக்கள் இன்ன பிற பற்றி ஜீவன் மயிலாடுதுறை,திருவாரூர் பற்றி சில பிரபலஙகள் விரைவில், நெல்லையை பற்றி நசரேயனும் தொடர்வார்க்ள். சில வாரங்களுக்கு பிறகு பிற மாவட்டங்கள் பற்றிய பதிவுகள் தொடரும்.

புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...

அன்புடன் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

(இது ஒரு விளம்பரம்)

Friday, December 5, 2008

நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 1

பொறுப்பு அறிவித்தல் :ஒரு முன்னுரையாக நினைத்து கொண்டு,கொஞ்சம் சுய விளம்பரம் அதிகம் இருந்தாலும் பொறுத்து கொண்டு உங்களுடைய மேலான கருத்துகளை பின்னூடத்திலே தெரிவிக்கவும்

நெல்லை மாவட்ட மக்களை பத்தி எழுதனுமுன்னு வருங்கால முதல்வர் ஒரு கோரிக்கை வச்சாரு, முதல்வர் சொன்னதை மறுக்க முடியலையே தவிர என்ன எழுதன்னு தெரியலை.

அருவாள் தயாரிப்புக்கு திருப்பாச்சி சொந்தமானாலும், அதை எப்படி பயன் படுத்துறதுன்னு திருநெல்வேலி மக்களுக்கு தான் நல்லா தெரியுன்னு சொல்லுவாங்க(?), ஒரு பொருளை எப்படி பயன்படுத்தன்னுமுன்னு ரெம்ப நல்லா தெரியும், அதனாலே என்னவோ தென் இந்தியாவிலே அதிக கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரமாக நெல்லை திகழ்கிறது(தகவல் தப்பா இருந்தா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்).


மங்களூர் கணேஷ் பீடி, சொக்கலால் பீடி சேட்டு இன்னைக்கு பணத்தை எண்ண முடியாம கட்டிலுக்கு அடியிலே வச்சி படுத்து தூங்குவதுக்கு எங்க மாவட்ட தாய்குலங்கள் தான் காரணம், இங்க உள்ள பிரசித்தி பெற்ற தொழில்களில் ஒன்று பீடி சுத்துவது, தாய் குலங்கள் மட்டுமல்ல, சில வீடுகளில் தந்தை குலங்களும் பீடி சுத்துவாங்க, எனக்கே பீடி இலையை எப்படி வெட்டுவது, சுத்துவது எல்லாம் தெரியும், இவ்வளவும் சொன்ன நான் அதை குடிக்கவும் தெரியுமுன்னு சொல்லிகிறேன், அன்புமணி ஐயா பார்க்க மாட்டாரு என்கிற தைரியத்திலே சொல்லிபுட்டேன், சீக்கிரமா நம்ம புதுகை.அப்துல்லா அண்ணன் மாதிரி விட்டுடனும்.


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு அடுத்தபடியா சங்கம் வைத்து சாதி வளர்க்கிற மாவட்டம், தெருவுக்கு குறஞ்சது நாலு சாதி சங்கம்மாவது இருக்கும் அவ்வளவு பெரிய ஆளுங்க நாங்க,உண்மையை சொல்லி புட்டேன்ன்னு ஊரு நாட்டாமைகள் எல்லாம் அருவாளை தூக்கி போட்டு கிட்டு வரவேண்டாம் என வருங்கால முதல்வர் சொல்லுறாரு.


பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கிறார்கள், தஞ்சை மாதிரி எங்க ஊரு எல்லாம் நெற்களஞ்சியம் இல்லை,அதற்க்காக நெல் விளையாமலும் இல்லை.குடும்பமாக விவசாயம் செய்யும் பங்காளிகள் பிரச்சனைன்னு வந்தா ஒரு பிடி மண்ணை ௬ட யாருக்கும் விட்டு தரமாட்டாங்க, அவ்வளவு பாசக்காரங்க, தாமிர பரணி நதி ஓடுதுன்னு சின்ன வயசுலே இருந்து படிச்சு இருக்கேன், அதிலே தண்ணி வந்தா அதையே அதிசயமா எல்லாரும் போய் பார்ப்பாங்க.

அல்வாக்கு பேரு போனது நெல்லை,கடை பேரு தான் இருட்டு கடை, அந்த கடைக்கு எப்போதுமே இருட்டே கிடையாது.திரைப் படங்களிலே அல்வாவிற்கு பல அர்த்தங்கள் சொல்லி ரெம்ப பிரபல படித்தினது சத்தியராஜ்(பதிவர் கிடையாது)

மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு, அந்த மலைகளின் நடுவே ஏழைகளின் கொடைக்கானல்(?) ஆகிய குற்றாலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம், நிறைய திரைப் படப் பாடல்கள் தென்காசி சாரல் பத்தி வந்து இருக்கு, ஒரு கொசுறு தகவல் எங்க ஊரு குற்றாலத்திற்கு 25 கிலே மீட்டர் தொலைவில் உள்ளது.


