Monday, December 8, 2008
தஞ்சாவூரா, கொங்கா,நெல்லையா முதல் சுற்று. ஜோடி நம்பர் 1 பாணி விமர்சனம்.
இப்போ இதுவரைக்கும் இடப்பட்ட பதிவுகள் நம்ம ஜட்ஜஸ் 3 பேரும் விமர்சனம் பண்ணப்போறாங்க
தஞ்சை பற்றி.
பீவா: தஞ்சாவூர் போஸ்ட்ல பாத்தீங்கண்ணா குடுகுடுப்பை மொக்கையா ஸ்டாட்ட் பண்ணாரு, நாலு போஸ்ட் போட்டாரு ஆனா அது மொக்ஸ் ஆவும் இல்ல சக்கையாவும் இல்ல. மொத்தத்தில கொஞ்சம் நெறயாவே மிஸ்ஸிங்.
பங்கீதா: சோ i dont know what to say abt it, tanjore பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எல்லா ஊர் பத்தியும் விரிவா சொல்லனும் அடுத்த roundla சொல்லுங்க.
பயிஸ்வர்யா : tanjore பத்தி சொல்லிட்டு இன்னும் காவிரி பத்தி சொல்லவே இல்ல, somthing is missing yaar, ஒரு பெப்பியா இல்லன்னுதான் சொல்வேன்.
கொங்கு பற்றி:
பீவா:என் சொல்ரதுங், எனக்கு ஒன்னும் புரியலங்.. மகேசு கலக்கிட்டாருங்..ஒரே பதிவில நிறைய விசயம் சொல்லிட்டாரு, குறிப்பா அந்த உச்சா போறதுக்கு பத்து நிமிசம் டைமெல்லாம் உச்ச கட்ட காமெடிங்க.
பங்கீதா:எனக்கு ஒன்னுமே புரியலங்க, கொங்குத்தமிழ் இல்லாம கொங்கிலீஸ்ல சொல்லி இருந்தா நாங்களும் தங்கிலிசுல விமர்சனம் பண்ணிருபோம். ஆனாலும் its fantastic post னு தான் சொல்வேன்.
பயிஸ்வர்யா : கொங்குன்னா எனக்கு என்னனே தெரியாது, நான் ஏதோ நொங்குன்னு நெனச்சேன்.டீப்பா பாத்தப்புரம்தான் தெரிஞ்சது, business ,industries its a very good informative post. keep it up. அடுத்த ரவுண்டுக்காக நானும் வெயிட் பண்றேன்.தென் அந்த சிறுவாணி வாட்டர் இஸ் பைன், இட்ஸ் பெட்டர் தேன் எனி அதர் மினரல் வாட்டர்.
நெல்லை பற்றி:
பீவா: நசரேயன் நிறைய spelling mistakes ஓட ஆரம்பிச்சுருக்கிறதா கொத்ஸ் சொல்றார் அதெல்லாம் கொஞ்சம் புத்திய தீட்டி சரி பண்ணனும், அவரு பாட்டுக்கு அருவா அது இதுன்றார். அடுத்ததா நாங்கூட ஒரு south subject பண்ணனும் உங்க டைரக்சன்ல அதுனால சும்மா விடுகிறேன்.
பங்கீதா:திருநெல்வேலின்னாலே அல்வாதான் ஞாபகத்து வருது, நீங்க அருவாவையும் அல்வாவையும் மிக்ஸ் பண்ணி நல்ல டேஸ்டா இருந்துச்சு.i like the mix of roughness and the softness.
பயிஸ்வர்யா : தாமிரபரணி ஹரியோட படம்தானே அதுல water flow வே இல்லன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.movie la எப்படி water flow ஆகும். அதுல நதியா நடிச்சத பத்தி நீங்க சொல்லிருக்கலாம்.
வாசகர்களே அடுத்தடுத்து கொங்கு பற்றி பழமைபேசி, தஞ்சை கோவில்கள் திருவிழாக்கள் இன்ன பிற பற்றி ஜீவன் மயிலாடுதுறை,திருவாரூர் பற்றி சில பிரபலஙகள் விரைவில், நெல்லையை பற்றி நசரேயனும் தொடர்வார்க்ள். சில வாரங்களுக்கு பிறகு பிற மாவட்டங்கள் பற்றிய பதிவுகள் தொடரும்.
புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...
அன்புடன் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
(இது ஒரு விளம்பரம்)
Friday, December 5, 2008
நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 1
பொறுப்பு அறிவித்தல் :ஒரு முன்னுரையாக நினைத்து கொண்டு,கொஞ்சம் சுய விளம்பரம் அதிகம் இருந்தாலும் பொறுத்து கொண்டு உங்களுடைய மேலான கருத்துகளை பின்னூடத்திலே தெரிவிக்கவும்
நெல்லை மாவட்ட மக்களை பத்தி எழுதனுமுன்னு வருங்கால முதல்வர் ஒரு கோரிக்கை வச்சாரு, முதல்வர் சொன்னதை மறுக்க முடியலையே தவிர என்ன எழுதன்னு தெரியலை.
அருவாள் தயாரிப்புக்கு திருப்பாச்சி சொந்தமானாலும், அதை எப்படி பயன் படுத்துறதுன்னு திருநெல்வேலி மக்களுக்கு தான் நல்லா தெரியுன்னு சொல்லுவாங்க(?), ஒரு பொருளை எப்படி பயன்படுத்தன்னுமுன்னு ரெம்ப நல்லா தெரியும், அதனாலே என்னவோ தென் இந்தியாவிலே அதிக கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரமாக நெல்லை திகழ்கிறது(தகவல் தப்பா இருந்தா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்).
