Monday, July 13, 2009

சென்னை மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை சிரமங்கள்/நல்லது அது பத்தி ரம்யாவின் பார்வை!!


அனைவருக்கும் வணக்கம்!!

சென்னை மத்திய தர வர்க்க பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள். இவர்களைப் பற்றி பிரபல வலைப்பதிவர் குடுகுடுப்பையார் மற்றும் வருங்கால முதல்வர் என்னை எழுத அழைத்திருக்கிறார்.

ஆழமா சிந்திக்க வேண்டிய தலைப்பு இல்லையா. அதனால் தான் எழுத கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்க நண்பா!!

குடுகுடுப்பையார் கேட்டிருக்கும் மத்தியதரப் பெண்கள் சந்திக்கும் பல நிதர்சனங்களைப் பார்க்கலாம் வாங்க!!

முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு முன்

மத்தியதர குடும்பத்தில் பிறந்த பெண் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. இந்தப் பிரிவில் பிறந்த பெண்களுக்கு எல்லாமே சவாலாகத்தான் இருக்கின்றது. பெண்கள் எது செய்தாலும் சவாலாகத்தான் நினைக்கிறார்கள். அது இல்லை என்று சொல்ல இயலாது. ஆனால் தலைப்புக்கு ஏற்றவாறு எழுதுகின்றேன்.

வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவிய பின் தனது வேலைகளையும் முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டால், சில சமயம் வீட்டிற்கு அன்றாட தேவைகளான பொருட்கள் தீர்ந்து விட்டன என்பதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும். சகோதர மற்றும் சகோதரிகள் தேவைகளை ஆர்பாட்டத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் கடந்து தலையை சிலுப்பிக் கொண்டு கிளம்பினால், அரசு பேருந்து வராது. மீறி சில நாட்கள் சென்ற உடனே பேருந்தில் ஏறும் பாக்கியம் கிடைக்கும் . ஏறிவிட்டாலும் நிம்மதியாகப் போக முடியுமா?? ["வேறு என்ன இடி, உரசல்கள் இதைத்தான் கூறுகின்றேன் :( "]. தினம் தினம் சந்திக்கும் அவமானங்கள்தான் எவ்வளவு?


எண்ணிலடங்கா வேதனைகளுடன் அலுவலகத்தில் நுழையும்போது நேரம் கடந்திருக்கும். அதற்கு யார் யாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டுமோ அனைவரிடமும் தங்கு தடையின்றி கிடைக்கும். அவற்றையும் சமாளிக்க வேண்டும். மனதில் எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அலுவலகத்திருக்கு தாமதமாக வராமல் இருக்க, ஆட்டோவில் வரலாம், பல நாட்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை, கையில் தாராளமாக பணம் இருந்தால் ஹோட்டல்லே இருந்து வரவழைத்துச் சாப்பிடலாம். கையிருப்பு குறைவதால் காலை உணவு கட். ஏன்னா சில சமயங்களில் சாப்பிட கூட நேரம் இருப்பதில்லை அதான் காரணமா? எப்போதும் முகத்தில் ஒரு சோகம். அவளின் வசீகரம் வறுமையால் களவாடப் பட்டு விடுகின்றதே. இதெல்லாம் வேறே எங்கே? இந்த மத்தியதர வர்க்க பெண்களிடம் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் எவ்வளவு பேர் கண்ணில் படுகிறார்கள். அதில் என்பத்தைந்து சதவிகிதம் பெண்கள் தேவைக்குத்தான் வேலைக்கு செல்கிறார்கள். தேவைகள் என்பது குடும்பத்தேவைகள்தான்.

பெண்கள் அவர்களின் தேவைக்கு வேலைக்கு செல்வதும் இருக்கின்றது. அவர்களைப் பற்றி இப்போது பேசவேண்டாமே.

மறுபடியும் நம் தலைப்புக்கே வந்துவிடுவோம். நல்ல ஆடைகள் அணிய முடியாது. மீறி உடுத்த ஆசைப் பட்டால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு இவளின் கஷ்டம் புரியாது. உழைப்பின் முழு வீச்சு என்னவென்று பார்த்தால் கடமை கடமை மட்டும்தான் காணப்படும். குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்ல தேவையே இல்லே. எல்லாருடைய கஷ்டத்திலும் பங்கெடுத்து தன்னோட தேவைகளை யோசிக்கும்போது அருகில் இருக்கும் உறவுகள் குறைவாகவே இருக்கும். காலமும் கடந்து போயிருக்கும். இவை எல்லாம் இல்லை என்று ஒருவரும் மறுக்க இயலாது. கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் உதாரணங்கள்தான் இத்தைகைய பெண்கள்.

முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு பின்

எப்படியோ சில குடும்பங்களில் முட்டி மோதி பெற்றோர்கள் திருமணத்தை முடித்து விடுவார்கள். கணவன் மட்டும் வேலைக்குப் போனால் அன்றாட தேவைகள் மட்டுமே கவனிக்க முடியும். எண்ணி சுட்ட பணியாரமாகத்தானே இந்த பெண்களின் வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பற்றாகுறை இருப்பதும் வழக்கம்தான். தேவையான தேவைகளும் அங்கே கட்டுப் படுத்தப்படும். குடும்பத் தரத்தை உயர்த்தலாம், அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்திக் கொள்ளலாம், அந்த வீட்டு குத்து விளக்கான மருமகளும் அத்தியாவசியத் தேவைகளை மனதிலே இருத்தி வேலை என்ற ஆயுதத்தை, கையிலே எடுத்தால்தான் அந்த வீடே வெளிச்சத்திற்கு வர சாத்தியமாகும். கணவரின் உடன் பிறப்புகளுக்கு, படிப்பில் உதவி மற்றும் திருமணத் தேவைகள், மாமனார் மற்றும் மாமியாரின் உடல் நலம் பேணுதல் இவைகள் அனைத்தும் கடமை என்ற கட்டுக்குள் வந்துவிடும். இதற்கிடையே தனது குழந்தைகளும் கவனிக்கப்பட வேண்டிய கட்டாயம் எதில் வரும் என்ற நினைப்பே வராத அளவிற்கு உழைப்பு அவர்களின் எண்ணங்களை விழுங்கிவிடும்.

ஒருவரின் வருமானத்தில் மேற்கூறிய எதுவுமே சாத்தியமாகாது. இப்படி ஆரம்பித்த பெண்களின் சேவைகள் தொடர்கின்றன. குடுபத்திற்காக பல தியாகங்கள், பிறகு குழந்தைகளுக்காக பல தியாகங்கள். அந்த பெண்ணின் தியாகத்திற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விடுகின்றது. திரும்பிப் பார்ப்பதற்குள் தனது வாரிசுகளின் திருமண வைபவம் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும். கஷ்டங்களுக்கு நடுவே திருமணம் செய்து நிமிர்ந்தால், திருமணத்தை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள். எல்லாம் முடிந்து அப்பாடா என்று அமர்ந்தால் அதீத உழைப்பின் காரணமாக நோய் என்ற அரக்கன் கணவனை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பிப்பான். அப்போதும் தனக்கென்று எதையும் யோசிக்காமல் மறு அவதாரம் எடுப்பாள் அந்த பெண் என்றால் அது மிகையாகாது. இப்படி வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாகிப் போன அந்த பெண் தனது முதுமைக் காலத்துக்கு சேர்த்து வைத்ததுதான் என்ன? இது பெரும் கேள்விக் குறியல்லவா? அவளின் மனதில் தியாகம் தியாகம் அது ஒன்றுதான் தாரக மந்திரமாக கொழுந்து விட்டு எரியும் அணையா விளக்காகாக எரிந்து கொண்டிருக்கும்.

இந்தப் போக்கு மாறவேண்டும். சிலரிடம் மாற்றங்கள் தெரிகிறது. ஆனால் அன்றாட தேவைகளின் தொல்லைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள், கொஞ்சம் வெளியே இருந்து பிரச்சனைகளை அணுக வேண்டும். அப்போதுதான் தேவைகள் என்ற நிலை மாறி அடிப்படை தேவைகள் எவை என்று உணர ஆரம்பிப்பாள். இந்த நிலை அந்த பெண்ணின் சராசரி பெண்ணின் மனநிலையில் இருந்து சற்று மாறுபட்டு யோசிக்கத் தோன்றும். இந்த மாற்றங்கள் பல வகையிலும் ஏற்றங்களை அடைய காரணமாகிறது.

உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இது போல் கஷ்டங்கள் தீர்வுள்ள கஷ்டங்கள்தான். அவர்களுக்கு பற்றாகுறை என்பது இருக்க நியாயம் இல்லை.