மக்களின் வாழ்க்கை முறை, வணிகம், தொழில்,கல்வி ௬டங்கள்,பல்கலை கழகங்கள் எல்லாம் அடுத்த பாகத்திலே பார்க்கலாம்

Thursday, December 4, 2008

கொங்கு நாடு - ஒரு அறிமுகம்

கும்புட்டுகிறனுங்... நானுங் கதிர்வேலுங்... ஆத்தா அய்யன் பங்காளிக்கெல்லாம் நான் கதிருங். நம்ம சாமக்கோடங்கி தஞ்சாவூரு பத்தி நெம்பவே சொல்லீட்டாரு. செரி நாமுளும் கொங்கு பத்தி சொல்லோணுமல்லோ.. அப்டீண்டுங்... என்றா எளுதறதுன்னு ஓசிச்சனுங். கெரகம்.. படிக்கறப்பயே ஒண்ணும் எளுதாதலதே உப்ப ஜின்னிங் மில்லுல பஞ்சு அடிச்சுட்ருக்கேன். ஆனா கோயம்புத்தூரு, பொள்ளாச்சி, கெணத்துக்கடவு, உடலப்பேட்டைன்னு நாலு எடஞ் சுத்துனதுல எதோ நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லி வெப்பமுண்டுங் இத எளுதறனுங்... எதாச்சி தப்பா இருந்தாக் கோட நம்ம வாத்தியாரு மணியண்ணன் திருத்திருவாருங்.

நான்ருக்கறதுங் ஜமீன் காளியாபொரமுங். பொள்ளாச்சிக்கு தெக்காலைன்னு வெச்சுக்கங்ளேன். படிச்சதெல்லாம் பூலாங்கெணத்துலயுமு பொள்ளாச்சிலயுமு. பூலாங்கெணத்துல படிக்கைல நாராயணசாமி நாயுடு நகர்ல அப்பத்தா ஊட்லதே இருந்தனுங். நெதமு பிரிமியர் மில்ல தாண்டித்தான் போவமுங்.அப்பத்தான் படிச்சேன் கோயமுத்தூருமு சுத்து வட்டாரமு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்"னு. (இந்தப் பேரு நம்ம வாய்ல நொளஞ்சு ஒளுங்கா வெளிய வர மாசம் மூணாச்சு.)

அது என்ன கணக்குன்னா மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பக்கத்தாப்டியேங்கறதால காத்துல கசகசன்னு எப்பவும் நல்ல ஈரப்பதம் இருக்குதாமா. பஞ்சு நல்லா திரிஞ்சு வாரதுக்கு எதமா. அதுனாலாயே இங்கிட்டு நூல் மில்லுக எக்கச்சக்கம். பின்னி மில்லு, லெச்சுமி மில்லு, சோமசுந்தரா மில்லு, ராதாகிஸ்ணா மில்லு, பிரிமியர் மில்லு, வெங்கடேசா மில்லு, விசியகுமார் மில்லு, திருமூர்த்தி மில்லு, கொங்குரார் மில்லுன்னு பல மில்லுக. கோடவே சிறுசும் பெருசுமா பல ஜின்னிங் பேக்டரிக, வீவிங் மில்லுக, ஸ்பின்னிங் மில்லுக. பளய மிசினுகள ஏலத்துல தூய்ட்டு வந்து, 300 ஸ்பிண்டல்க இருந்தாக்கோட போதும். போர்டுக்கு சந்தனங் குங்குமந் தெளிச்சு மாலையப் போட்டு ஸ்பின்னிங் மில்லு ஆரம்பிச்சர்லாம். சும்மா 3sலேந்து 20s வரைக்கி ஓட்டுனாக் கோட லாபந்தேன். அதென்ன 3 20 ன்னு கேப்பீங்க. சுருக்கமா சொல்லோணும்னா சின்ன நெம்பர்னா நூல் கொஞ்சம் வண்ணமா இருக்கும்... 3 எல்லாம் ஜமுக்காளம், பெச்சீட்டுகளுக்கு.. பெரிய நெம்பர்னா நூல் நயமா சன்னமா வேட்டி சட்டைகளுக்கு. ஜின்னிங் பேக்டரிக பஞ்சை நல்லா அடிச்சு பதமா தாரது. வீவிங்கு உங்குளுக்கே தெரியும்.

இதொரு பக்கம். இன்னோரு பக்கம், கோயம்புத்தூரு பூரா பவுண்டரிக. இரும்பு வேலை அம்புட்டும். எல்லெம்டபிள்யூ, எல்ஜி இவுங்கள்லாம் பெரிய ஆளுங்க. பொள்ளாச்சிலிருந்து கோயமுத்தூர் போற வளியெல்லாம் மில்லுக, பேக்டரிக. ரேடியேட்டரு, பாய்லரு, பஞ்சு மில்லு மிசின்க, பேப்ரிகேசன் கம்பெனிகன்னு கொத்துக் கொத்தா இருக்கும். இஞ்சினீரிங் கம்பெனிகளுக்கு கொறச்சலே இல்ல. கொங்கு நாட்டு டாடா அய்யா மகாலிங்கத்தோட ஏ பி டி யும், ஆனமலை இஞ்சினீரிங்கும், சக்கரை மில்லுகளும் கொங்கு செஞ்ச புண்ணியம். பி எஸ் ஜி, எல்ஜி, லெச்சுமி குரூப்பு, பிரிமியர் குரூப்பு, ஸ்டேன்சு எல்லாம் தொழில் துறைக்கு ராசபாட்டை போட்டுக் குடுத்த புண்ணியவானுக. அங்கிட்டு மேட்டுப்பாளையத்துல விஸ்கோசு மில்லு. உடுமலப்பேட்டைக்கு பக்கத்தால பள்னி போற வளீல, அமராவதி ஆத்தைச் சுத்தி மட்டும் 7 பேப்பர் மில்லுக, ஒரு சக்கரை மில்லு, ஒரு மாட்டுத்தீவன மில்லு. மதுக்கரை சிமிட்டிக் கம்பெனிய நம்பியே ஒரு 100 குட்டிக் கம்பெனிக. இம்புட்டு இருக்கறதால மக்களுக்கு வேலைக்குப் பஞ்சம் இல்ல.

