Tuesday, June 23, 2009

புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்


"ராஜாதிராஜ! ராஜமார்த்தாண்ட! ராஜ கம்பீர!" இந்த வார்த்தை தமிழகத்தில் பலருக்கும் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ கேட்கும் வசனம். ஆனால் புதுக்கோட்டைக்காரர்களுக்கு உணர்வோடு ஒன்றிய வார்த்தை இது. காரணம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின் கீழ் மகத்தான சாதனைகள் பல படைத்து வந்த தனி தேசம்.

பிரிட்டீஷ்சாரே ஆள முடியாத அளவிற்கு பவர்ஃபுல் தேசமாக இருந்ததா என்றால் அதற்கு விடை இல்லை என்பதே. புதுகையை ஆண்டு வந்த தொண்டைமான் மன்னர்கள் பிரிட்டீஷாரோடு நட்புறவில் இருந்ததால் பிரிட்டீஷ்சார் தங்கள் ஆளுகையின் கீழ் புதுகை சமஸ்தானத்தைக் கொண்டு வராது தனிநாடாகவே இயங்கவிட்டு இருந்தனர். தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.

இப்ப கொஞ்சம் ஆதிகாலத்துல இருந்து எங்க வரலாறைப் பார்ப்போம்.

வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை போகட்டும் என்றூ கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகாள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

பிராமிக் கல்வெட்டு

பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன.சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"
என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமனமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.
சங்ககாலம்

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குத் தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது.
பன்றிநாடானது கோனாடு, கானாடு ன இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தத். வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்று, தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் வழங்கியது. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு பறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூறில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள்.புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்றூ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதுக்கோட்டையில் ரோமாபுரி
திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு முத்து மணிவகைகள் பருத்தி பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,

மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை சென்னை புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
சங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர,சோழ,பாண்டியரைக் களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.

ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.

களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பெளத்தம்,சமணம்ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

முதல் பாண்டியப் பேரரசு
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி கலப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து பாண்டியன் கடுங்கோன் பாண்டி நாட்டைப் பகுதிகளைக் கைப்பற்றினான். பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடுங்கோன் கி.பி 590 முதல் 620 வரை ஆட்சி செய்தான். ஏறத்தாழ இதே காலத்தில் பல்லவ மன்னன் விஷ்னுசிம்மன்(கி.பி 575 - 600) தொண்டை மண்டலத்தில் களப்பிரரை வென்று அங்கு பல்லவர் ஆட்சியை ஏற்படுத்தினான்.புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின்ஆளுகைக்குட்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரனதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமார ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுனவர்மன்(862-880)வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் சோழர் மற்றும் பல்லவர் கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான்.

தொடர்ந்து பராந்தகவீரநாராயனனும்(கி.பி 880 - 900) மாரவர்மன் இராஜசிம்மனும்(கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் வீரபாண்டியன்(கி.பி 946 - 966) ஆவான், இவன் 2ஆம் ஆதித்ய சோழனால் முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.

பல்லவர்
தொண்டை மண்டலத்தில் கி.பி 575 வாக்கில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள் நடந்து கொண்டேயிருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டு முடிவில் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்திரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர் ஆட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர.

இதற்கு அப்புறம் துவங்கியது எங்க தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம். இப்ப டைப் அடிச்சு கை வலிக்குது. அதுனால அடுத்த பாகத்தில் தொடர்ந்து சந்திப்போம்
(தொடரும்)


39 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நான் தான் முதல்ல

உங்க ஊரை பற்றி அறிந்ததில்

இவ்வளோ விஷயம் இருக்கா

வாங்க நம்ம ஊருக்கு

நிலா அது வானத்து மேல!

குடுகுடுப்பை said...

நேரம் எடுத்தாலும் முத்து.நன்றி அப்துல்லா.

என்னுடைய நடையில் ஒரு எள்ளல் துணைப்பதிவும் வரும் என்பதை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

வாங்க ஸ்டார்ஜன் அண்ணே

உங்க ஊருக்கு நான் பலமுறை வந்தாச்சு. வருகைப் பதிவு போடலன்னா வரலன்னு அர்த்தமா??