மங்களூர் கணேஷ் பீடி, சொக்கலால் பீடி சேட்டு இன்னைக்கு பணத்தை எண்ண முடியாம கட்டிலுக்கு அடியிலே வச்சி படுத்து தூங்குவதுக்கு எங்க மாவட்ட தாய்குலங்கள் தான் காரணம், இங்க உள்ள பிரசித்தி பெற்ற தொழில்களில் ஒன்று பீடி சுத்துவது, தாய் குலங்கள் மட்டுமல்ல, சில வீடுகளில் தந்தை குலங்களும் பீடி சுத்துவாங்க, எனக்கே பீடி இலையை எப்படி வெட்டுவது, சுத்துவது எல்லாம் தெரியும், இவ்வளவும் சொன்ன நான் அதை குடிக்கவும் தெரியுமுன்னு சொல்லிகிறேன், அன்புமணி ஐயா பார்க்க மாட்டாரு என்கிற தைரியத்திலே சொல்லிபுட்டேன், சீக்கிரமா நம்ம புதுகை.அப்துல்லா அண்ணன் மாதிரி விட்டுடனும்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு அடுத்தபடியா சங்கம் வைத்து சாதி வளர்க்கிற மாவட்டம், தெருவுக்கு குறஞ்சது நாலு சாதி சங்கம்மாவது இருக்கும் அவ்வளவு பெரிய ஆளுங்க நாங்க,உண்மையை சொல்லி புட்டேன்ன்னு ஊரு நாட்டாமைகள் எல்லாம் அருவாளை தூக்கி போட்டு கிட்டு வரவேண்டாம் என வருங்கால முதல்வர் சொல்லுறாரு.
பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கிறார்கள், தஞ்சை மாதிரி எங்க ஊரு எல்லாம் நெற்களஞ்சியம் இல்லை,அதற்க்காக நெல் விளையாமலும் இல்லை.குடும்பமாக விவசாயம் செய்யும் பங்காளிகள் பிரச்சனைன்னு வந்தா ஒரு பிடி மண்ணை ௬ட யாருக்கும் விட்டு தரமாட்டாங்க, அவ்வளவு பாசக்காரங்க, தாமிர பரணி நதி ஓடுதுன்னு சின்ன வயசுலே இருந்து படிச்சு இருக்கேன், அதிலே தண்ணி வந்தா அதையே அதிசயமா எல்லாரும் போய் பார்ப்பாங்க.
அல்வாக்கு பேரு போனது நெல்லை,கடை பேரு தான் இருட்டு கடை, அந்த கடைக்கு எப்போதுமே இருட்டே கிடையாது.திரைப் படங்களிலே அல்வாவிற்கு பல அர்த்தங்கள் சொல்லி ரெம்ப பிரபல படித்தினது சத்தியராஜ்(பதிவர் கிடையாது)
மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு, அந்த மலைகளின் நடுவே ஏழைகளின் கொடைக்கானல்(?) ஆகிய குற்றாலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம், நிறைய திரைப் படப் பாடல்கள் தென்காசி சாரல் பத்தி வந்து இருக்கு, ஒரு கொசுறு தகவல் எங்க ஊரு குற்றாலத்திற்கு 25 கிலே மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்களின் வாழ்க்கை முறை, வணிகம், தொழில்,கல்வி ௬டங்கள்,பல்கலை கழகங்கள் எல்லாம் அடுத்த பாகத்திலே பார்க்கலாம்
Thursday, December 4, 2008
கொங்கு நாடு - ஒரு அறிமுகம்
நான்ருக்கறதுங் ஜமீன் காளியாபொரமுங். பொள்ளாச்சிக்கு தெக்காலைன்னு வெச்சுக்கங்ளேன். படிச்சதெல்லாம் பூலாங்கெணத்துலயுமு பொள்ளாச்சிலயுமு. பூலாங்கெணத்துல படிக்கைல நாராயணசாமி நாயுடு நகர்ல அப்பத்தா ஊட்லதே இருந்தனுங். நெதமு பிரிமியர் மில்ல தாண்டித்தான் போவமுங்.அப்பத்தான் படிச்சேன் கோயமுத்தூருமு சுத்து வட்டாரமு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்"னு. (இந்தப் பேரு நம்ம வாய்ல நொளஞ்சு ஒளுங்கா வெளிய வர மாசம் மூணாச்சு.)
அது என்ன கணக்குன்னா மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பக்கத்தாப்டியேங்கறதால காத்துல கசகசன்னு எப்பவும் நல்ல ஈரப்பதம் இருக்குதாமா. பஞ்சு நல்லா திரிஞ்சு வாரதுக்கு எதமா. அதுனாலாயே இங்கிட்டு நூல் மில்லுக எக்கச்சக்கம். பின்னி மில்லு, லெச்சுமி மில்லு, சோமசுந்தரா மில்லு, ராதாகிஸ்ணா மில்லு, பிரிமியர் மில்லு, வெங்கடேசா மில்லு, விசியகுமார் மில்லு, திருமூர்த்தி மில்லு, கொங்குரார் மில்லுன்னு பல மில்லுக. கோடவே சிறுசும் பெருசுமா பல ஜின்னிங் பேக்டரிக, வீவிங் மில்லுக, ஸ்பின்னிங் மில்லுக. பளய மிசினுகள ஏலத்துல தூய்ட்டு வந்து, 300 ஸ்பிண்டல்க இருந்தாக்கோட போதும். போர்டுக்கு சந்தனங் குங்குமந் தெளிச்சு மாலையப் போட்டு ஸ்பின்னிங் மில்லு ஆரம்பிச்சர்லாம். சும்மா 3sலேந்து 20s வரைக்கி ஓட்டுனாக் கோட லாபந்தேன். அதென்ன 3 20 ன்னு கேப்பீங்க. சுருக்கமா சொல்லோணும்னா சின்ன நெம்பர்னா நூல் கொஞ்சம் வண்ணமா இருக்கும்... 3 எல்லாம் ஜமுக்காளம், பெச்சீட்டுகளுக்கு.. பெரிய நெம்பர்னா நூல் நயமா சன்னமா வேட்டி சட்டைகளுக்கு. ஜின்னிங் பேக்டரிக பஞ்சை நல்லா அடிச்சு பதமா தாரது. வீவிங்கு உங்குளுக்கே தெரியும்.