படிப்புக்கு பாலிடெக்னிக்குக என்ன, ஆட்ஸ் காலேசுக என்ன, இஞ்சினீரிங் காலேசுக என்ன. படிப்புமுங் செரி, தொழிலுமுஞ் செரி, கொங்குக்கு மும்மூர்த்திக உடுமலை ஜி வி ஜி குரூப்பு கெங்குசாமி நாயுடு அய்யா, பொள்ளாச்சி ஏ பி டி குரூப்பு அருட்செல்வர் மகாலிங்கம் அய்யா, கோவைக்கு பி எஸ் ஜி குரூப்பு கோவிந்தசாமி நாயுடு அய்யா. இவிக மூணு பேருமு இல்லீன்னா கொங்கு நாடு எப்பிடி இருக்கும்னு நெனச்சுக் கோடப் பாக்கமுடீல. அமராவதி சைனிக் ஸ்கூலுமு, திருமுர்த்தி நகர் டீச்சர் ட்ரைனிங் ஸ்கூலுமு நெம்ப பேமஸ். பெருசா இல்லாட்டியும் ஒரு ஐ டி ஐ யாச்சும் முடிச்சுப் போட்டு பிட்டராவோ, லேத் மிசின் ஓட்றதுக்கோ போயரலாம். சிப்டு முடிஞ்சு வாரைல அல்லார் தலைலயுமு பஞ்சு ஒட்டீட்ருக்கும். பஞ்சு மில்லுகள்ல ஆம்பளைகள விட பொம்பளையாளுகதான் அதிகம். ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும், தொழில்ல நெம்பவே ஊக்கமான ஆளுக. (பொறுமையா வேலை பாப்பாகல்ல. ஆம்பளையாளுக பீடி குடிக்கறேன், ஒண்ணுக்குப் போறேன்னே ஓப்பியடிச்சுருவாங்க. அதுக்குன்னே பஞ்சு மில்லுகள்லயெல்லாம் கக்கூஸுக்குப் போறதுக்கு சூப்ரைசர் கட்ட டோக்கன் வாங்கீட்டுதான் போகோணும். 10 நிமுசந்தேன். இல்லாட்டி இவிகளையெல்லாம் மேக்க முடியதல்ல. )

வெவசாயம்னு பாத்தம்னா புஞ்சைன்னு அதிகம் கெடயாது. மாரியம்மன் புண்ணியத்துல மளை வருது. கொளங்குட்டைக நெம்புது. பி ஏ பி வாக்யாலு, திருமூர்த்தி டேமு, அமராவதி டேமு, ஆளியாறு டேமுன்னு தண்ணி சேத்தி வெச்சுக்க நல்ல வசதி. நெல்லு, பருத்தி, கரும்பு, போயல, சூரியகாந்தி, ராகி, தட்டு, சோளம், உளுந்துன்னு எல்லாம். முருங்கை, அவரை, தொவரைன்னு அப்பப்ப. தக்காளி, வெங்காயம் சீப்படும்.

தென்னந்தோப்புக ஒரு பெரிய தொழில். அக்ரி காலேஜுமு, தென்னை மேம்பாட்டு ஆராச்சி ஆபீசுகளும் போட்டி போட்டுக்கிட்டு மூணு வருசம், ரெண்டு வருசம், குட்டை, நெட்டை, ஐப்பிரிட்டுன்னு ஏகத்துக்குமு தென்ன ரகங்க கண்டு புடிச்சதுல தோப்புக்காரவிகளுக்கு நல்ல லாபம். கோடவே மட்ட, நாருன்னு எச்சுக் காசு. தேங்கா நாருல இருந்து கவுறு, மெத்தன்னு அது ஒரு தனி தொழில்.

ம்ம்ம்ம்... எல்லாம் ஒரு மூச்சு படிச்சு முடிச்சுட்டீங்களா... இப்ப தரைக்கு எறங்கி வருவமா? இந்த கோயம்புத்தூர்ல குண்டு வெடிப்பு நடந்துச்சு பாருங்க.... அதுக்கும் பொறவு எல்லாம் மாறிப்போச்சுங்க. ஆருதேன் அப்பிடி எங்கூரு மேல கண்ணு வெச்சாங்களோ... தொழில் துறையே நசுங்கிப் போயி... என்னத்தன்னு சொல்றது போங்க? பெரிய கம்பெனிகள்லாம் எப்பிடியோ தாக்குப் புடிச்சுக்கிடாக... சின்னவங்க பாடுதேன் திண்டாட்டமாப் போச்சு. நானெல்லாம் டிப்ளமாப் படிச்சுப் போட்டு பஞ்சு மில்லு மிசின் எரக்சன்லயே நல்ல வருமானம் பாத்தேன். பொறவு பஸ் பாடி, ட்ரைலரு, கதிர் அடிக்கற மிசினு, க்ரஸ்ஸரு, கட்டல் பீரோன்னு பாக்காத தொழிலில்ல. இப்ப நான் பொளைக்கிற பொளப்பு பாத்தீகல்ல. இப்ப என்ரான்னா தோப்புல தென்ன மரங்களுக்குமுங் கோட என்னமோ செலந்தி நோயாமா...அந்தக் கெரகம் வந்து மரங்க மொட்ட மொட்டயா நிக்கிறதப் பாத்தா எங்கிட்டாச்சி கண்ணு காணாத எடத்துக்கு ஓட்ட்றலாமாட்ட இருக்கு. செரி எடந்தாங் கெடக்குதே, வெவசாயந்தேஞ் செய்ய முடீல, காத்தாலை போட்டா கரண்டு வித்து சம்பாரிக்கலாம்னா, ஈ பீ காரவிக கிட்டருந்து கைக்கு காசு வாரதுக்குள்ள இதுவும் ஒரு பொளப்பான்னு ஆயிருது.