அதே போல் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருபவர்களுக்கும் பற்றாகுறை, தேவைகள் இதெல்லாம் எதுவும் வெகுவாக பாதிப்பது இல்லை. அன்றாடம் உழைத்து சாபிட்டாலே அவர்களுக்கு வாழ்க்கை நிறைவைத் தருகிறது.

இடையே அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் தவிப்பவர்கள் நமது தலைப்பில் அடங்கிய மத்தியதர பெண்கள்தான் தீர்வில்லா பல இன்னல்களை அடைகிறார்கள் என்று கூறுவதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.


மத்தியதர வர்க்க பெண்கள் வேலைக்கு செல்வதால் ஏற்படும் [எனக்கு தெரிந்த] நன்மைகள்


இதில் நல்லது என்று எடுத்துக் கொண்டால் சிலவற்றை மேற்கோள் காட்டலாம். வசதிகளைப் பெருக்கிக்கொள்ளலாம். நல்லது கெட்டது செய்யும்போது நிறைய யோசிக்க அவசியம் இல்லை. இருவரும் சேர்ந்தே செய்வதால் சிரமம் குறையும். குழந்தைகளை விரும்பிய பள்ளியில் சேர்க்க முடியும். இப்போ எல்லாம் குழந்தைகள் படிப்பே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. பல கஷ்டங்கள் இருந்தாலும் பலர் தனது குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்து விடுகின்றார்கள். இது மத்தியதர வர்க்க பெண்களின் வெற்றி என்று தான் கூறவேண்டும். இந்த வெற்றியின் பின்னணியில் பெண்களின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். பாங்காக குடும்பம் நடத்தி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, தானும் மகிழ்ந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்வித்து, தனது வாரிசுகளையும் வழிநடத்தி வெற்றி வாகை சூடிய பெண்கள் பலரை உதாரணமாகக் காட்டலாம்.

கூட்டுக் குடித்தனமாக இருந்தாலும் தனிக் குடித்தனமாக இருந்தாலும் கணவனைச் சார்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒன்று விடாமல் செய்து வருவதிலும் நமது மத்தியதரப் பெண்கள் கில்லாடிகள். சுமைகள் இருந்தாலும் அதை சுமையாகக் கருதுவது இல்லை. இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கின்றீர்கள், அதற்கு என் பதில் சாத்தியம்தான். இப்படித்தான் வாழ்க்கையை சமப்படுத்தி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இப்படி கூறி கொண்டே போனால் இன்னும் எவ்வளவோ?

நான் விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன்.

இத்துடன் படித்த அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த குடுகுடுப்பையாருக்கு நன்றிகள் பல.

டிஸ்கி: இதில் எழுதியவைகள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் புண் படுத்த அல்ல.

மறுபடியும் வாய்ப்பளித்த குடுகுடுப்பையாருக்கு என்நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





30 comments:

குடந்தை அன்புமணி said...

பெண்கள் தினசரி படும்பாட்டை உங்கள் சொந்தக் கருத்துக்களை வைத்து விளக்கியிருக்கிறீர்கள். அனைத்தும் உண்மையோ உண்மை.

ராமலக்ஷ்மி said...

மிகத் தெளிவாக உங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் ரம்யா!

// பாங்காக குடும்பம் நடத்தி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, தானும் மகிழுந்து, தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்வித்து, தனது வாரிசுகளையும் வழிநடத்தி வெற்றி வாகை சூடிய பெண்கள் பலரை உதாரணமாகக் காட்டலாம்.//

உண்மைதான். நடைமுறையில் நாம் நிறைய பேரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நல்ல பதிவு ரம்யா.

துளசி கோபால் said...

அதென்ன ரம்யா, சென்னைக்குன்னு சொல்லிட்டீங்க!!!

உலகம் முழுசும் பெண்கள் நிலமை இப்படித்தான் இருக்குப்பா. (ஒரு சில நாடுகள் விதிவிலக்கு)

வல்லிசிம்ஹன் said...

நல்லா யோசித்து அழகாக் கருத்துகளைத் தொடுத்திருக்கீங்க ரம்யா. எழுதி இருப்பது அத்தனையும் நிஜம்.
இந்த மாதிரிப் பெண்களை நன்ன் அதிகம் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெ மன அழுத்தம் மிகும்.

அதே சமயம் அவர்களுக்கு நல்ல தோழிகள் கிடைத்துவிட்டால் கொஞ்சமாவது கலகலப்பு அவர்கள் வாழ்க்க்கையில் கிடைக்கும்.

