வருங்கால முதல்வர் நாற்காலிக்கு யாரோ பேர் அடிபடுதாமே? அதான், நாமும் வந்து வருங்கால முதல்வர் நாற்காலியில உட்கார்ந்து பாக்குற நினைவு வந்துச்சு; வந்தேன். சரி, வந்ததும் வந்தோம், ஒரு தகவலைச் சொல்லிட்டுப் போலாமுன்னு.... இஃகிஃகி!
நாம கோயம்பத்தூர் CIT, Coimbatore Institute of Technologyலதான குப்பை கொட்டிட்டு இருந்தோம். அங்க பாருங்க, கைலாசு விடுதி, கைலாசு விடுதின்னு ஒன்னு இருக்கு. அங்கதான் புளிச்ச மோரை சக்கரை போட்டுக் குடிச்சுப்பிட்டு, அவுத்து விட்ட கழுதைகளாட்டம் மேலுக்கும் கீழுக்கும் திரிஞ்சுட்டு இருப்போம்.
திடீல்னு நெனைச்சா, லுங்கிய லேசா மேல எடுத்து தொங்கட்டானுட்டுக் கட்டிகிட்டு, பின்னாடி வழியா அப்பிடியே ரெயில் ரோட்டைத் தாண்டி, மணீசு தியேட்டர் முன்னாடி இருக்குற சிவசாமி அண்ணனோட பேக்கரிக்கு போவோம். போயி, அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு அலப்பறை செய்யுறது.
அப்புறம் North District Vs South Districtனு சண்டையப் போட வேண்டியது; அது ரொம்ப out of fashion ஆயிப் போச்சுன்னா, Kapil Vs Gawaskar, Kamal Vs Rajini, இப்படி எதனா ஒன்னை வெச்சிகிட்டு இரகளையப் பண்ண வேண்டியது.... காசு, கீசு எதுவுந்தராம எடத்தைக் காலி பண்ணிட்டு வர வேண்டியது.... இப்படி அப்பப்ப வெகு சகசமா நடக்கும்.
அப்ப அந்த சிவசாமி அண்ணங் கேக்குறது, டேய் நாசமாப் போன வாலுகளா, நீங்க எந்த குரூப்புடா? இப்பிடி, குரூஊப் குரூஊப்பா வந்து அழிச்சாட்டியம் பண்ணுறீங்களேடான்னு.
அந்த மாதிரி, இப்ப ஒரு குரூஊப்பு வந்து எறங்கி இருக்குது. வேற எங்க, நம்ம பதிவுலகத்துலதான்.... சும்மா, கவிதை என்ன? கட்டுரை என்ன?? வெச்சு, வெளுத்து வாங்கறாங்கப்பா... கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுல வெச்சி, ஒரு அம்மணியப் பாத்ததீமு அந்த நடிகர் சொன்னாராம், ‘hey, she looks very fresh man...'னு...
அய்ய... அது யாரு எதுக்குங்ற கர்மமெல்லாம் நமக்கெதுக்கு? நான் என்ன சொல்ல வந்தன்னா, இவுகளும் அந்த மாதர ஒரு புது பொலிவோட வந்திருக்காங்க... அவங்க ஆக்கங்களையும் சித்த போயிப் பாருங்க.... கூடவே அவங்க அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சொல்லிகிடுறேன்!
க.பாலாஜி
கதிர் - ஈரோடு
ஆரூரன் விசுவநாதன்
செல்வனூரான்
seemangani
தியாவின் பேனா பேசுகிறது...
sakthi
கபிலன்
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார்
ரிஷபன்
ரவிபிரகாஷ்
மேல சொன்னவங்க எல்லாருமே விற்பன்னர்களா இருக்காங்க... வலைச்சரத்துல எழுத வேண்டியது.... கொஞ்சம் தவறிப்போச்சு... இஃகிஃகி!!
Monday, August 31, 2009
Monday, July 13, 2009
சென்னை மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை சிரமங்கள்/நல்லது அது பத்தி ரம்யாவின் பார்வை!!
அனைவருக்கும் வணக்கம்!!
சென்னை மத்திய தர வர்க்க பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள். இவர்களைப் பற்றி பிரபல வலைப்பதிவர் குடுகுடுப்பையார் மற்றும் வருங்கால முதல்வர் என்னை எழுத அழைத்திருக்கிறார்.
ஆழமா சிந்திக்க வேண்டிய தலைப்பு இல்லையா. அதனால் தான் எழுத கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்க நண்பா!!