இந்தக் கூத்தைக் கேளுங்க. பொள்ளாச்சில்ருந்து வால்பாறை போற வழில, காடம்பாறைல ஒரு நீர் மின் திட்டம் போட்டு, செர்மனில்ருந்து ஆளுக வந்து மலைய 3 கிலோமீட்ரு கொடஞ்சு, உள்ளார செனரேட்டரு, டர்பைனெல்லாம் வெச்சு கரண்ட் எடுக்கலாம்னாக. அதுமு எப்பிடி? மலை மேல ஒரு கொளமாட்ட இருக்குது. அங்கிருந்துதேன் ஆளியாறு டேமுக்கு தண்ணி போகுது. அந்தத் தண்ணிய பைப் போட்டு கீள கொண்டாந்து டர்பைன ஒட்றதாமா. கெடைக்கிற கரண்டுல பகல்ல கொஞ்சம் மிச்சம் பண்ணி மறுக்கா மோட்டர் போட்டு டேமுலேந்து தண்ணிய மேல ஏத்தறதாமா. நாலே நாலு எளுத்து படிச்ச எனக்கெ இதெல்லாம் வேலைக்காகுமா, நட்டமாகாதான்னு தோணும்போது, நாப்பது எளுத்து படிச்ச மகராசனுக கொஞ்ச நாள் ஒட்டிப் பாத்துப்போட்டு, செலவு நெம்ப புடிக்குதுன்னு திட்டத்தை கெடப்புல போட்டுட்டாங்க.

என்னமோ போங்க, இப்ப இது பளய கொங்கு மாதரயே இல்ல. என்னமோ வண்டி ஓடுது. உனி இது மறுக்கா பளய மாதர வருமான்னுந் தெரீல. கோயமுத்தூர் பரவால்ல. இப்ப கே எம் சி எச், தமிழ்நாடு, அரவிந்த் கண்ணாஸ்பத்திரின்னு ஆஸ்பத்திரிக நல்லா போகுது. என்ன செய்யிறது... வெசாதி பெருகிப் போச்சு பாருங்க... ஒண்ணுஞ் சொல்றாப்டி இல்லீங். என்னமோ உலகத்துல அங்கங்க பேங்குக திவாலாகிக்கிட்டே வருதுன்னெலாம் பேப்பர்ல படிக்கிறோம். தொழிலெல்லாம் இன்னுமு மந்தமாகும்கிறாங்க. ஆனா ஒண்ணுங்க... நாங்கள்லாம் தொழில் வெறி புடிச்ச ஆளுங்க. எதயாச்சும் தட்டிக் கொட்டி தலகீளாத் தண்ணி குடிச்சாச்சும் மேல வந்துருவோமுங். அது நம்ம ரெத்தத்துலயே இருக்குதுங். பாத்துக்கிட்டே இருங்க.

சும்மா உங்க கிட்ட எங்கூரப் பத்தி சொல்லோணும்னு தோணுச்சுங். இன்னும் நெறய வெவரமாச் சொல்லோணும்னு ஆசைதேன். இன்னோரு நா சொல்றேன். அதுக்குள்ள நம்ம மணியண்ணன் - அதேன் பழமைபேசி - எதாச்சி அதிகத் தகவல்களோட வந்தாலுமு வருவாரு. இம்புட்டு நேரம் நாஞ் சொல்றதைக் கேட்டுக்கிடுருந்ததுக்கு நன்றிங். வேலை கெடக்குதுங்.நெம்ப நேரமானா அப்பறம் அம்மினி கட்ட பேச்சுக் கேக்கோனுங். வரட்டுங்ளா?

தஞ்சை மாவட்டம் அறிமுகம் தமிழும் தஞ்சையும் ---பாகம் 4

தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தமிழை வளர்ப்பதில் முன்னோடியாக இருந்தது தமிழர்களுக்கு புது செய்தியல்ல.

சில பிரபலமான தமிழறிஞர் பெயர்கள் .

தமிழறிஞர் மறைமலை அடிகள்
தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர்.
தமிழறிஞர் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார்.
தமிழறிஞர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்.(இவரது கொள்ளுப்பேரன் என்னோடு படித்தவர்)
வாழும் தமிழறிஞர் தமிழக முதல்வர் கலைஞர்.