सुREஷ் कुMAர் said...

//
குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்ல தேவையே இல்லே. எல்லாருடைய கஷ்டத்திலும் பங்கெடுத்து தன்னோட தேவைகளை யோசிக்கும்போது அருகில் இருக்கும் உறவுகள் குறைவாகவே இருக்கும். காலமும் கடந்து போயிருக்கும்.
//

நான் நேரில் கண்ட நிதர்சனமான உண்மை..

सुREஷ் कुMAர் said...

//
தேவையான தேவைகளும்
//
அடடா..
தேவைபட்டால்தானே அது தேவைகள்..

सुREஷ் कुMAர் said...

//
இத்துடன் படித்த அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன்
//
ஒரே கல்ப்புல பேசிமுடிச்சுட்டிங்க..
சோடா ஏதும் வேணுமா..

கருத்துக்கள் எல்லாம் உண்மையில் உண்மை..
எதார்த்தத்தில் எதார்த்தம்..
வாழ்த்துக்கள்..

Rajeswari said...

நல்ல கருத்தாய்வு ரம்யா.சென்னையில் மட்டுமல்ல..பொதுவாகவே எல்லா இடத்திலும் இதே மாதிரி தொல்லைகள்தான். என்ன மற்ற ஊர்களை காட்டிலும் சென்னையில் இடிமன்னர்கள்/மன்னிகள் அதிகம்.அதைக்காட்டிலும் சில உத்தியோக இடங்களில், பெண்களை பாலியல் கொடுமை செய்தும்,அதை அவர்கள் வீட்டில் சொல்ல முடியாத அவல நிலையிலும் எத்தனை பேர் இருக்கின்றனர்.??? .

நட்புடன் ஜமால் said...

மிகச்சிறப்பா சொல்லியிருக்கீங்க ரம்யா

மிகந்த எதார்த்தம் ...

தராசு said...

ரம்யா,

வாழ்த்துக்கள். நல்ல கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள்.

இன்னும் ஒரு படி மேலே செல்லுங்கள்.

உங்கள் பதிவைப் படித்தால், அகில உலகத்திலும் பெண்ணாகப் பிறந்தவள் ஒரு ஊசி முனையளவு கூட சந்தோஷம் என்பதையே அறியாமலே, அல்லது அது கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் அது கிடைக்கப் பெறாமல், அல்லது அது கிடைப்பதற்கான எல்லா வாய்ப்புகள் இருந்தும் அவையெல்லாம் எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டு, கஷ்டத்திலேயே பிறந்து வளர்ந்து இறந்து போகிறாள் என்பது போலத்தான் தோன்றுகிறது.

இன்றைய மத்திய தர வர்க்கத்தில் மனிதராகப் பிறந்த எல்லோரும் அது ஆணாகட்டும், அல்லது பெண்ணாகட்டும், எதாவது ஒரு வகையில் இந்த கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகிறார்கள்.

மத்திய தர ஆண்கள் படுகிற அவஸ்தைகள் என்று ஒரு பட்டியல் அனுப்பட்டுமா?

ஆகவே ஒரு படி மேலே வந்து மனிதர்கள் படும் கஷ்டங்கள் என்று யோசியுங்கள்.

கிரி said...

// எப்போதும் முகத்தில் ஒரு சோகம். அவளின் வசீகரம் வறுமையால் களவாடப் பட்டு விடுகின்றதே.//

இது மறுக்கமுடியாத உண்மை..இது பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தேன் (இருக்கிறேன்)

பெண்கள் என்று இல்லை பிரச்சனைகளை சந்திக்கும் அனைவருக்குமே என்று நினைக்கிறேன்.

நடுத்தர குடும்ப பெண்களின் பிரச்சனைகளை சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி!
உங்கள் கருத்துகளையும், எண்ணங்களையும் பகிர்ந்தது நன்று!

அ.மு.செய்யது said...

தெளிவாக அலசி ஆராய்ந்து,ஒரு தலைபட்சமாக இல்லாமல்
எழுதியிருக்கிறீர்கள்.

வலைப்பூக்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க பதிவு.

வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

நல்ல விளக்கம் .பகிர்வுக்கு நன்றி

SUFFIX said...

//குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்ல தேவையே இல்லே. எல்லாருடைய கஷ்டத்திலும் பங்கெடுத்து தன்னோட தேவைகளை யோசிக்கும்போது அருகில் இருக்கும் உறவுகள் குறைவாகவே இருக்கும். காலமும் கடந்து போயிருக்கும்.
//

நான் நேரில் கண்ட நிதர்சனமான உண்மை..//

இது முற்றிலும் உண்மை, நீதானே குடும்பத்துக்கு மூத்தவள் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை ஞாபகப்படுத்தும் சுற்றி உள்ளவர்கள்..

SUFFIX said...

//சுமைகள் இருந்தாலும் அதை சுமையாகக் கருதுவது இல்லை. இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கின்றீர்கள், அதற்கு என் பதில் சாத்தியம்தான். //

இந்த சுமைகளை அறிந்து அனுசரனையாக இருக்கும் கனவன், மாமியார் மற்றும் இதர சொந்தங்கள் கிடைத்தால் அந்தப்பெண் கொடுத்து வைத்தவள்த்தான்.

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு ரம்யா.

குடுகுடுப்பையை பிரபல பதிவராக்கினதுக்கு நன்றி:))))))))

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு ரம்யா.

sakthi said...

மிகத்தெளிவான அலசல்

அருமையான பகிர்வு சகோதரி

வால்பையன் said...

பொது பிரச்சனைகளே அலசப்பட்ட மாதிரி தெரியுது!
இன்னும் கொஞ்சம் களப்பணி செஞ்சிருக்கலாம்!

Unknown said...

// மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு முன் //





ஆமாங்க அக்கா.... , கல்யாணத்துக்கு முன்னாடி இந்த நடுத்தர வர்கத்து பெண்கள் ரொம்ப கஷ்ட்டப்படுறாங்க. ஒரு சில வீட்டுல ரெண்டு பொண்ணுக , மூணு பொண்ணுங்க அல்லது ரெண்டு மூணு குழந்தைகளில் மூத்த பெண் .. இப்புடி இருக்குற பொண்ணுங்கெல்லாம் எனக்கு தெருஞ்சு 90% பத்தாவது , பன்னிரெண்டாவது வரைக்கும்தான் படுச்சிருக்காங்க. அவங்க பெரும்பாலும் பாத்தீங்கன்னா ஜெராக்ஸ் கடையில , அல்லது ஏதாவது எலக்ற்றிகள் கடை , மளிகை கடை , துணிக் கடை , போன்ற இடங்களில் சேல்ஸ் கேர்ளா இருப்பாங்க ...
அவிங்க படுற பாடு இருக்கே.... !! கொடுமையிலும் கொடுமை...!!



அவுங்களே குடும்ப கஷ்டத்துல படிப்ப நிறுத்தீட்டு இந்த வேலைகளுக்கு வர்றாங்க.. அவுங்ககிட்ட ஒரு சில ஆண்கள் நடந்துக்கும் முறை ரொம்ப கேவலமா இருக்கும் ... !! அதுல நா பார்த்த ஒரு சில ...



* திருச்சியில் என் ஏரியாவுல ஒரு ஸிபி ஐ-வே இருக்கு . அங்க ஒரு நடுத்தர வர்கத்து பெண் வேலை செய்யுறா...அவளுக்கு ஒரு பதினெட்டு வயது இருக்கும் . நா இந்த ஊருக்கு வந்த புதுசுல , வீட்டுல நெட் கனெக்சன் இல்ல. அதுனால ஸிபி க்கு போயிகிட்டு இருந்தேன்.
அந்த பெண் யாரு வந்தாலும் நல்லா பேசுவா , சின்ன குழந்தைகள் உட்பட ... !! ஆனா அவா மொதலாளி ங்குற பக்கி பய இருக்கும்போது மட்டும் ரொம்ப அமைதியா இருப்பா....!!! காரணம் எனக்கு தெரியாமல் இருந்தது.
ஒரு நாள் சென்டரில் நல்ல கூட்டம். நான் பிரிண்ட் எடுக்கனுமின்னு சொன்னேன். அதுக்கு அந்த பெண் ஒரு பத்து பேப்பர பிரிண்டரில் வைத்தால் ... அதற்க்கு அந்த முதலாளி... அத்துன பேருக்கு முன்னாடி அந்தப் பொண்ண , " எ மூதேவி... இத்தன பேப்பர் எதுக்கு வெச்ச்சன்னு " திட்டுனான் பாருங்க....!! அத்தன பேரும் அமைதியா ஆயிட்டாங்க.....!! அந்தப் பொண்ணு கூனி குறுகிப் பொய் நின்றுச்சு..!! பாவம் .. இப்படியெல்லாம் ஒரு நாதாரி பயகிட்ட திட்டு வாங்கி... அவிங்க குடும்பத்த காப்பாத்தனும்கிற கட்டாயத்துல இருந்திருக்கா அந்தப் பெண்.!! எனக்கு மிகவும் வேதனையகா இருந்தது..!! நான் வெலியே வந்து " சாரிங்க ... யென்னாளாதான திட்டு வாங்குனீங்க... " அப்படீன்னு சொன்னேன். அதற்க்கு அந்த பெண்.... " பரவாலீங்க... இது என்ன புதுசா... அந்த ஆளு என்னைய தினமும் அப்படித்தான் திட்டுவான் " என்றால் . இருந்தாலும் அவள் கண்களில் நீர் ததும்பியிருந்தது...!!!