இதொரு பக்கம். இன்னோரு பக்கம், கோயம்புத்தூரு பூரா பவுண்டரிக. இரும்பு வேலை அம்புட்டும். எல்லெம்டபிள்யூ, எல்ஜி இவுங்கள்லாம் பெரிய ஆளுங்க. பொள்ளாச்சிலிருந்து கோயமுத்தூர் போற வளியெல்லாம் மில்லுக, பேக்டரிக. ரேடியேட்டரு, பாய்லரு, பஞ்சு மில்லு மிசின்க, பேப்ரிகேசன் கம்பெனிகன்னு கொத்துக் கொத்தா இருக்கும். இஞ்சினீரிங் கம்பெனிகளுக்கு கொறச்சலே இல்ல. கொங்கு நாட்டு டாடா அய்யா மகாலிங்கத்தோட ஏ பி டி யும், ஆனமலை இஞ்சினீரிங்கும், சக்கரை மில்லுகளும் கொங்கு செஞ்ச புண்ணியம். பி எஸ் ஜி, எல்ஜி, லெச்சுமி குரூப்பு, பிரிமியர் குரூப்பு, ஸ்டேன்சு எல்லாம் தொழில் துறைக்கு ராசபாட்டை போட்டுக் குடுத்த புண்ணியவானுக. அங்கிட்டு மேட்டுப்பாளையத்துல விஸ்கோசு மில்லு. உடுமலப்பேட்டைக்கு பக்கத்தால பள்னி போற வளீல, அமராவதி ஆத்தைச் சுத்தி மட்டும் 7 பேப்பர் மில்லுக, ஒரு சக்கரை மில்லு, ஒரு மாட்டுத்தீவன மில்லு. மதுக்கரை சிமிட்டிக் கம்பெனிய நம்பியே ஒரு 100 குட்டிக் கம்பெனிக. இம்புட்டு இருக்கறதால மக்களுக்கு வேலைக்குப் பஞ்சம் இல்ல.
படிப்புக்கு பாலிடெக்னிக்குக என்ன, ஆட்ஸ் காலேசுக என்ன, இஞ்சினீரிங் காலேசுக என்ன. படிப்புமுங் செரி, தொழிலுமுஞ் செரி, கொங்குக்கு மும்மூர்த்திக உடுமலை ஜி வி ஜி குரூப்பு கெங்குசாமி நாயுடு அய்யா, பொள்ளாச்சி ஏ பி டி குரூப்பு அருட்செல்வர் மகாலிங்கம் அய்யா, கோவைக்கு பி எஸ் ஜி குரூப்பு கோவிந்தசாமி நாயுடு அய்யா. இவிக மூணு பேருமு இல்லீன்னா கொங்கு நாடு எப்பிடி இருக்கும்னு நெனச்சுக் கோடப் பாக்கமுடீல. அமராவதி சைனிக் ஸ்கூலுமு, திருமுர்த்தி நகர் டீச்சர் ட்ரைனிங் ஸ்கூலுமு நெம்ப பேமஸ். பெருசா இல்லாட்டியும் ஒரு ஐ டி ஐ யாச்சும் முடிச்சுப் போட்டு பிட்டராவோ, லேத் மிசின் ஓட்றதுக்கோ போயரலாம். சிப்டு முடிஞ்சு வாரைல அல்லார் தலைலயுமு பஞ்சு ஒட்டீட்ருக்கும். பஞ்சு மில்லுகள்ல ஆம்பளைகள விட பொம்பளையாளுகதான் அதிகம். ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும், தொழில்ல நெம்பவே ஊக்கமான ஆளுக. (பொறுமையா வேலை பாப்பாகல்ல. ஆம்பளையாளுக பீடி குடிக்கறேன், ஒண்ணுக்குப் போறேன்னே ஓப்பியடிச்சுருவாங்க. அதுக்குன்னே பஞ்சு மில்லுகள்லயெல்லாம் கக்கூஸுக்குப் போறதுக்கு சூப்ரைசர் கட்ட டோக்கன் வாங்கீட்டுதான் போகோணும். 10 நிமுசந்தேன். இல்லாட்டி இவிகளையெல்லாம் மேக்க முடியதல்ல. )
வெவசாயம்னு பாத்தம்னா புஞ்சைன்னு அதிகம் கெடயாது. மாரியம்மன் புண்ணியத்துல மளை வருது. கொளங்குட்டைக நெம்புது. பி ஏ பி வாக்யாலு, திருமூர்த்தி டேமு, அமராவதி டேமு, ஆளியாறு டேமுன்னு தண்ணி சேத்தி வெச்சுக்க நல்ல வசதி. நெல்லு, பருத்தி, கரும்பு, போயல, சூரியகாந்தி, ராகி, தட்டு, சோளம், உளுந்துன்னு எல்லாம். முருங்கை, அவரை, தொவரைன்னு அப்பப்ப. தக்காளி, வெங்காயம் சீப்படும்.