விடுபட்டவர்கள் நிறைய ------

போன்ற தமிழுக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள் வாழ்ந்த தஞ்சாவூர்க்காரர்கள் இன்னும் தங்களது தமிழ் உணர்வை இழக்கவில்லை என்பதை பாவேந்தன் பாரதிதாசன் ஆங்கிலப்பள்ளி, மழலையர் ஆங்கிலப்பள்ளி என்றெல்லாம் தமிழே சொல்லிக்கொடுக்காத பள்ளிக்கு கூட தமிழில் பெயர் வைத்து தங்கள் தமிழ்ப்பற்றை காட்டுவதில் வல்லவர்கள்.என் மகளுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமைப்படுவதில் எவருக்கும் சலைத்தவர் அல்லர்.

தஞ்சை பற்றி எழுத நிறைய ஆசை நேரமின்மையால் முடியவில்லை. மேலும் நான் ஒன்றும் புதிதாக எழுதப்போவதில்லை, மொக்கையாக ஆரம்பித்து வேறு வடிவில் வந்து நிற்கிறது.அடுத்த பகுதி நண்பர் ஜீவன் அவர்களை எழுத கேட்டிருக்கிறேன் விரைவில் அவரின் பதிவு.

தொடரும் .....


தொடுப்புகள்

தமிழ் பலகலைக்கழகம்/சங்கம்

http://karanthaitamilsangam.com/
http://www.tamiluniversity.ac.in/

உ.வே.சா
http://bsubra.wordpress.com/2007/01/29/tamil-vu-internet-university-digital-library-via-ponvizhi-ocr/
http://rajappa-musings.blogspot.com/2005/03/u-ve-swaminatha-iyer-tribute.html
http://ta.wikipedia.org/wiki/உ._வே._சாமிநாதையர்

மறைமலை அடிகள்
http://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்

பொது
http://thamizthoughts.blogspot.com/2008/10/blog-post_12.html
http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://www.arusuvai.com/samayal/thanjai.html

Wednesday, December 3, 2008

தஞ்சை மாவட்ட மக்கள் நகைச்சுவையான அறிமுகம் - உணவு- பாகம் 3

பாகம் 1
பாகம் 2
சமூக சீர்திருத்ததில் தஞ்சையின் பங்குக்கு முன்னால், இன்னும் உணவு, வாழ்க்கை முறை, கல்வி, தமிழ் அறிஞர்கள் பற்றி எழுதுகிறேன்.பதிவு ஒரு சீரான நேர்கோட்டில் செல்லாமல் மாறி மாறி செல்கிறது மன்னிக்கவும்.ஒருங்கினைந்த தஞ்சைப்பகுதியின் வரலாறு நான் எழுத நினைக்கவில்லை அதற்கான அறிவும் இல்லை,இவர்களின் பொதுவான பழக்க வழக்கங்களை நகைச்சுவையாக அனுகுவதே என் நோக்கமே.

மீன் உணவு ஒரு பிரதான உணவு, கடலோர தஞ்சையினர் பெரும்பாலும் கடல் மீன்களை விரும்பி சாப்பிடுவர்.குறிப்பாக நாகைக்கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் கோலா மீன் அநேகரின் விருப்ப மீனாக இருக்கும்.இதன் தலையை உண்ண மாட்டார்கள், சில வீடுகளில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள் ஏதோ விஷம் உள்ளது சாப்பிடும் கோழி கூட இறந்துவிடும் என்று, எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை.இந்த கோலா மீன் தமிழகத்தின் வேறு பகுதிகளில் உண்டா எனத்தெரியவில்லை.

இந்த மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தும் நாகை மீனவர்கள், இயற்கை மற்றும் இலங்கையின் சீற்றங்களைத் தாண்டிதான் உயிர் வாழ வேண்டிய கட்டாயம்.இவர்கள் வாழ்வில் ஒருநாள் ஒளி பிறக்கும் என நம்புவோம்.

தஞ்சை நகர்ப்பகுதி ஒட்டியுள்ளவர்கள ஆத்து மீன்,மற்றும் ஏரி மீன் விரும்பிகள் குறிப்பாக விரா மீன்,சேற்று நாத்தம் அடித்தாலும் ஏரிக்கெழுத்தி,ஆறா,குறவை போன்ற மீன்களும் விருப்பமான மீன் உணவு.வளர்ப்பு கெண்டை மீன்கள் மலிவான ஒரு மாற்று மீன். இவர்கள் பெரும்பாலும் கடல் மீன் உண்ணமாட்டார்கள், குறிப்பாக அண்ணன் ஜோசப் பால்ராஜ் கல்லணை மீன் சாப்பிடுவார் ஏன் கருவக்காய் கூட சாப்பிடுவார்,ஆனால் கடல் மீன் உண்ணமாட்டார்(உண்மையா?).கோலா மீன் தஞ்சையை அடையும்போது கோழா மீனாகிவிடும்....இரண்டு வகை மீனையும் வகை தொகை தெரியாமல் சாப்பிடும் என்னைப்போன்ற ஏகாம்பரமும் உண்டு.

