Showing posts with label பட்டுகோட்டை. Show all posts
Showing posts with label பட்டுகோட்டை. Show all posts

Monday, December 15, 2008

தஞ்சை மாவட்டம் : பட்டுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுப்புறம்.

பட்டுக்கோட்டை நகரம் தமிழகத்திற்கு இரண்டு பெயர்களால் பிரபலம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,பட்டுக்கோட்டை அழகிரி இவர்களை பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.இவர்கள் அல்லாமல் முன்னால் குடியரசுத்தலைவர் இரா.வெங்கட்ராமன், திராவிட இயக்கத்தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன்,எஸ்.டி.சோமசுந்தரம்,மற்றும் வாட்டகுடி இரணியன்(தகவலுக்கு நன்றி ஜோதிபாரதி) போன்ற பிரபலங்களை தந்த ஊர்

இந்த சிறிய நகரம், சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய பொருளாதாரத்தை நம்பி இருக்கும் வியாபார நகரம்.இந்நகரில் குறிப்பிட்டு சொல்லும்படி உள்ளது நாடியம்மன் கோவில், கிட்டத்தட்ட ஒரு வாரம் நடக்கும் அதன் திருவிழா,இத்திருவிழாவில் ஒரு சாதீய் அதிசயம் , செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கே முதல் மண்டகப்படி இந்த அதிசயம் இந்தியா முழுவதும் நடக்க நாடியம்மனை வேண்டுவோம்,சுற்றுப்புறத்தில் உள்ள துர்க்கையம்மன் /செல்லியம்மன் திருவிழாவும் பிரசித்தம்.

ஓரளவுக்கு பெரிய ஊராக இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படி பள்ளிகள் எண்ணிக்கை இல்லை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமே கல்விச்சாலை.கல்லூரிக்கு அதிராம்பட்டிணமோ, தஞ்சாவூரோ செல்லவேண்டும் இப்போது சில தனியார் சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி பண்ணை வீரிய தென்னைகளை உற்பத்தி செய்து சுற்றுப்புற கிராமங்களில் தென்னை தோப்புகளை உருவாக்குகிறது.

சுற்றியுள்ள கிராமங்களை பேராவூரணி பகுதி,முத்துப்பேட்டை,அதிராம்பட்டிணம் சார்ந்த கடற்கரை பகுதி,மதுக்கூர் பகுதி,பாப்பாநாடு பகுதி என எளிதில் பிரித்து அடையாளம் காணலாம். கடற்கரையை பகுதியில் விவசாயத்துடன் மீன்பிடித்தல் ஒரு தொழில்.மற்ற பகுதிகள் விவசாயம் மட்டுமே.

பெரும்பாலும் காவிரியின் கடைமடை விவசாயப்பகுதி ஆதலால் கல்லனைக்கால்வாயின் கிளை வாய்க்கால்களான கல்யாண ஓடை, ராஜாமடம் வாய்க்கால் மூலமே பாசணம், காவிரி திறந்து 40 நாள் கழித்து தண்ணீர் வந்தாலே அதிசயம்.இந்த அதிசயத்திலும் ஓரளவிற்கு விவசாயம் செய்கின்றனர்.

ஒருகாலத்தில் யானைகட்டி போரடித்து, பின்னர் சோழனை(பஸ்) கட்டி போரடித்து(வைக்கோலில் மிஞ்சியிருக்கும் நெல்லை எடுக்க) பின்னர் கதிர் அடிக்கும் இயந்திரம் , அறுவடை இயந்திரம் வந்து விட்ட நிலையில் முற்றிலும் இந்த பழக்கம் இப்போது இல்லை.இதனால் வாகனங்கள் சாலையில் வைக்கோலில் சிக்கும் வாய்ப்பு இனி இல்லை.

பேராவூரணி, குருவிக்கரம்பை பகுதியில் மொய்விருந்து எனப்படும் வினோதமான பழக்கமும் உண்டு, இதன் படி ஒருவர் மொய்விருந்து வைத்தால் அவருக்கு அப்பகுதியை சேர்ந்த உறவினர்கள் மொய்யாக சில ஆயிரங்களில் ஆரம்பித்து சில லட்சம் வரை மொய்யாக பணம் தருவர்.மொய்விருந்தில் பங்கேற்பவர்களுக்கு தடல்புடலான கறி விருந்து உண்டு. இம்மொய் விருந்தில் சில சமயங்களில் கோடி ரூபாய் வரை வருமாம். அதை வைத்து அவர்கள் புதிய தொழிலோ, தென்னந்தோப்போ வாங்கி பிழைத்துக்கொள்வர்.ஆனால் ஒருவர் 1000 ரூபாய் போட்டால், போட்டவர் மொய்விருந்து வைக்கும்போது இரண்டு மடங்காக போட்டால்தான் மரியாதை.திருப்பி போடவிட்டால் நாகரிகமாக டவுசர் உருவப்படும்.

இப்பகுதியில் தென்னை வளம் அதிகம், பொள்ளாச்சி இளநீர் அளவு புகழடையாவிடினும், நல்ல தரமான தேங்காய் இப்பகுதியில் விளைகிறது,பெரும்பாலும் எண்ணைய் தயாரிப்பிற்கு விற்பனை என நினைக்கிறேன். தென்னை உப தொழிலான கயிறு தொழிற்சாலைகள் சிலவும் உண்டு.

அதிராம்பட்டிணம் பகுதியில் பிடிக்கப்படும் மீன் இந்நகர மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு மீன் உணவாகிறது.மதுக்கூர்,பாப்பாநாடு பகுதிகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தே உள்ளது.மனோரா எனற சுற்றுலாத்தளமும் இக்கடற்கரையோரம் உள்ளது.

இந்நகரத்திற்கு சென்னை காரைக்குடி செல்லும் ஒரு ரயிலும் வருகிறது, இவர்களின் நீண்ட கால ஆசையான தஞ்சை-பட்டுக்கோட்டை ரயில் நிறைவேறுமா?

நாடியம்மன் கோவில்
விக்கி

பட்டுக்கோட்டை பகுதி பதிவர்கள் மேலும் தகவல் தருவார்கள்....பின்னூட்டமாக..