தென்னந்தோப்புக ஒரு பெரிய தொழில். அக்ரி காலேஜுமு, தென்னை மேம்பாட்டு ஆராச்சி ஆபீசுகளும் போட்டி போட்டுக்கிட்டு மூணு வருசம், ரெண்டு வருசம், குட்டை, நெட்டை, ஐப்பிரிட்டுன்னு ஏகத்துக்குமு தென்ன ரகங்க கண்டு புடிச்சதுல தோப்புக்காரவிகளுக்கு நல்ல லாபம். கோடவே மட்ட, நாருன்னு எச்சுக் காசு. தேங்கா நாருல இருந்து கவுறு, மெத்தன்னு அது ஒரு தனி தொழில்.
ம்ம்ம்ம்... எல்லாம் ஒரு மூச்சு படிச்சு முடிச்சுட்டீங்களா... இப்ப தரைக்கு எறங்கி வருவமா? இந்த கோயம்புத்தூர்ல குண்டு வெடிப்பு நடந்துச்சு பாருங்க.... அதுக்கும் பொறவு எல்லாம் மாறிப்போச்சுங்க. ஆருதேன் அப்பிடி எங்கூரு மேல கண்ணு வெச்சாங்களோ... தொழில் துறையே நசுங்கிப் போயி... என்னத்தன்னு சொல்றது போங்க? பெரிய கம்பெனிகள்லாம் எப்பிடியோ தாக்குப் புடிச்சுக்கிடாக... சின்னவங்க பாடுதேன் திண்டாட்டமாப் போச்சு. நானெல்லாம் டிப்ளமாப் படிச்சுப் போட்டு பஞ்சு மில்லு மிசின் எரக்சன்லயே நல்ல வருமானம் பாத்தேன். பொறவு பஸ் பாடி, ட்ரைலரு, கதிர் அடிக்கற மிசினு, க்ரஸ்ஸரு, கட்டல் பீரோன்னு பாக்காத தொழிலில்ல. இப்ப நான் பொளைக்கிற பொளப்பு பாத்தீகல்ல. இப்ப என்ரான்னா தோப்புல தென்ன மரங்களுக்குமுங் கோட என்னமோ செலந்தி நோயாமா...அந்தக் கெரகம் வந்து மரங்க மொட்ட மொட்டயா நிக்கிறதப் பாத்தா எங்கிட்டாச்சி கண்ணு காணாத எடத்துக்கு ஓட்ட்றலாமாட்ட இருக்கு. செரி எடந்தாங் கெடக்குதே, வெவசாயந்தேஞ் செய்ய முடீல, காத்தாலை போட்டா கரண்டு வித்து சம்பாரிக்கலாம்னா, ஈ பீ காரவிக கிட்டருந்து கைக்கு காசு வாரதுக்குள்ள இதுவும் ஒரு பொளப்பான்னு ஆயிருது.
இந்தக் கூத்தைக் கேளுங்க. பொள்ளாச்சில்ருந்து வால்பாறை போற வழில, காடம்பாறைல ஒரு நீர் மின் திட்டம் போட்டு, செர்மனில்ருந்து ஆளுக வந்து மலைய 3 கிலோமீட்ரு கொடஞ்சு, உள்ளார செனரேட்டரு, டர்பைனெல்லாம் வெச்சு கரண்ட் எடுக்கலாம்னாக. அதுமு எப்பிடி? மலை மேல ஒரு கொளமாட்ட இருக்குது. அங்கிருந்துதேன் ஆளியாறு டேமுக்கு தண்ணி போகுது. அந்தத் தண்ணிய பைப் போட்டு கீள கொண்டாந்து டர்பைன ஒட்றதாமா. கெடைக்கிற கரண்டுல பகல்ல கொஞ்சம் மிச்சம் பண்ணி மறுக்கா மோட்டர் போட்டு டேமுலேந்து தண்ணிய மேல ஏத்தறதாமா. நாலே நாலு எளுத்து படிச்ச எனக்கெ இதெல்லாம் வேலைக்காகுமா, நட்டமாகாதான்னு தோணும்போது, நாப்பது எளுத்து படிச்ச மகராசனுக கொஞ்ச நாள் ஒட்டிப் பாத்துப்போட்டு, செலவு நெம்ப புடிக்குதுன்னு திட்டத்தை கெடப்புல போட்டுட்டாங்க.
என்னமோ போங்க, இப்ப இது பளய கொங்கு மாதரயே இல்ல. என்னமோ வண்டி ஓடுது. உனி இது மறுக்கா பளய மாதர வருமான்னுந் தெரீல. கோயமுத்தூர் பரவால்ல. இப்ப கே எம் சி எச், தமிழ்நாடு, அரவிந்த் கண்ணாஸ்பத்திரின்னு ஆஸ்பத்திரிக நல்லா போகுது. என்ன செய்யிறது... வெசாதி பெருகிப் போச்சு பாருங்க... ஒண்ணுஞ் சொல்றாப்டி இல்லீங். என்னமோ உலகத்துல அங்கங்க பேங்குக திவாலாகிக்கிட்டே வருதுன்னெலாம் பேப்பர்ல படிக்கிறோம். தொழிலெல்லாம் இன்னுமு மந்தமாகும்கிறாங்க. ஆனா ஒண்ணுங்க... நாங்கள்லாம் தொழில் வெறி புடிச்ச ஆளுங்க. எதயாச்சும் தட்டிக் கொட்டி தலகீளாத் தண்ணி குடிச்சாச்சும் மேல வந்துருவோமுங். அது நம்ம ரெத்தத்துலயே இருக்குதுங். பாத்துக்கிட்டே இருங்க.