:)))

நன்றிண்ணா.

எம்.எம்.அப்துல்லா said...

//என்னுடைய நடையில் ஒரு எள்ளல் துணைப்பதிவும் வரும் என்பதை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்

//

அண்ணே ஓம்மப்பத்தி எனக்கும் என்னையப்பத்தி உமக்கும் நல்லாவே தெரியும். இத நீரு தனியாவேற சொல்லனுமாக்கும்.
இஃகிஇஃகிஃகி

:))

குடுகுடுப்பை said...

தொண்டைமான் மன்னர்களின் சாதனைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நான் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக்காலத்திலும் ஆதரவு அளிப்பதில்லை. ஆனால் சாருபாலா தொண்டைமானின் தோல்வி வருத்தம் அளித்தது.

எம்.எம்.அப்துல்லா said...

//தொண்டைமான் மன்னர்களின் சாதனைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


//

தொணைமான் மன்னர்களின் சாதனையை எழுதுவது என்பது கடலை குவளையில் அடைக்கும் முயற்சி.இருப்பினும் முயற்சிக்கிறேன்.

//நான் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக்காலத்திலும் ஆதரவு அளிப்பதில்லை. ஆனால் சாருபாலா தொண்டைமானின் தோல்வி வருத்தம் அளித்தது.

//

உங்களுக்கே இப்படி இருக்கே...அவருக்காக தெருத்தெருவாக அலைந்த, பூத் ஏஜெண்டாக பணிபுரிந்த என் மனநிலையை யோசித்துப் பாருங்கள்.
திருமதி.சாருபாலா மன்னர் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. அங்கு மருமகளாக வந்தவர். ஆனால் அவர் நடத்தை பரம்பரை மகராணி போல் இருந்தது பலருக்கும் எரிச்சலூட்டியது உண்மை.அதுவே அவர் தோல்விக்குக் முழு முதற் காரணம்.

கல்கி said...

நல்லாயிருக்குண்ணே வரலாறு. ராஜா ராணி கதை மாதிரி சொன்னா, எங்கள மாதிரி சின்னப்புள்ளைங்க படிக்கும்போது இன்னும் நல்லாயிருக்கும்ல? :-)

அன்புடன் அருணா said...

நிறைய உழைத்திருக்கீங்கன்னு தெரியுது பதிவைப் படிக்கும்போது! Good!

குடுகுடுப்பை said...

உங்களுக்கே இப்படி இருக்கே...அவருக்காக தெருத்தெருவாக அலைந்த, பூத் ஏஜெண்டாக பணிபுரிந்த என் மனநிலையை யோசித்துப் பாருங்கள்.
திருமதி.சாருபாலா மன்னர் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. அங்கு மருமகளாக வந்தவர். ஆனால் அவர் நடத்தை பரம்பரை மகராணி போல் இருந்தது பலருக்கும் எரிச்சலூட்டியது உண்மை.அதுவே அவர் தோல்விக்குக் முழு முதற் காரணம்.//

புதுக்கோட்டையின் கடைசி மன்னர் , காக்கி சட்டை போட்டுக்கொண்டு கடுமையாக திருச்சியில் உழைத்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் சாரூ:)))))))

எம்.எம்.அப்துல்லா said...

புதுக்கோட்டையின் கடைசி மன்னர் , காக்கி சட்டை போட்டுக்கொண்டு கடுமையாக திருச்சியில் உழைத்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் சாரூ:)))))))

//

தன் அரண்மனையில் ஒரு பகுதியில் கார் ரிப்பேர் ஷெட் வைத்து இறுதிவரை உழைத்த மகான் அவர்.

மணிநரேன் said...

இந்த புதுக்கோட்டை வரலாற்று பதிவிற்கு வாழ்த்துக்கள் அப்துல்லா.

தினேஷ் said...

//தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம்//

எல்லாம் சரி ஆனால் பிரிட்டிசாரின் கீழ் தானே ... தெளிவா சொல்லுங்க . நட்பாம் ஏன் இப்படி .

ஒரு வேளை 23ம் புலி கேசி மன்னனை போல் நட்பு பாராட்டி இருப்பார்களோ ..

தினேஷ் said...

//தன் அரண்மனையில் ஒரு பகுதியில் கார் ரிப்பேர் ஷெட் வைத்து இறுதிவரை உழைத்த மகான் அவர்//

நிஜாமா இது இப்படியும் ஒருத்தரா .. கற்பனையில் கூட நினைக்க முடியல ..

ஆனா கண்டிப்பா பொழுது போக்குக்கு பண்ணியிருப்பார்னு நினைக்கிறேன் இல்லேனா வேற எதும் தெரியாதுனு நினைக்கிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஜக்கம்மா : நல்ல தொண்டு மகனே!!
நீ வாழ்க!!!

நசரேயன் said...

அண்ணே புதுகோட்டையை பிரிச்சி மெய்ஞ்சிடீங்க .. அழகான தொகுப்பு

ஜோ/Joe said...

அருமையான வரலாற்றுப் பதிவு ..தொடருங்கள்!

முரளிகண்ணன் said...

அப்துல்லா, கலக்கிட்டிங்க.

சிங்கை தொடர் மாதிரி இழுக்காம விரைந்து முடிங்க

கார்க்கிபவா said...

//
சிங்கை தொடர் மாதிரி இழுக்காம விரைந்து முடிங்//

அதே அதே அதேதானுங்கண்ணா

தராசு said...

இது கலக்கல்.

இம்புட்டு விஷயத்தையும் புட்டு, புட்டு வைக்கறீங்களே,

அந்த பாலித்தீவு மேட்டர் என்னாச்சு??

Mahesh said...

படிக்கும்போதே நினைச்சேன்... அண்ணந்தான் இப்பிடியெல்லாம் எழுத முடியும்னு... பாத்தா... அண்ணனேதான்...

அட்டகாசமான வரலாறு அப்துல்லா...

pudugaithendral said...

நம்ம ஊரின் அருமை பெருமைகளை அழகாக சொல்லியிருக்கும் இந்தப் பதிவுக்கு் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பெண்கள் தீப பூஜையின் போது பூவிற்கு பதிலாக அம்மன் காசை போட்டுத்தான்(108) பூஜை செய்வது வழக்கம். இப்போது வெள்ளியில் வரும் லட்சுமி பூஜை காசு்க்கு நம்ம் ஊரு அம்மன் காசு தான் ஆரம்பம்.

அரைக்காசு அம்மன் என்றே பிரபலம்

அ.மு.செய்யது said...

அண்ணே என்ன இது ??

நீஙக் ஒரு வரலாற்றாசிரியர்னு சொல்ல வேயில்ல..

அட்லீஸ்ட் ஒரு கண்சாட காட்டக்கூடாதா ??

Unknown said...

வரலாறு மிகவும் அருமை...!! புதுக்கோட்டை வரலாற்றை அருமையாக சேகரித்து செதுக்கியுள்ளீர்கள்....!!!

வாழ்த்துக்கள்..!!!!



ஆங்கிலேயர்களுடன் நட்பு என்றால் .... அவர்களுக்கு ஒழுங்காக கப்பம் கட்டி , ஆல்காடிகளாக இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் அல்லவா??

ரமேஷ் வைத்யா said...

யாருங்க இங்கே உண்மைத் தமிழன்... வாரும், வந்து மோதிப் பாரும். ஹஹ்ஹஹ்ஹேய்ய்ய்...?
(தொடரட்டும்)

நடை அருமை, சரளம், சுவாரசியம்!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல இடுகை
தேவையான விபரங்கள்...
உங்கள் ஊரைப்பற்றி தெரிந்ததில் மகிழ்ச்சி.

வெண்பூ said...

அருமையான வரலாற்றுக் கட்டுரை அப்துல்லா.. அதுவும் உங்க சொந்த ஊரைப் பத்தியே. பாராட்டுகள்..