குடுகுடுப்பையார் கேட்டிருக்கும் மத்தியதரப் பெண்கள் சந்திக்கும் பல நிதர்சனங்களைப் பார்க்கலாம் வாங்க!!
முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு முன்
மத்தியதர குடும்பத்தில் பிறந்த பெண் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. இந்தப் பிரிவில் பிறந்த பெண்களுக்கு எல்லாமே சவாலாகத்தான் இருக்கின்றது. பெண்கள் எது செய்தாலும் சவாலாகத்தான் நினைக்கிறார்கள். அது இல்லை என்று சொல்ல இயலாது. ஆனால் தலைப்புக்கு ஏற்றவாறு எழுதுகின்றேன்.
வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவிய பின் தனது வேலைகளையும் முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டால், சில சமயம் வீட்டிற்கு அன்றாட தேவைகளான பொருட்கள் தீர்ந்து விட்டன என்பதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும். சகோதர மற்றும் சகோதரிகள் தேவைகளை ஆர்பாட்டத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் கடந்து தலையை சிலுப்பிக் கொண்டு கிளம்பினால், அரசு பேருந்து வராது. மீறி சில நாட்கள் சென்ற உடனே பேருந்தில் ஏறும் பாக்கியம் கிடைக்கும் . ஏறிவிட்டாலும் நிம்மதியாகப் போக முடியுமா?? ["வேறு என்ன இடி, உரசல்கள் இதைத்தான் கூறுகின்றேன் :( "]. தினம் தினம் சந்திக்கும் அவமானங்கள்தான் எவ்வளவு?
எண்ணிலடங்கா வேதனைகளுடன் அலுவலகத்தில் நுழையும்போது நேரம் கடந்திருக்கும். அதற்கு யார் யாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டுமோ அனைவரிடமும் தங்கு தடையின்றி கிடைக்கும். அவற்றையும் சமாளிக்க வேண்டும். மனதில் எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அலுவலகத்திருக்கு தாமதமாக வராமல் இருக்க, ஆட்டோவில் வரலாம், பல நாட்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை, கையில் தாராளமாக பணம் இருந்தால் ஹோட்டல்லே இருந்து வரவழைத்துச் சாப்பிடலாம். கையிருப்பு குறைவதால் காலை உணவு கட். ஏன்னா சில சமயங்களில் சாப்பிட கூட நேரம் இருப்பதில்லை அதான் காரணமா? எப்போதும் முகத்தில் ஒரு சோகம். அவளின் வசீகரம் வறுமையால் களவாடப் பட்டு விடுகின்றதே. இதெல்லாம் வேறே எங்கே? இந்த மத்தியதர வர்க்க பெண்களிடம் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகள்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் எவ்வளவு பேர் கண்ணில் படுகிறார்கள். அதில் என்பத்தைந்து சதவிகிதம் பெண்கள் தேவைக்குத்தான் வேலைக்கு செல்கிறார்கள். தேவைகள் என்பது குடும்பத்தேவைகள்தான்.
பெண்கள் அவர்களின் தேவைக்கு வேலைக்கு செல்வதும் இருக்கின்றது. அவர்களைப் பற்றி இப்போது பேசவேண்டாமே.
மறுபடியும் நம் தலைப்புக்கே வந்துவிடுவோம். நல்ல ஆடைகள் அணிய முடியாது. மீறி உடுத்த ஆசைப் பட்டால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு இவளின் கஷ்டம் புரியாது. உழைப்பின் முழு வீச்சு என்னவென்று பார்த்தால் கடமை கடமை மட்டும்தான் காணப்படும். குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்ல தேவையே இல்லே. எல்லாருடைய கஷ்டத்திலும் பங்கெடுத்து தன்னோட தேவைகளை யோசிக்கும்போது அருகில் இருக்கும் உறவுகள் குறைவாகவே இருக்கும். காலமும் கடந்து போயிருக்கும். இவை எல்லாம் இல்லை என்று ஒருவரும் மறுக்க இயலாது. கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் உதாரணங்கள்தான் இத்தைகைய பெண்கள்.
முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு பின்
எப்படியோ சில குடும்பங்களில் முட்டி மோதி பெற்றோர்கள் திருமணத்தை முடித்து விடுவார்கள். கணவன் மட்டும் வேலைக்குப் போனால் அன்றாட தேவைகள் மட்டுமே கவனிக்க முடியும். எண்ணி சுட்ட பணியாரமாகத்தானே இந்த பெண்களின் வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பற்றாகுறை இருப்பதும் வழக்கம்தான். தேவையான தேவைகளும் அங்கே கட்டுப் படுத்தப்படும். குடும்பத் தரத்தை உயர்த்தலாம், அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்திக் கொள்ளலாம், அந்த வீட்டு குத்து விளக்கான மருமகளும் அத்தியாவசியத் தேவைகளை மனதிலே இருத்தி வேலை என்ற ஆயுதத்தை, கையிலே எடுத்தால்தான் அந்த வீடே வெளிச்சத்திற்கு வர சாத்தியமாகும். கணவரின் உடன் பிறப்புகளுக்கு, படிப்பில் உதவி மற்றும் திருமணத் தேவைகள், மாமனார் மற்றும் மாமியாரின் உடல் நலம் பேணுதல் இவைகள் அனைத்தும் கடமை என்ற கட்டுக்குள் வந்துவிடும். இதற்கிடையே தனது குழந்தைகளும் கவனிக்கப்பட வேண்டிய கட்டாயம் எதில் வரும் என்ற நினைப்பே வராத அளவிற்கு உழைப்பு அவர்களின் எண்ணங்களை விழுங்கிவிடும்.
ஒருவரின் வருமானத்தில் மேற்கூறிய எதுவுமே சாத்தியமாகாது. இப்படி ஆரம்பித்த பெண்களின் சேவைகள் தொடர்கின்றன. குடுபத்திற்காக பல தியாகங்கள், பிறகு குழந்தைகளுக்காக பல தியாகங்கள். அந்த பெண்ணின் தியாகத்திற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விடுகின்றது. திரும்பிப் பார்ப்பதற்குள் தனது வாரிசுகளின் திருமண வைபவம் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும். கஷ்டங்களுக்கு நடுவே திருமணம் செய்து நிமிர்ந்தால், திருமணத்தை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள். எல்லாம் முடிந்து அப்பாடா என்று அமர்ந்தால் அதீத உழைப்பின் காரணமாக நோய் என்ற அரக்கன் கணவனை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பிப்பான். அப்போதும் தனக்கென்று எதையும் யோசிக்காமல் மறு அவதாரம் எடுப்பாள் அந்த பெண் என்றால் அது மிகையாகாது. இப்படி வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாகிப் போன அந்த பெண் தனது முதுமைக் காலத்துக்கு சேர்த்து வைத்ததுதான் என்ன? இது பெரும் கேள்விக் குறியல்லவா? அவளின் மனதில் தியாகம் தியாகம் அது ஒன்றுதான் தாரக மந்திரமாக கொழுந்து விட்டு எரியும் அணையா விளக்காகாக எரிந்து கொண்டிருக்கும்.
இந்தப் போக்கு மாறவேண்டும். சிலரிடம் மாற்றங்கள் தெரிகிறது. ஆனால் அன்றாட தேவைகளின் தொல்லைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள், கொஞ்சம் வெளியே இருந்து பிரச்சனைகளை அணுக வேண்டும். அப்போதுதான் தேவைகள் என்ற நிலை மாறி அடிப்படை தேவைகள் எவை என்று உணர ஆரம்பிப்பாள். இந்த நிலை அந்த பெண்ணின் சராசரி பெண்ணின் மனநிலையில் இருந்து சற்று மாறுபட்டு யோசிக்கத் தோன்றும். இந்த மாற்றங்கள் பல வகையிலும் ஏற்றங்களை அடைய காரணமாகிறது.
உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இது போல் கஷ்டங்கள் தீர்வுள்ள கஷ்டங்கள்தான். அவர்களுக்கு பற்றாகுறை என்பது இருக்க நியாயம் இல்லை.
அதே போல் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருபவர்களுக்கும் பற்றாகுறை, தேவைகள் இதெல்லாம் எதுவும் வெகுவாக பாதிப்பது இல்லை. அன்றாடம் உழைத்து சாபிட்டாலே அவர்களுக்கு வாழ்க்கை நிறைவைத் தருகிறது.