சும்மா உங்க கிட்ட எங்கூரப் பத்தி சொல்லோணும்னு தோணுச்சுங். இன்னும் நெறய வெவரமாச் சொல்லோணும்னு ஆசைதேன். இன்னோரு நா சொல்றேன். அதுக்குள்ள நம்ம மணியண்ணன் - அதேன் பழமைபேசி - எதாச்சி அதிகத் தகவல்களோட வந்தாலுமு வருவாரு. இம்புட்டு நேரம் நாஞ் சொல்றதைக் கேட்டுக்கிடுருந்ததுக்கு நன்றிங். வேலை கெடக்குதுங்.நெம்ப நேரமானா அப்பறம் அம்மினி கட்ட பேச்சுக் கேக்கோனுங். வரட்டுங்ளா?
தஞ்சை மாவட்டம் அறிமுகம் தமிழும் தஞ்சையும் ---பாகம் 4
சில பிரபலமான தமிழறிஞர் பெயர்கள் .
தமிழறிஞர் மறைமலை அடிகள்
தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர்.
தமிழறிஞர் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார்.
தமிழறிஞர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்.(இவரது கொள்ளுப்பேரன் என்னோடு படித்தவர்)
வாழும் தமிழறிஞர் தமிழக முதல்வர் கலைஞர்.
விடுபட்டவர்கள் நிறைய ------
போன்ற தமிழுக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள் வாழ்ந்த தஞ்சாவூர்க்காரர்கள் இன்னும் தங்களது தமிழ் உணர்வை இழக்கவில்லை என்பதை பாவேந்தன் பாரதிதாசன் ஆங்கிலப்பள்ளி, மழலையர் ஆங்கிலப்பள்ளி என்றெல்லாம் தமிழே சொல்லிக்கொடுக்காத பள்ளிக்கு கூட தமிழில் பெயர் வைத்து தங்கள் தமிழ்ப்பற்றை காட்டுவதில் வல்லவர்கள்.என் மகளுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமைப்படுவதில் எவருக்கும் சலைத்தவர் அல்லர்.
தஞ்சை பற்றி எழுத நிறைய ஆசை நேரமின்மையால் முடியவில்லை. மேலும் நான் ஒன்றும் புதிதாக எழுதப்போவதில்லை, மொக்கையாக ஆரம்பித்து வேறு வடிவில் வந்து நிற்கிறது.அடுத்த பகுதி நண்பர் ஜீவன் அவர்களை எழுத கேட்டிருக்கிறேன் விரைவில் அவரின் பதிவு.
தொடரும் .....
தொடுப்புகள்
தமிழ் பலகலைக்கழகம்/சங்கம்
http://karanthaitamilsangam.com/
http://www.tamiluniversity.ac.in/
உ.வே.சா
http://bsubra.wordpress.com/2007/01/29/tamil-vu-internet-university-digital-library-via-ponvizhi-ocr/
http://rajappa-musings.blogspot.com/2005/03/u-ve-swaminatha-iyer-tribute.html
http://ta.wikipedia.org/wiki/உ._வே._சாமிநாதையர்
மறைமலை அடிகள்
http://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்
பொது
http://thamizthoughts.blogspot.com/2008/10/blog-post_12.html
http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://www.arusuvai.com/samayal/thanjai.html
Wednesday, December 3, 2008
தஞ்சை மாவட்ட மக்கள் நகைச்சுவையான அறிமுகம் - உணவு- பாகம் 3
பாகம் 2
சமூக சீர்திருத்ததில் தஞ்சையின் பங்குக்கு முன்னால், இன்னும் உணவு, வாழ்க்கை முறை, கல்வி, தமிழ் அறிஞர்கள் பற்றி எழுதுகிறேன்.பதிவு ஒரு சீரான நேர்கோட்டில் செல்லாமல் மாறி மாறி செல்கிறது மன்னிக்கவும்.ஒருங்கினைந்த தஞ்சைப்பகுதியின் வரலாறு நான் எழுத நினைக்கவில்லை அதற்கான அறிவும் இல்லை,இவர்களின் பொதுவான பழக்க வழக்கங்களை நகைச்சுவையாக அனுகுவதே என் நோக்கமே.
மீன் உணவு ஒரு பிரதான உணவு, கடலோர தஞ்சையினர் பெரும்பாலும் கடல் மீன்களை விரும்பி சாப்பிடுவர்.குறிப்பாக நாகைக்கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் கோலா மீன் அநேகரின் விருப்ப மீனாக இருக்கும்.இதன் தலையை உண்ண மாட்டார்கள், சில வீடுகளில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள் ஏதோ விஷம் உள்ளது சாப்பிடும் கோழி கூட இறந்துவிடும் என்று, எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை.இந்த கோலா மீன் தமிழகத்தின் வேறு பகுதிகளில் உண்டா எனத்தெரியவில்லை.
இந்த மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தும் நாகை மீனவர்கள், இயற்கை மற்றும் இலங்கையின் சீற்றங்களைத் தாண்டிதான் உயிர் வாழ வேண்டிய கட்டாயம்.இவர்கள் வாழ்வில் ஒருநாள் ஒளி பிறக்கும் என நம்புவோம்.