* முன்னொருமுறை நானும் , எனது நண்பனும் கல்லூரியில் படிக்கும்போது , ப்ராஜக்ட் ஒர்க்குக்காக பிரிண்ட் அவுட் எடுக்க ஊட்டி நகருக்கு சென்றிருந்தேன் , அப்பொழுது அந்த கடையின் முதலாளி , கடை பெண்ணிடம் .. அத்துனை பேருக்கு முன் சின்ன ... சின்ன சில்மிஷங்கள் செய்து கொண்டிருந்தான் .... !! பாவம் அந்தப் பெண் ... நெளிந்து கொண்டிருந்தாள் .... சிறிது நேரம் கழித்து அவன் உணவு இடைவேளைக்கு போன பிறகு ... கடையின் உள்புறம் ஒரே புலம்பல் முனு முனுப்பு சத்தம்.....!! " இந்த நாயிக்கெல்லாம் , அம்மா , அக்கா, தங்கச்சி யாருமே கிடையாதா....?? எப்பா சாகுமோ இந்த சனியன் " என்று... !! சிறிது நேரம் கழித்து அந்த பெண் பிரிண்ட் அவுட் சீட் குடுக்க வெளியே வந்தபோது கண்கள் சிவந்திருந்தன...!! பாவம் .... யாரிடம் போய் சொல்லும் இந்த கஷ்ட்டத்தை...


---------------------------------------------------------------------------------------------------










// மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு பின் //




திருமணத்திற்கு பின் இன்னுமும் கஷ்ட்டம் .... குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு , குறைந்த சம்பளத்திற்கு வேலையும் செய்துகொண்டு , சொந்த பந்தங்களையும் அனுசரித்துக் கொண்டு , கணவனையும் அனுசரித்து ...... அப்பப்பா.... மிக்ஸி போல் பெண்கள் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..........





அருமையான .... நல்ல விழிப்புணர்வு பதிவுங்க சகோதரி....!! தொடர என் வாழ்த்துக்கள்...!!!

ரவி said...

நல்ல பதிவு !!!!!! நன்றி !!!!!

அது சரி(18185106603874041862) said...

ரம்யா,

உங்கள் பதிவுடன் முழுமையாக ஒத்துப் போகிறேன்....குடும்பம், உடன்பிறப்புகள், கணவன், குழந்தைகள் என்று உழைத்து தனக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லாமல் போன/போகிற பெண்கள் இங்கு அதிகம்...

வீட்டில் இருக்கும் பெண்ணுக்கே வேலைகள் மிக அதிகம்...வேலைக்கு போகும் பெண்ணுக்கு சுமை இரட்டிப்பாகிறது...

காலையில் சீக்கிரம் எழுந்து, சமையலை ஆரம்பித்து, பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் கணவனை ரெடி செய்து, அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ப்ரேக் ஃபாஸ்ட், லஞ்ச் ரெடி செய்து அவர்களை அனுப்பி விட்டு, தான் ரெடி ஆவதற்குள் பஸ்ஸுக்கு நேரமாகியிருக்கும்...இதில் எங்கே சாப்பிட??

அலுவலகத்திலும் ஆண்களுக்கு ஈடாக அவர்கள் உழைக்க வேண்டி இருக்கிறது...களைத்து போய் வீடு வந்தால், பாத்திரம் கழுவி, குழந்தைகளை படிக்க வைத்து மீண்டும் இரவு உணவு சமைத்து, படுக்க போவதற்குள் வெறும் சக்கையாகி விடுகிறார்கள்...