பின்னூட்டத்தில் நண்பர்கள் சொன்னது போல் கும்பகோணம் டிகிரி காப்பியின் சுவையே அலாதிதான், தஞ்சையில் நான் படிக்கும் போது வெங்கடா லாட்ஜ்ல் ஒரு காப்பி குடித்துவிட்டு, அதே கடையில் உடனடியாக குடிக்க வெட்கப்பட்டு பக்கத்தில் உள்ள காபி பேலஸில் அடுத்த காப்பி குடிப்பதற்கு அதன் சுவையே காரணம். ரயிலில் வரும்போது கும்பகோணம் அருகில் உள்ள ஊரில்(பேரளம்) ஒரு வடை விற்பார்கள் அருமை.

திருநெல்வேலி அல்வா அளவு புகழ் பெறாவிட்டாலும், திருவையாறு அசோகாவின் சுவை தனித்துவம் வாய்ந்தது, தஞ்சைக்கு வெளியில் இந்த இனிப்பு வகை வேறு எங்கும் உள்ளதா என தெரியவில்லை,இதன் முக்கியமான மூலப்பொருள் பச்சைப்பயறு அது மட்டும் தெரியும் பின்னூட்டம் மூலம் ஒருவெளை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.


அசோகா செய்ய

சுட்டிக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

மிகப்பெரிய ஊண் உண்ணியான எனக்கு தஞ்சையின் தனித்துவமான சைவ சாப்பாடு பற்றிய அறிவு எதுவும் இல்லாததால் பின்னூட்டத்தில் வரும் தகவல்கள் வெட்டி ஒட்டப்படும்.நாகை,திருவாரூர்,கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை சிறப்பு உணவு இருக்கலாம் தெரியவில்லை.

காஞ்சி,சின்னாளப்பட்டு மாதிரி இங்கேயும் திருபுவணம் பட்டு சேலைத்தறிகள்,கும்பகோணம் பகுதியில் உண்டு,அதற்கு மேல் எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. பின்னூட்டத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.விவசாயம்,சீவல் தாண்டிய தொழிலாகையால் இதனை செய்பவர்கள் சவுராஷிட்டிரா இனத்தை சார்ந்தவர்களே பெரும்பாண்மையினர்.

தொழில் வளர்ச்சி குறைவான பகுதி ஆதாலால், ஒருமுறை மயிலை எம்.பியான மணிசங்கர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தபோது, எப்படி மணல் அடிச்சு ஒட்டகத்த கொண்டு வந்து விடப்போறாரன்னு சொன்ன கும்பகோணம் குசும்பர்களும் உண்டு...

தொடரும்...

Tuesday, December 2, 2008

தஞ்சை மாவட்டம் மற்றும் மக்கள் ஒரு மொக்கை அறிமுகம் - பாகம் 2

ஒரு வேண்டுகோள் என்னால் தஞ்சை பற்றிய முழு செய்தியையும் கொண்டுவரமுடியாது, இக்குழுமத்தில் விரும்பினால் தற்காலிகமாக இனைந்து எழுதவேண்டுகிறேன்.
"நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா" பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தன் வயலுக்கு தண்ணீர் விடாத பணக்கார விவசாயியை நினைத்துக்கொண்டு அடுத்த நாள் வயலில் பார்த்த போது வயல் நிரம்பி இருந்தது, காரணம் ஒரு நண்டு வரப்பில் இட்ட ஓட்டையில் மேலே உள்ள பணக்காரர் வயலில் இருந்து தண்ணீர் கவிஞர் வீட்டு வயலில் பாய்ந்தது அப்போது பாடியதாக சொல்லும் பாட்டுதான் "நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா"

மேறகண்ட பாடலை போலியாக உண்மையாக்க மண்வெட்டியின் நீண்ட கைப்பிடியை வைத்து அடுத்தவர் வரப்பில் நண்டு போல் ஓட்டை போட்டு தன் வயலுக்கு திருட்டு தண்ணி பாய்ச்சும் உத்திராபதிகளும் இங்குண்டு, அதிலும் அந்த உத்திராபதி ஓட்டையை போட்டுவிட்டு அந்த வயல்காரர் வயலுக்கு சென்று விடாமல் வீட்டில் வந்து பேச்சும் கொடுத்துக்கொண்டிருப்பார்.

ராகவன் போன பதிவின் பின்னூட்டத்தின் சொன்னது போல் தஞ்சை மண்வெட்டியின் பாகம் இலேசாக இருக்கும்,ஏனெனில் இதன் பயன் வரப்பு வெட்டுவதற்கும், மடை கட்டுவதுமே ஆகும். பெரும்பாலும் மணல் சார்ந்த வயல்களே, பாறைகள் கிடையாது, (ஒருங்கினைந்த தஞ்சையில் மலையே கிடையாது ஆனால் மலைகளால் கட்டப்பட்ட பெரிய கோவில் உண்டு.)

கலை/தமிழ் வளர்ப்பிலும் இவர்கள் ஆர்வம் காட்டியவர்களே என்றால் அது நக்கல் இல்லை. ராசராசன் காலத்தில் இருந்தே சிவ வழிபாட்டுத்தளங்கள் அதை சார்ந்த கோவில்கள் உருவாக்கி சைவத்தமிழ் வளர்த்திருக்கின்றனர்.அரசர்கள் முதல் விவசாயிகள் வரை வெத்திலை மென்று கலை வளர்க்க பொருள் உதவி செய்துள்ளனர்.

திருவையாரு தியாகராஜ கீர்த்தனை இந்த ஊரின் கலையார்வத்தின் ஒரு சான்று மறைந்த மூப்பனார் அவர்கள் பான்பராக் போட்டுக்கோண்டே இதன் கமிட்டி தலைவராக இருந்தார், இப்போ வாசன் வெத்திலை போட்டபடி தலைவரா இருக்கார்னு நெனக்கிரேன்.