இடையே அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் தவிப்பவர்கள் நமது தலைப்பில் அடங்கிய மத்தியதர பெண்கள்தான் தீர்வில்லா பல இன்னல்களை அடைகிறார்கள் என்று கூறுவதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
மத்தியதர வர்க்க பெண்கள் வேலைக்கு செல்வதால் ஏற்படும் [எனக்கு தெரிந்த] நன்மைகள்
இதில் நல்லது என்று எடுத்துக் கொண்டால் சிலவற்றை மேற்கோள் காட்டலாம். வசதிகளைப் பெருக்கிக்கொள்ளலாம். நல்லது கெட்டது செய்யும்போது நிறைய யோசிக்க அவசியம் இல்லை. இருவரும் சேர்ந்தே செய்வதால் சிரமம் குறையும். குழந்தைகளை விரும்பிய பள்ளியில் சேர்க்க முடியும். இப்போ எல்லாம் குழந்தைகள் படிப்பே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. பல கஷ்டங்கள் இருந்தாலும் பலர் தனது குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்து விடுகின்றார்கள். இது மத்தியதர வர்க்க பெண்களின் வெற்றி என்று தான் கூறவேண்டும். இந்த வெற்றியின் பின்னணியில் பெண்களின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். பாங்காக குடும்பம் நடத்தி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, தானும் மகிழ்ந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்வித்து, தனது வாரிசுகளையும் வழிநடத்தி வெற்றி வாகை சூடிய பெண்கள் பலரை உதாரணமாகக் காட்டலாம்.
கூட்டுக் குடித்தனமாக இருந்தாலும் தனிக் குடித்தனமாக இருந்தாலும் கணவனைச் சார்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒன்று விடாமல் செய்து வருவதிலும் நமது மத்தியதரப் பெண்கள் கில்லாடிகள். சுமைகள் இருந்தாலும் அதை சுமையாகக் கருதுவது இல்லை. இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கின்றீர்கள், அதற்கு என் பதில் சாத்தியம்தான். இப்படித்தான் வாழ்க்கையை சமப்படுத்தி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இப்படி கூறி கொண்டே போனால் இன்னும் எவ்வளவோ?
நான் விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
இத்துடன் படித்த அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த குடுகுடுப்பையாருக்கு நன்றிகள் பல.
டிஸ்கி: இதில் எழுதியவைகள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் புண் படுத்த அல்ல.
மறுபடியும் வாய்ப்பளித்த குடுகுடுப்பையாருக்கு என்நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Tuesday, June 23, 2009
புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்
"ராஜாதிராஜ! ராஜமார்த்தாண்ட! ராஜ கம்பீர!" இந்த வார்த்தை தமிழகத்தில் பலருக்கும் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ கேட்கும் வசனம். ஆனால் புதுக்கோட்டைக்காரர்களுக்கு உணர்வோடு ஒன்றிய வார்த்தை இது. காரணம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின் கீழ் மகத்தான சாதனைகள் பல படைத்து வந்த தனி தேசம்.
பிரிட்டீஷ்சாரே ஆள முடியாத அளவிற்கு பவர்ஃபுல் தேசமாக இருந்ததா என்றால் அதற்கு விடை இல்லை என்பதே. புதுகையை ஆண்டு வந்த தொண்டைமான் மன்னர்கள் பிரிட்டீஷாரோடு நட்புறவில் இருந்ததால் பிரிட்டீஷ்சார் தங்கள் ஆளுகையின் கீழ் புதுகை சமஸ்தானத்தைக் கொண்டு வராது தனிநாடாகவே இயங்கவிட்டு இருந்தனர். தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.
இப்ப கொஞ்சம் ஆதிகாலத்துல இருந்து எங்க வரலாறைப் பார்ப்போம்.
வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை போகட்டும் என்றூ கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.
"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)
"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)
"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.
"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகாள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.
பிராமிக் கல்வெட்டு
பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன.சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.
"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"
என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).
சமனமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.
சங்ககாலம்
சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.
"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குத் தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது.
பன்றிநாடானது கோனாடு, கானாடு ன இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தத். வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்று, தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் வழங்கியது. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு பறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூறில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள்.புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.
சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்றூ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புதுக்கோட்டையில் ரோமாபுரி
திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு முத்து மணிவகைகள் பருத்தி பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,
மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை சென்னை புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
சங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர,சோழ,பாண்டியரைக் களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.
ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.
களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பெளத்தம்,சமணம்ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
முதல் பாண்டியப் பேரரசு
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி கலப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து பாண்டியன் கடுங்கோன் பாண்டி நாட்டைப் பகுதிகளைக் கைப்பற்றினான். பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடுங்கோன் கி.பி 590 முதல் 620 வரை ஆட்சி செய்தான். ஏறத்தாழ இதே காலத்தில் பல்லவ மன்னன் விஷ்னுசிம்மன்(கி.பி 575 - 600) தொண்டை மண்டலத்தில் களப்பிரரை வென்று அங்கு பல்லவர் ஆட்சியை ஏற்படுத்தினான்.புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின்ஆளுகைக்குட்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரனதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமார ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுனவர்மன்(862-880)வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் சோழர் மற்றும் பல்லவர் கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான்.
தொடர்ந்து பராந்தகவீரநாராயனனும்(கி.பி 880 - 900) மாரவர்மன் இராஜசிம்மனும்(கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் வீரபாண்டியன்(கி.பி 946 - 966) ஆவான், இவன் 2ஆம் ஆதித்ய சோழனால் முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.
பல்லவர்
தொண்டை மண்டலத்தில் கி.பி 575 வாக்கில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள் நடந்து கொண்டேயிருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டு முடிவில் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்திரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர் ஆட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர.
இதற்கு அப்புறம் துவங்கியது எங்க தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம். இப்ப டைப் அடிச்சு கை வலிக்குது. அதுனால அடுத்த பாகத்தில் தொடர்ந்து சந்திப்போம்
(தொடரும்)
Labels:
புதுக்கோட்டை மாவட்ட வரலாறு
Tuesday, June 16, 2009
ஈழம் :சில கேள்விகளும் பல பதில்களும்
ஈழம் :சில கேள்விகளும் பல பதில்களும் புல்லட் பாண்டி யாழ்ப்பாணம்.
இந்த பதிவில் யாழ்ப்பாண பதிவர் புல்லட் பாண்டி ஆக்கப்பூர்வமான கேள்விகள் எதிர்பார்க்கிறார்
முடிந்தால் எழுப்புங்கள்.
டிஸ்கி : பதிவு என்னுடையதல்ல, கருத்துக்களை அவரின் பதிவிற்கு சென்று வழங்கவும்.
இந்த பதிவில் யாழ்ப்பாண பதிவர் புல்லட் பாண்டி ஆக்கப்பூர்வமான கேள்விகள் எதிர்பார்க்கிறார்
முடிந்தால் எழுப்புங்கள்.
டிஸ்கி : பதிவு என்னுடையதல்ல, கருத்துக்களை அவரின் பதிவிற்கு சென்று வழங்கவும்.
Labels:
ஈழம்,
குடுகுடுப்பை,
சமூகம்
Friday, June 12, 2009
வைகோவுக்கு வேண்டுகோள்
பொதுவாக நான் அரசியல் பதிவு எழுதுவதில்லை, இந்தப்பதிவு வைகோ என்ற நல்ல மனிதர் சமீபத்தில் அடிக்கும் கூத்துக்கள் தருவிக்கும் கோபத்தினால் எழுதுகிறேன்.
ஈழ்த்தமிழர் பிரச்சினையில் இன்றைய தேவை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் இல்லை என்ற ஆராய்ச்சியோ, வெடி வைத்து தகர்த்தது விடுதலைப்புலிகள் என்று என்று உரக்கப்பேசி முள் கம்பியின் பின்னால் இருக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தை தேடித்தருவதோ அல்ல.பிரபாகரன் பற்றியே பேச்சு இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு நினைப்பதை சரியாக நீங்கள் செயல் படுத்துகிறீர்கள்.
அந்த மக்களுக்கு இன்றைய தேவை உயிர், உணவு அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துதல், சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை காணுதலே தவிர வெற்றுக்கூச்சல் அல்ல. நீங்கள் இடும் கூச்சலினால் என்ன பயன் என்று இரவில் தூங்கும் முன் யோசித்துப்பாருங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்,நீங்கள் நேர்மையானவர்,ஈழத்தமிழர் பால் உங்கள் அக்கறை உண்மையானது என்ற நம்பிக்கை பெரும்பாலனவருக்கு இன்னும் உண்டு.உங்களால் முடிந்தால் அவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளை யார் காலில் விழுந்தாவது செய்யுங்கள்.
கிட்டதட்ட 2000 குழந்தைகள் போரில் அநாதையாகி உள்ளனர். அவர்களின் கல்விக்கு எதையாவது செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.இன்றைய உலகம் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடிதான் செல்கிறது, செல்லும். வலிமை இல்லாதவன் கத்தினால் அடிதான் விழும். நீங்கள் நெல்லையில் இடும் கூச்சலுக்கு முல்லையில் தமிழன் அடி வாங்கக்கூடாது.