இதே கதை மீண்டும்....மீண்டும்...தினந்தோறும்....வீக் என்டானாலும் ஓய்வு இல்லை...அன்று சிறப்பு சமையல் செய்ய வேண்டும்...வீட்டை க்ளீன் செய்ய வேண்டும்....இன்னும் பல வேண்டும்கள்...!

இது ஒரு முடிவே இல்லாத அடிமை சங்கிலி....இதை உடைக்க பெண்களால் மட்டுமே முடியும்....முக்கியமாக, பொறுப்புகளையும் கடமைகளையும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்....சமைப்பது பெண் என்றால், பாத்திரம் கழுவ வேண்டியது கணவனின் பொறுப்பு...குழந்தைகளை படிக்க வைப்பது கணவனின் பொறுப்பு என்று தெளிவாக பிரிக்க வேண்டும்...

பல கணவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்...அப்படியானால் வேலைக்கு ஒரு ஆள் வேண்டும் என்று சொல்லி விடுவதே நல்லது....அப்படியே பொறுப்பற்ற உடன்பிறப்புகளையும் ஒதுக்கி விடுதல் நல்லது..

सुREஷ் कुMAர் said...

//
ஷ‌ஃபிக்ஸ் said...

//குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்ல தேவையே இல்லே. எல்லாருடைய கஷ்டத்திலும் பங்கெடுத்து தன்னோட தேவைகளை யோசிக்கும்போது அருகில் இருக்கும் உறவுகள் குறைவாகவே இருக்கும். காலமும் கடந்து போயிருக்கும்.
//

நான் நேரில் கண்ட நிதர்சனமான உண்மை..//


இது முற்றிலும் உண்மை, நீதானே குடும்பத்துக்கு மூத்தவள் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை ஞாபகப்படுத்தும் சுற்றி உள்ளவர்கள்..
//

ஷ‌ஃபிக்ஸு..
நீங்க மேற்கோள் காட்டீருக்கற வரிகளில் கடேசிவரி என்னோடது..

அத்த தூக்கிட்டு கம்மென்ட்டுங்க..

போஸ்ட்ட படிச்சுட்டு கம்மென்ட்ட சொன்னா நீங்க என்னோட கமென்ட்ட படிச்சுட்டு கமென்ட்டிருக்கிங்க..

என்ன கொடுமைங்க இது..

அமிர்தவர்ஷினி அம்மா said...

தெளிவான கருத்துக்களை அடுக்கியிருக்கிறீர்கள்.

pudugaithendral said...

சென்னை மட்டுமல்ல ரம்யா பொதுவாகவே வேலைக்கு பெண்களின் நிலையை அழகா சொல்லியிருக்கீங்க.

இரட்டை குதிரை சவாரி செய்யும் அவர்களின் நிலையில் ஒரே ஆறுதல் வீட்டை விட்டு (கொஞ்ச நேரத்திற்கு)வெளியுலகுக்கு வருவதற்கான வாய்ப்பு என்பதுதான்.

மற்ற்படி மிகவும் மன் அழுத்தம் தரும்

எம்.எம்.அப்துல்லா said...

ரம்யாக்கா சமீபத்தில் நான் படித்த பதிவுகளில் வெகு சிறப்பான பதிவு இது. வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

நல்லாவே சொல்லிருக்கீங்க

RAMYA said...

வந்து எனது இடுகைக்கு கருத்து கூறிய
அனைவருக்கும் எனது நன்றிகள்.

நன்றி குடந்தை அன்புமணி
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி துளசி கோபால்
நன்றி வல்லிசிம்ஹன்
நன்றி सुREஷ் कुMAர்
நன்றி Rajeswari
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி தராசு
நன்றி கிரி
நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி
நன்றி அ.மு.செய்யது
நன்றி நசரேயன்
நன்றி ஷ‌ஃபிக்ஸ்
நன்றி குடுகுடுப்பை
நன்றி அன்புடன் அருணா said
நன்றி sakthi said
நன்றி வால்பையன்
நன்றி லவ்டேல் மேடி
நன்றி செந்தழல் ரவி
நன்றி அது சரி
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி எம்.எம்.அப்துல்லா
நன்றி " உழவன் " " Uzhavan "

Hindu Marriages In India said...

Sariyana alasal.