இதனை எதிர்த்து மக்கள் கலை இலக்கிய கழகமும் கர்நாடக சங்கீதம் தெருக்கூத்தின் திருட்டே என கலை வளர்ப்பார்கள். மொத்தத்தில் இரண்டும் வளர்ந்தது, உலகம் சுருங்குவதால்,வயிறு சுருங்குவதால் இனி கலையும் வேகமாக சுருங்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரக தலங்கள் அனைத்தும் (காரைக்கால் தவிர) இந்த மாவட்டத்திலே வரும் அனைத்தும் சிவாலயங்கள் நவக்கிரக வழிபாடு சிவ வழிபாட்டை விட அதிகம் இப்போது, சரியான சாலை வசதிகள் செய்து தரப்பட்டால் பக்தர்களுக்கும் வசதி சுற்றுலா வருமானமும் வரும், தேவேகவுடா இங்கே அடிக்கடி வந்து விடுர காவிரி தண்ணிய குடிச்சுட்டு போயி பிரதமர் கனவில பெங்களூர்ரூல தூங்கிரார்.

தஞ்சை நகரம் முதல் மாயூரம் வரை ஒரு காலத்தில் பெரும்பாண்மையாக இருந்த ஐயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து அமெரிக்கா வரை சென்று வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள். இவர்களின் அறிவை சரியான படி உபயோகித்து ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பயன்படும் படி ஒரு தீர்வு கண்டுபிடிக்க ஏன் முடியவில்லை?.இதில் இழப்பு அவர்களுக்கல்ல.

இந்த இடப்பெயர்ச்சி தஞ்சை விவசாயியையும் , விவசாய தொழிலாளார்களையும் இப்போது தாக்க ஆரம்பித்து இருக்கிறது, கடைசியில் அங்கே மிஞ்சப்போவது சிதிலமடைந்த சிவன் கோவில்கள் மட்டுமா?

கல்வி என்று எடுத்துக்கொண்டால் இந்த பகுதியில் நிறைய பேரு பட்டப்படிப்பு படிச்சதுக்கு பூண்டி கல்லூரிதான் காரணம்.இந்த கல்லூரி இது வரை கல்வியை வியாபாரம் ஆக்காத கல்லூரி எனச்சொல்லலாம்.கல்விக்காவலர் துளசி அய்யா வாண்டையார்(இவரைப்பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் உள்ளது) என்றால் அதில் கொஞ்சமும் தவறில்லை. இவர்கள் இந்த கல்லூரியை இன்னும் நல்ல முறையில் வளர்த்திருக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.

இவர்களின் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் உள்ளது, பெரும்பாலும் இங்கே பத்தாவதில் இரண்டுக்கு மேற்பட்ட மார்க் சீட்டு வாங்கியவனுக்கு தான் இடம் கொடுப்பார்கள், 400க்கு மேல் மார்க் வாங்கியவனை நன்கொடை வாங்கி சேர்த்து 100% ரிசல்ட் (3 பாடத்துக்கு கட்டாய டியூசன் வைத்து )கொடுப்பவர்கள் நல்ல பள்ளியா? யாரும் சேர்த்துக்க்கொள்ளாதவனை சேர்த்து 50% ரிசல்ட் வாங்க வைப்பவர்கள் நல்ல பள்ளியா பார்வையாளர்களின் கருத்துக்கு விடுகிறேன்.

மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திராவும் கல்விச்சேவையை நன்றாகவே அளிக்கிறது.மாயவரம் ஏ.வி.சி கல்லூரி,கும்பகோணம் மற்றும் திருவையாறு கலை/ஒவியக் கல்லூரிகளும் அடக்கம்.

வீரம் என்றால், வாய்ப்பேச்சு வீரர்கள், இம்மாவட்டத்தில் சாதிச்சண்டை குறைவின் காரணமும் இதுவே, சாளுக்கிய சோழ வம்சம் வந்ததன் பின் ஒரு வகையான கலப்பின் சோழர்கள் ஆனதால் கொஞ்சம் சகிப்பு தன்மை கூடுதலோ? சண்டை என்றால் முதலில் ஓட்டம் பிடிப்பவர்கள் இவர்களாத்தான் இருக்கும்.ஆனாலும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு, இன்னொன்று பல்லவப்பேரரசு பாண்டிய நாடு பேரரசே அல்ல என்று நக்கல் பேசுவோம்.என்னை யாரவது பின்னூட்டத்தில் அடிப்பேன் என்று சொன்னால் கூட நான் ஒடி விடுவேன், பெரிய ஓட்டப்பந்தய வீரனாக்கும்.

சமுதாய சீர்திருத்தம் பெரியாருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்த மாவட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இந்தக்கால சீர்திருத்த திருமணம் அவன் ஒழிக இவன் ஒழிக என்று கூறி மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற நிலையில் உள்ளது சாபக்கேடு.சாதியக்கட்டுமானங்கள் இன்னும் உயிரோடு இருப்பினும் அதன் வீரியம் குறைவே, பெரியாரும் இதற்கு ஒரு காரணம்.