தமிழினம் வலிமையாக கூச்சலற்ற விவேகம் , வீரம்,நட்பு தேவை அதற்கான வழியைப்பாருங்கள் இல்லாவிட்டால் கலிங்கப்பட்டி சென்று வாலிபால் விளையாடுங்கள்.
உங்களுடைய மதிமுகவின் முதல் குடவாசல் கூட்டத்திற்கு சிறுவனாக இருந்தபோது செங்கல் லாரி ஏறி வந்து பார்த்தவன் என்ற உரிமையில் குடுகுடுப்பை.
ஈழ்த்தமிழர் பிரச்சினையில் இன்றைய தேவை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் இல்லை என்ற ஆராய்ச்சியோ, வெடி வைத்து தகர்த்தது விடுதலைப்புலிகள் என்று என்று உரக்கப்பேசி முள் கம்பியின் பின்னால் இருக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தை தேடித்தருவதோ அல்ல.பிரபாகரன் பற்றியே பேச்சு இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு நினைப்பதை சரியாக நீங்கள் செயல் படுத்துகிறீர்கள்.
அந்த மக்களுக்கு இன்றைய தேவை உயிர், உணவு அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துதல், சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை காணுதலே தவிர வெற்றுக்கூச்சல் அல்ல. நீங்கள் இடும் கூச்சலினால் என்ன பயன் என்று இரவில் தூங்கும் முன் யோசித்துப்பாருங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்,நீங்கள் நேர்மையானவர்,ஈழத்தமிழர் பால் உங்கள் அக்கறை உண்மையானது என்ற நம்பிக்கை பெரும்பாலனவருக்கு இன்னும் உண்டு.உங்களால் முடிந்தால் அவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளை யார் காலில் விழுந்தாவது செய்யுங்கள்.
கிட்டதட்ட 2000 குழந்தைகள் போரில் அநாதையாகி உள்ளனர். அவர்களின் கல்விக்கு எதையாவது செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.இன்றைய உலகம் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடிதான் செல்கிறது, செல்லும். வலிமை இல்லாதவன் கத்தினால் அடிதான் விழும். நீங்கள் நெல்லையில் இடும் கூச்சலுக்கு முல்லையில் தமிழன் அடி வாங்கக்கூடாது.
தமிழினம் வலிமையாக கூச்சலற்ற விவேகம் , வீரம்,நட்பு தேவை அதற்கான வழியைப்பாருங்கள் இல்லாவிட்டால் கலிங்கப்பட்டி சென்று வாலிபால் விளையாடுங்கள்.
உங்களுடைய மதிமுகவின் முதல் குடவாசல் கூட்டத்திற்கு சிறுவனாக இருந்தபோது செங்கல் லாரி ஏறி வந்து பார்த்தவன் என்ற உரிமையில் குடுகுடுப்பை.
Labels:
அரசியல்,
குடுகுடுப்பை,
சமூகம்
Friday, May 22, 2009
பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.
பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.
இந்த தேர்தல் முடிவு காட்டும் செய்தி காங்கிரஸ் கட்சி வடக்கில் மாநிலக் கட்சிகளிடம் இழந்த செல்வாக்கினை ராகுல் காந்தியின் கவர்ச்சியால் மீண்டும்
பெறத்தொடங்கியுள்ளது. காங்கிரஸின் இந்த வளர்ச்சி கண்டிப்பாக தொடரும், காங்கிரஸின் இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய தோல்வி அடையப்போவது முலாயம்சிங், லல்லு , கம்யூனிஸ்ட்கள்,சரத்பவார் மற்றும் மாயாவதியின் கட்சி.
தனிப்பட்ட முறையில் மாயாவதி தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் ஒழியவேண்டும் என நினைப்பவன் நான். அதன் ஓட்டுக்கள் காங்கிரஸிகும், பாரதீய ஜனதாவிற்கும் சென்றடைய வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சி ஏன் தோற்கிறது? முதற்காரணம் கிராமப்பகுதிகளில் உள்ள காங்கிரஸின் செல்வாக்கை ராமர் கோவில் கட்டுகிறேன் என்று சொல்லி ஓட்டாக ஒரு நாளும் மாற்ற முடியாது.
இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் வாரிசு மன்னரையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.நேரு குடும்பம் இல்லாமல் இருந்தால் காங்கிரஸ் காணாமல் போயிருக்கும் என்பதும் உண்மை.வாஜ்பாயிக்கு இருந்த செல்வாக்கை வைத்து பாஜக கட்சி வளர்த்திருக்கலாம், ஆனால் பாஜகவின் தலைவராக ஒரு வாரிசு வாஜ்பாய் இருந்திருக்கவேண்டும்.
அத்வானியை ஓரளவிற்கு மக்களுக்கு தெரியும், ராஜ்நாத்சிங்கை யாருக்கு தெரியும், அவர் தனியாக நின்றால் 500 ஓட்டு கூட வாங்கமாட்டார்.மன்மோகனும் வாங்கமாட்டார், ஆனால் அவருக்கு நிர்வாகத்திறமை இருக்கிறது.ராஜ்நாத்துக்கு ?
இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுகிறோம் என்ற வெற்றுக்கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக முன்னேற்ற அரசியலில் அது ஈடுபடவேண்டும்.என்னதான் சொன்னாலும் பாஜக இந்துக்களின் கட்சி என்ற முத்திரை போகப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலையில் பெரும்பாண்மை இந்துக்களுக்கான கட்சியாகவும் இல்லை என்பதும் உண்மைதானே. எத்தனை தலித்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்? காரணம் அது உயர்சாதியத்தை விட்டு வெளியில் வரவேண்டும்.
இந்துக்களின் காவலன் என்று சொல்ல நினைத்தால், முதலில் அக்கட்சி செய்யவேண்டியது, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருவது.வழிபாட்டு உரிமையை மறுக்கும் உயர்சாதி இந்துக்களிடம் எடுத்துச்சொல்லி புரியவைப்பது பாஜக மற்றும் அது சார்ந்த இந்து இயக்கங்களின் கடமை.இதனை தமிழகத்தில் கடவுள் மறுப்பு இயக்கங்கள், திருமாவளவன் போன்றவர்கள் கருவறை நுழைவு போராட்டங்கள் நடத்தியபோது நாத்திகனுக்கு என்ன கவலை என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம். இப்போது அந்தக்கடமை ஆத்திகர்களும் இந்து மத இயக்கங்களுக்கும் உண்டு.
மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக முன்னேற்றத்தை கொண்டு வர முனைவது, மாயாவதியை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்து அவரை தலைவராக்கலாம்.
இது பெரியார் செய்த வேலை, ஆமாம் இதைத்தான் பாரதீய ஜனதா செய்யவேண்டும். அவர் ஏற்படுத்திய கலகம் விழிப்புணர்வை கொடுத்தது.
பாஜக இது போன்ற சமூகத்தொண்டுகளில் ஈடுபட்டு இந்துக்களுக்குள் இருக்கும் சாதி வெறுப்பு உணர்வை களைந்து அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வாழ்வுரிமையை பெற்றுந்தந்தால் அதுதான் அக்கட்சியின் வெற்றி.இதனை விடுத்து மத அரசியல் செய்தால் அக்கட்டி அழிவுப்பாதைக்கே செல்லும்.மத அரசியலில் செல்லும் அனைத்து நாடுகளும் அழிவுப்பாதைக்கே செல்லும்.
இன்னும் இருபது வருடங்களுக்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது, மேலே சொன்னமாதிரி சமூகப்பணிகளின் அக்கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டால், ராகுல் காந்தி நேருவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆட்சி மாற்றம் நடக்கவேண்டும்.(கோமாளி மூன்றாவது அணியால் அது நடந்தால் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.) இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
எனக்கு அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக கிடையாது,பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை கூறவும். குறிப்பாக பாஜக , காங்கிரஸ் ஆதரவாளர்கள்.
இந்த தேர்தல் முடிவு காட்டும் செய்தி காங்கிரஸ் கட்சி வடக்கில் மாநிலக் கட்சிகளிடம் இழந்த செல்வாக்கினை ராகுல் காந்தியின் கவர்ச்சியால் மீண்டும்
பெறத்தொடங்கியுள்ளது. காங்கிரஸின் இந்த வளர்ச்சி கண்டிப்பாக தொடரும், காங்கிரஸின் இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய தோல்வி அடையப்போவது முலாயம்சிங், லல்லு , கம்யூனிஸ்ட்கள்,சரத்பவார் மற்றும் மாயாவதியின் கட்சி.