தஞ்சை நகர்ப்பகுதி ஒட்டியுள்ளவர்கள ஆத்து மீன்,மற்றும் ஏரி மீன் விரும்பிகள் குறிப்பாக விரா மீன்,சேற்று நாத்தம் அடித்தாலும் ஏரிக்கெழுத்தி,ஆறா,குறவை போன்ற மீன்களும் விருப்பமான மீன் உணவு.வளர்ப்பு கெண்டை மீன்கள் மலிவான ஒரு மாற்று மீன். இவர்கள் பெரும்பாலும் கடல் மீன் உண்ணமாட்டார்கள், குறிப்பாக அண்ணன் ஜோசப் பால்ராஜ் கல்லணை மீன் சாப்பிடுவார் ஏன் கருவக்காய் கூட சாப்பிடுவார்,ஆனால் கடல் மீன் உண்ணமாட்டார்(உண்மையா?).கோலா மீன் தஞ்சையை அடையும்போது கோழா மீனாகிவிடும்....இரண்டு வகை மீனையும் வகை தொகை தெரியாமல் சாப்பிடும் என்னைப்போன்ற ஏகாம்பரமும் உண்டு.
பின்னூட்டத்தில் நண்பர்கள் சொன்னது போல் கும்பகோணம் டிகிரி காப்பியின் சுவையே அலாதிதான், தஞ்சையில் நான் படிக்கும் போது வெங்கடா லாட்ஜ்ல் ஒரு காப்பி குடித்துவிட்டு, அதே கடையில் உடனடியாக குடிக்க வெட்கப்பட்டு பக்கத்தில் உள்ள காபி பேலஸில் அடுத்த காப்பி குடிப்பதற்கு அதன் சுவையே காரணம். ரயிலில் வரும்போது கும்பகோணம் அருகில் உள்ள ஊரில்(பேரளம்) ஒரு வடை விற்பார்கள் அருமை.
திருநெல்வேலி அல்வா அளவு புகழ் பெறாவிட்டாலும், திருவையாறு அசோகாவின் சுவை தனித்துவம் வாய்ந்தது, தஞ்சைக்கு வெளியில் இந்த இனிப்பு வகை வேறு எங்கும் உள்ளதா என தெரியவில்லை,இதன் முக்கியமான மூலப்பொருள் பச்சைப்பயறு அது மட்டும் தெரியும் பின்னூட்டம் மூலம் ஒருவெளை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
அசோகா செய்ய
சுட்டிக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்
மிகப்பெரிய ஊண் உண்ணியான எனக்கு தஞ்சையின் தனித்துவமான சைவ சாப்பாடு பற்றிய அறிவு எதுவும் இல்லாததால் பின்னூட்டத்தில் வரும் தகவல்கள் வெட்டி ஒட்டப்படும்.நாகை,திருவாரூர்,கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை சிறப்பு உணவு இருக்கலாம் தெரியவில்லை.
காஞ்சி,சின்னாளப்பட்டு மாதிரி இங்கேயும் திருபுவணம் பட்டு சேலைத்தறிகள்,கும்பகோணம் பகுதியில் உண்டு,அதற்கு மேல் எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. பின்னூட்டத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.விவசாயம்,சீவல் தாண்டிய தொழிலாகையால் இதனை செய்பவர்கள் சவுராஷிட்டிரா இனத்தை சார்ந்தவர்களே பெரும்பாண்மையினர்.
தொழில் வளர்ச்சி குறைவான பகுதி ஆதாலால், ஒருமுறை மயிலை எம்.பியான மணிசங்கர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தபோது, எப்படி மணல் அடிச்சு ஒட்டகத்த கொண்டு வந்து விடப்போறாரன்னு சொன்ன கும்பகோணம் குசும்பர்களும் உண்டு...
தொடரும்...
Tuesday, December 2, 2008
தஞ்சை மாவட்டம் மற்றும் மக்கள் ஒரு மொக்கை அறிமுகம் - பாகம் 2
"நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா" பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தன் வயலுக்கு தண்ணீர் விடாத பணக்கார விவசாயியை நினைத்துக்கொண்டு அடுத்த நாள் வயலில் பார்த்த போது வயல் நிரம்பி இருந்தது, காரணம் ஒரு நண்டு வரப்பில் இட்ட ஓட்டையில் மேலே உள்ள பணக்காரர் வயலில் இருந்து தண்ணீர் கவிஞர் வீட்டு வயலில் பாய்ந்தது அப்போது பாடியதாக சொல்லும் பாட்டுதான் "நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா"
மேறகண்ட பாடலை போலியாக உண்மையாக்க மண்வெட்டியின் நீண்ட கைப்பிடியை வைத்து அடுத்தவர் வரப்பில் நண்டு போல் ஓட்டை போட்டு தன் வயலுக்கு திருட்டு தண்ணி பாய்ச்சும் உத்திராபதிகளும் இங்குண்டு, அதிலும் அந்த உத்திராபதி ஓட்டையை போட்டுவிட்டு அந்த வயல்காரர் வயலுக்கு சென்று விடாமல் வீட்டில் வந்து பேச்சும் கொடுத்துக்கொண்டிருப்பார்.
ராகவன் போன பதிவின் பின்னூட்டத்தின் சொன்னது போல் தஞ்சை மண்வெட்டியின் பாகம் இலேசாக இருக்கும்,ஏனெனில் இதன் பயன் வரப்பு வெட்டுவதற்கும், மடை கட்டுவதுமே ஆகும். பெரும்பாலும் மணல் சார்ந்த வயல்களே, பாறைகள் கிடையாது, (ஒருங்கினைந்த தஞ்சையில் மலையே கிடையாது ஆனால் மலைகளால் கட்டப்பட்ட பெரிய கோவில் உண்டு.)