இதன் தொடர்ச்சியை மூன்றாவது பாகத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

Monday, December 1, 2008

தஞ்சை மாவட்ட மக்கள் ஒரு மொக்கை அறிமுகம்.

தஞ்சை மாவட்டம் அப்படின்னு ஒருங்கினைந்த தஞ்சை,திருவாரூர், நாகப்பட்டிணம் மொத்ததையும் எடுத்துக்குவோம், இம்மாவட்ட மக்கள் பற்றி ஒரு நகைச்சுவை அலசல்.

உலகத்திலேயே வெத்திலை,பாக்கு போடர பழக்கம் அதிகம் உள்ளவங்க இந்த மாவட்ட மக்களாத்தான் இருக்கும், அதுலயும் பாக்கு கடிக்க முடியாதுன்னு அதுக்கு ஒரு மெசின் கண்டுபிடிச்சி உடைச்சு(சீவி) சீவல் ஆக்கி சாப்பிட்ட மகா சோம்பேறிகள்.இந்த ஊருல வேற தொழில் பண்ணமுடியாதுன்னு தெரிஞ்சு சீவல் கம்பெனி கண்ட தொழிலதிபர்களை எப்படி பாராட்டுரதுன்னே தெரியல.

தஞ்சாவூர் நகர்ப்புறத்து மக்கள் ரொம்ப கொஞ்ச பேரு,அவங்களும் பெரும்பாலும் பக்கத்து கிரமாத்திலேந்து புள்ளைங்கள டவுண்ல இங்கிலீசு பள்ளிக்கூடத்தில படிக்கவைக்க குடியேறுனவங்களாதான் இருப்பாங்க, ஏன்னா முன்னாடியே சொன்னா மாதிரி இங்கே சீவல் கம்பெனிய தவிர வேற ஒன்னும் இல்ல வேல செய்யரதுக்கு, கொஞ்சம் கவருமெண்ட் ஆபிஸ் இருக்கும் அதுல கொஞ்ச பேரு வேல செய்வாங்க.

அந்த காலத்தில காவிரி தண்ணில முப்போகம் விவசாயம் பண்ணிட்டு வெத்திலை போட்டு கொதப்பி ரோட்டுலேயோ , ரோட்டாவிலேயோ துப்பி தமிழ் / கலையெல்லாம் வளர்த்து இருக்காங்க. ஆனா இப்போ ஒரு போக விவசாயமும் டான்ஸ் ஆடரதுனால வெத்தில போட்டு துப்பிட்டு வெட்டிப்பேச்சோட நிறுத்திக்கிராங்க பெரிய மனுசங்க.

சில ஏக்கர் நிலம் வெச்சிருக்கிற கிராமத்து பெரிசுங்க டவுணுகாரங்கள பாத்து, என்ன அங்கேயெல்லாம் வரிசையில நின்னு கூப்பன் அரிசி வாங்கி திங்கிராங்கலாம். நமக்கென்ன வயல்ல முத்து மாதிரி வெளஞ்ச நெல்லு, பொண்ணி அரிசி வெல கூட விக்கும்னு வெளஞ்ச பொண்ணிய வித்துப்புட்டு, பள்ளத்து வயல்ல வெளஞ்ச மட்ட(இட்லி அரிசிய விட ரெண்டு மடங்கு பெரிசா இருக்கும்) அரிசிய வீடல அவிச்சு சோறும்,ரசமும் ஒட்டாம விக்கல் எடுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இருக்காது.

விவசாயக்கூலி மக்கள் அன்னக்கி கெடச்ச கூலி நெல்ல பாதி வித்து குடிச்சிப்புட்டு, கொஞ்சத்த அவிச்சி சாப்பிட்டு அடுத்த நாள் பத்தின கவலை இல்லாம தெரு விளக்கில உக்காந்து நடுச்சாமம் வரைக்கும் சீட்டாடிப்புட்டு, காலைல வேலைக்கு போவாங்க, ஆனா கர்நாடாகாரன் புண்ணியத்துல இப்ப இவங்கெல்லாம் வேலை தேடி திருப்பூர்.ஈரோடுன்னு போயி அங்க சீட்டு வெலாடுராங்க.

கிராமத்துல இருக்கிர டீனேஜ் இளைஞர்கள் எதுனா பக்கத்து ஊர்ல கல்யாணம், அதுவும் அறுவடை காலத்திலன்னா புது செருப்பு, வெள்ளை வேட்டி சட்டையோட 3 கிலோமீட்டர்ல உள்ள ஊருக்கு 20 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிர டவுண்லேந்து வாடகைக்கார் வரவச்சு காருல போயி இறங்கி ஒரு பந்தா உடுரது, ராத்திரில அப்பா பேசுவாருன்னு பயந்து பள்ளிக்கூடத்தில தூங்கிரது.

தொடர்புடைய இன்னொரு பதிவு முடிஞ்சா பாருங்க

குடுகுடுப்பை: சூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.

அப்படியே பின்னூட்டத்தையும் படிங்க, எதாவது நக்கலா கலக்கிருப்பாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு இன்னோரு பாகம்.. இதுக்கு இடையில் நெல்லை,கொங்கு பகுதி பற்றி நசரேயனும், பழமையாரும் பதிவு போடுவாங்க. ..அப்படியே ஒட்டு மொத்த தமிழ்நாடு பத்தியும் பதிவு போடமுடியுதான்ன்னு பாப்போம்.