தனிப்பட்ட முறையில் மாயாவதி தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் ஒழியவேண்டும் என நினைப்பவன் நான். அதன் ஓட்டுக்கள் காங்கிரஸிகும், பாரதீய ஜனதாவிற்கும் சென்றடைய வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சி ஏன் தோற்கிறது? முதற்காரணம் கிராமப்பகுதிகளில் உள்ள காங்கிரஸின் செல்வாக்கை ராமர் கோவில் கட்டுகிறேன் என்று சொல்லி ஓட்டாக ஒரு நாளும் மாற்ற முடியாது.
இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் வாரிசு மன்னரையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.நேரு குடும்பம் இல்லாமல் இருந்தால் காங்கிரஸ் காணாமல் போயிருக்கும் என்பதும் உண்மை.வாஜ்பாயிக்கு இருந்த செல்வாக்கை வைத்து பாஜக கட்சி வளர்த்திருக்கலாம், ஆனால் பாஜகவின் தலைவராக ஒரு வாரிசு வாஜ்பாய் இருந்திருக்கவேண்டும்.
அத்வானியை ஓரளவிற்கு மக்களுக்கு தெரியும், ராஜ்நாத்சிங்கை யாருக்கு தெரியும், அவர் தனியாக நின்றால் 500 ஓட்டு கூட வாங்கமாட்டார்.மன்மோகனும் வாங்கமாட்டார், ஆனால் அவருக்கு நிர்வாகத்திறமை இருக்கிறது.ராஜ்நாத்துக்கு ?
இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுகிறோம் என்ற வெற்றுக்கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக முன்னேற்ற அரசியலில் அது ஈடுபடவேண்டும்.என்னதான் சொன்னாலும் பாஜக இந்துக்களின் கட்சி என்ற முத்திரை போகப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலையில் பெரும்பாண்மை இந்துக்களுக்கான கட்சியாகவும் இல்லை என்பதும் உண்மைதானே. எத்தனை தலித்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்? காரணம் அது உயர்சாதியத்தை விட்டு வெளியில் வரவேண்டும்.
இந்துக்களின் காவலன் என்று சொல்ல நினைத்தால், முதலில் அக்கட்சி செய்யவேண்டியது, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருவது.வழிபாட்டு உரிமையை மறுக்கும் உயர்சாதி இந்துக்களிடம் எடுத்துச்சொல்லி புரியவைப்பது பாஜக மற்றும் அது சார்ந்த இந்து இயக்கங்களின் கடமை.இதனை தமிழகத்தில் கடவுள் மறுப்பு இயக்கங்கள், திருமாவளவன் போன்றவர்கள் கருவறை நுழைவு போராட்டங்கள் நடத்தியபோது நாத்திகனுக்கு என்ன கவலை என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம். இப்போது அந்தக்கடமை ஆத்திகர்களும் இந்து மத இயக்கங்களுக்கும் உண்டு.
மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக முன்னேற்றத்தை கொண்டு வர முனைவது, மாயாவதியை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்து அவரை தலைவராக்கலாம்.
இது பெரியார் செய்த வேலை, ஆமாம் இதைத்தான் பாரதீய ஜனதா செய்யவேண்டும். அவர் ஏற்படுத்திய கலகம் விழிப்புணர்வை கொடுத்தது.
பாஜக இது போன்ற சமூகத்தொண்டுகளில் ஈடுபட்டு இந்துக்களுக்குள் இருக்கும் சாதி வெறுப்பு உணர்வை களைந்து அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வாழ்வுரிமையை பெற்றுந்தந்தால் அதுதான் அக்கட்சியின் வெற்றி.இதனை விடுத்து மத அரசியல் செய்தால் அக்கட்டி அழிவுப்பாதைக்கே செல்லும்.மத அரசியலில் செல்லும் அனைத்து நாடுகளும் அழிவுப்பாதைக்கே செல்லும்.
இன்னும் இருபது வருடங்களுக்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது, மேலே சொன்னமாதிரி சமூகப்பணிகளின் அக்கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டால், ராகுல் காந்தி நேருவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆட்சி மாற்றம் நடக்கவேண்டும்.(கோமாளி மூன்றாவது அணியால் அது நடந்தால் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.) இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
எனக்கு அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக கிடையாது,பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை கூறவும். குறிப்பாக பாஜக , காங்கிரஸ் ஆதரவாளர்கள்.
Labels:
அரசியல்,
குடுகுடுப்பை,
சமூகம்
Subscribe to:
Posts (Atom)