கலை/தமிழ் வளர்ப்பிலும் இவர்கள் ஆர்வம் காட்டியவர்களே என்றால் அது நக்கல் இல்லை. ராசராசன் காலத்தில் இருந்தே சிவ வழிபாட்டுத்தளங்கள் அதை சார்ந்த கோவில்கள் உருவாக்கி சைவத்தமிழ் வளர்த்திருக்கின்றனர்.அரசர்கள் முதல் விவசாயிகள் வரை வெத்திலை மென்று கலை வளர்க்க பொருள் உதவி செய்துள்ளனர்.
திருவையாரு தியாகராஜ கீர்த்தனை இந்த ஊரின் கலையார்வத்தின் ஒரு சான்று மறைந்த மூப்பனார் அவர்கள் பான்பராக் போட்டுக்கோண்டே இதன் கமிட்டி தலைவராக இருந்தார், இப்போ வாசன் வெத்திலை போட்டபடி தலைவரா இருக்கார்னு நெனக்கிரேன்.
இதனை எதிர்த்து மக்கள் கலை இலக்கிய கழகமும் கர்நாடக சங்கீதம் தெருக்கூத்தின் திருட்டே என கலை வளர்ப்பார்கள். மொத்தத்தில் இரண்டும் வளர்ந்தது, உலகம் சுருங்குவதால்,வயிறு சுருங்குவதால் இனி கலையும் வேகமாக சுருங்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரக தலங்கள் அனைத்தும் (காரைக்கால் தவிர) இந்த மாவட்டத்திலே வரும் அனைத்தும் சிவாலயங்கள் நவக்கிரக வழிபாடு சிவ வழிபாட்டை விட அதிகம் இப்போது, சரியான சாலை வசதிகள் செய்து தரப்பட்டால் பக்தர்களுக்கும் வசதி சுற்றுலா வருமானமும் வரும், தேவேகவுடா இங்கே அடிக்கடி வந்து விடுர காவிரி தண்ணிய குடிச்சுட்டு போயி பிரதமர் கனவில பெங்களூர்ரூல தூங்கிரார்.
தஞ்சை நகரம் முதல் மாயூரம் வரை ஒரு காலத்தில் பெரும்பாண்மையாக இருந்த ஐயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து அமெரிக்கா வரை சென்று வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள். இவர்களின் அறிவை சரியான படி உபயோகித்து ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பயன்படும் படி ஒரு தீர்வு கண்டுபிடிக்க ஏன் முடியவில்லை?.இதில் இழப்பு அவர்களுக்கல்ல.
இந்த இடப்பெயர்ச்சி தஞ்சை விவசாயியையும் , விவசாய தொழிலாளார்களையும் இப்போது தாக்க ஆரம்பித்து இருக்கிறது, கடைசியில் அங்கே மிஞ்சப்போவது சிதிலமடைந்த சிவன் கோவில்கள் மட்டுமா?
கல்வி என்று எடுத்துக்கொண்டால் இந்த பகுதியில் நிறைய பேரு பட்டப்படிப்பு படிச்சதுக்கு பூண்டி கல்லூரிதான் காரணம்.இந்த கல்லூரி இது வரை கல்வியை வியாபாரம் ஆக்காத கல்லூரி எனச்சொல்லலாம்.கல்விக்காவலர் துளசி அய்யா வாண்டையார்(இவரைப்பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் உள்ளது) என்றால் அதில் கொஞ்சமும் தவறில்லை. இவர்கள் இந்த கல்லூரியை இன்னும் நல்ல முறையில் வளர்த்திருக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.
இவர்களின் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் உள்ளது, பெரும்பாலும் இங்கே பத்தாவதில் இரண்டுக்கு மேற்பட்ட மார்க் சீட்டு வாங்கியவனுக்கு தான் இடம் கொடுப்பார்கள், 400க்கு மேல் மார்க் வாங்கியவனை நன்கொடை வாங்கி சேர்த்து 100% ரிசல்ட் (3 பாடத்துக்கு கட்டாய டியூசன் வைத்து )கொடுப்பவர்கள் நல்ல பள்ளியா? யாரும் சேர்த்துக்க்கொள்ளாதவனை சேர்த்து 50% ரிசல்ட் வாங்க வைப்பவர்கள் நல்ல பள்ளியா பார்வையாளர்களின் கருத்துக்கு விடுகிறேன்.
மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திராவும் கல்விச்சேவையை நன்றாகவே அளிக்கிறது.மாயவரம் ஏ.வி.சி கல்லூரி,கும்பகோணம் மற்றும் திருவையாறு கலை/ஒவியக் கல்லூரிகளும் அடக்கம்.
வீரம் என்றால், வாய்ப்பேச்சு வீரர்கள், இம்மாவட்டத்தில் சாதிச்சண்டை குறைவின் காரணமும் இதுவே, சாளுக்கிய சோழ வம்சம் வந்ததன் பின் ஒரு வகையான கலப்பின் சோழர்கள் ஆனதால் கொஞ்சம் சகிப்பு தன்மை கூடுதலோ? சண்டை என்றால் முதலில் ஓட்டம் பிடிப்பவர்கள் இவர்களாத்தான் இருக்கும்.ஆனாலும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு, இன்னொன்று பல்லவப்பேரரசு பாண்டிய நாடு பேரரசே அல்ல என்று நக்கல் பேசுவோம்.என்னை யாரவது பின்னூட்டத்தில் அடிப்பேன் என்று சொன்னால் கூட நான் ஒடி விடுவேன், பெரிய ஓட்டப்பந்தய வீரனாக்கும்.
சமுதாய சீர்திருத்தம் பெரியாருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்த மாவட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இந்தக்கால சீர்திருத்த திருமணம் அவன் ஒழிக இவன் ஒழிக என்று கூறி மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற நிலையில் உள்ளது சாபக்கேடு.சாதியக்கட்டுமானங்கள் இன்னும் உயிரோடு இருப்பினும் அதன் வீரியம் குறைவே, பெரியாரும் இதற்கு ஒரு காரணம்.
இதன் தொடர்ச்சியை மூன்றாவது பாகத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன்.
Monday, December 1, 2008
தஞ்சை மாவட்ட மக்கள் ஒரு மொக்கை அறிமுகம்.
உலகத்திலேயே வெத்திலை,பாக்கு போடர பழக்கம் அதிகம் உள்ளவங்க இந்த மாவட்ட மக்களாத்தான் இருக்கும், அதுலயும் பாக்கு கடிக்க முடியாதுன்னு அதுக்கு ஒரு மெசின் கண்டுபிடிச்சி உடைச்சு(சீவி) சீவல் ஆக்கி சாப்பிட்ட மகா சோம்பேறிகள்.இந்த ஊருல வேற தொழில் பண்ணமுடியாதுன்னு தெரிஞ்சு சீவல் கம்பெனி கண்ட தொழிலதிபர்களை எப்படி பாராட்டுரதுன்னே தெரியல.
தஞ்சாவூர் நகர்ப்புறத்து மக்கள் ரொம்ப கொஞ்ச பேரு,அவங்களும் பெரும்பாலும் பக்கத்து கிரமாத்திலேந்து புள்ளைங்கள டவுண்ல இங்கிலீசு பள்ளிக்கூடத்தில படிக்கவைக்க குடியேறுனவங்களாதான் இருப்பாங்க, ஏன்னா முன்னாடியே சொன்னா மாதிரி இங்கே சீவல் கம்பெனிய தவிர வேற ஒன்னும் இல்ல வேல செய்யரதுக்கு, கொஞ்சம் கவருமெண்ட் ஆபிஸ் இருக்கும் அதுல கொஞ்ச பேரு வேல செய்வாங்க.
அந்த காலத்தில காவிரி தண்ணில முப்போகம் விவசாயம் பண்ணிட்டு வெத்திலை போட்டு கொதப்பி ரோட்டுலேயோ , ரோட்டாவிலேயோ துப்பி தமிழ் / கலையெல்லாம் வளர்த்து இருக்காங்க. ஆனா இப்போ ஒரு போக விவசாயமும் டான்ஸ் ஆடரதுனால வெத்தில போட்டு துப்பிட்டு வெட்டிப்பேச்சோட நிறுத்திக்கிராங்க பெரிய மனுசங்க.
சில ஏக்கர் நிலம் வெச்சிருக்கிற கிராமத்து பெரிசுங்க டவுணுகாரங்கள பாத்து, என்ன அங்கேயெல்லாம் வரிசையில நின்னு கூப்பன் அரிசி வாங்கி திங்கிராங்கலாம். நமக்கென்ன வயல்ல முத்து மாதிரி வெளஞ்ச நெல்லு, பொண்ணி அரிசி வெல கூட விக்கும்னு வெளஞ்ச பொண்ணிய வித்துப்புட்டு, பள்ளத்து வயல்ல வெளஞ்ச மட்ட(இட்லி அரிசிய விட ரெண்டு மடங்கு பெரிசா இருக்கும்) அரிசிய வீடல அவிச்சு சோறும்,ரசமும் ஒட்டாம விக்கல் எடுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இருக்காது.
விவசாயக்கூலி மக்கள் அன்னக்கி கெடச்ச கூலி நெல்ல பாதி வித்து குடிச்சிப்புட்டு, கொஞ்சத்த அவிச்சி சாப்பிட்டு அடுத்த நாள் பத்தின கவலை இல்லாம தெரு விளக்கில உக்காந்து நடுச்சாமம் வரைக்கும் சீட்டாடிப்புட்டு, காலைல வேலைக்கு போவாங்க, ஆனா கர்நாடாகாரன் புண்ணியத்துல இப்ப இவங்கெல்லாம் வேலை தேடி திருப்பூர்.ஈரோடுன்னு போயி அங்க சீட்டு வெலாடுராங்க.
கிராமத்துல இருக்கிர டீனேஜ் இளைஞர்கள் எதுனா பக்கத்து ஊர்ல கல்யாணம், அதுவும் அறுவடை காலத்திலன்னா புது செருப்பு, வெள்ளை வேட்டி சட்டையோட 3 கிலோமீட்டர்ல உள்ள ஊருக்கு 20 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிர டவுண்லேந்து வாடகைக்கார் வரவச்சு காருல போயி இறங்கி ஒரு பந்தா உடுரது, ராத்திரில அப்பா பேசுவாருன்னு பயந்து பள்ளிக்கூடத்தில தூங்கிரது.
தொடர்புடைய இன்னொரு பதிவு முடிஞ்சா பாருங்க
குடுகுடுப்பை: சூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.
அப்படியே பின்னூட்டத்தையும் படிங்க, எதாவது நக்கலா கலக்கிருப்பாங்க.
கொஞ்ச நாள் கழிச்சு இன்னோரு பாகம்.. இதுக்கு இடையில் நெல்லை,கொங்கு பகுதி பற்றி நசரேயனும், பழமையாரும் பதிவு போடுவாங்க. ..அப்படியே ஒட்டு மொத்த தமிழ்நாடு பத்தியும் பதிவு போடமுடியுதான்ன்னு பாப்போம்.