எம்.எம்.அப்துல்லா said...

//தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம்//

எல்லாம் சரி ஆனால் பிரிட்டிசாரின் கீழ் தானே ... தெளிவா சொல்லுங்க . நட்பாம் ஏன் இப்படி .

ஒரு வேளை 23ம் புலி கேசி மன்னனை போல் நட்பு பாராட்டி இருப்பார்களோ ..

//

இல்லை பிரிட்டீஷாரின் கீழ் இல்லை. புதுக்கோட்டையில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் அளவிற்கு ஒன்றும் இல்லை. அதனால் தங்களுக்கு ஆதாயம் இல்லாததை கண்டு வெள்ளையர் அந்த சமஸ்தானத்தைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பாது மன்னரிடமே விட்டு
விட்டனர்.

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான பதிவு அண்ணே.
அண்ணே, உனக்குள்ள ஒரு வரலாற்று ஆசிரியன் வேற ஒளிஞ்சுருக்கானா?
நெம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அப்டியே புதுகோட்டை மாவட்டம் நார்த்தமலையில இருந்து தஞ்சாவூர் பெரிய கோயில் கட்ட கல்லு அனுப்பிசதையும் எழுதிருங்க.

Thiyagarajan said...

It’s great to read about our town. I believe you must have done a fairly good amount of research/ reading before writing this.

Cinema Virumbi said...

MM அப்துல்லா அவர்களே,

புதுக்கோட்டையுடன் லேசான தொடர்பிருந்த காரணத்தால் சிட்னி மார்த்தாண்டன் மற்றும் அவரை எதிர்த்த தீரர் சத்யமூர்த்தி என்று ஒரு கதையை அப்பா சொல்லுவார். விவரமாக எழுதவும். படிக்க ஆவல்.

நன்றி!

சினிமா விரும்பி

நாமக்கல் சிபி said...

வந்துட்டம்ல!

Unknown said...

புதுக்கோட்டை இன்று வரை தனி நாடாகவே இருந்திருக்கலாமோ? தமிழனுக்கென்று அந்த நாடாவது மிஞ்சி இருந்திருக்கும்.

தினேஷ் said...

//இல்லை பிரிட்டீஷாரின் கீழ் இல்லை. புதுக்கோட்டையில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் அளவிற்கு ஒன்றும் இல்லை. அதனால் தங்களுக்கு ஆதாயம் இல்லாததை கண்டு வெள்ளையர் அந்த சமஸ்தானத்தைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பாது மன்னரிடமே விட்டு
விட்டனர்.//

ஓ இதான் காரணமா .. நன்றி விளக்கியதற்க்கு

பாலராஜன்கீதா said...

பாராட்டுகள் தம்பி அப்துல்லா.

SARAVANA BALAAJI said...

மிக நன்று, நானும் உங்கள் ஊரை சேர்ந்தவன்தான், மிகத்தெளிவாக அருமையாக உள் சென்று ஆராய்ந்து கொடுத்திருக்கும் பதிவு, வாழ்த்துக்கள் தொடருங்கள், அடுத்த பதிவிற்கு காத்துள்ளேன்

சுரேகா.. said...

ரொம்ப நல்லா வந்திருக்கு!
அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்!

-புதுகையின் இன்னொரு ஜீவன்!

seik mohamed said...

ரொம்ப நல்லா வந்திருக்கு!
அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்!

-புதுகையின் இன்னொரு ஜீவன்

வல்லிசிம்ஹன் said...

நல்ல உழைப்பு தெரிகிறது. அருமையாக அதே சமயம் அலுப்புத் தட்டாமல் வரலாற்றைச் சொல்லி இருக்கிறீர்கள். நான்கு மாதமே புதுக்கொட்டையில் தங்கி யிருந்தோம். இருந்தும் மிகப் பிடித்த ஊர். நன்றி அப்துல்லா.

2009kr said...

தொண்டைமான் வம்சத்தின் ஆதிகதினை படிக்க ஆவலுடன் இருக்கிறோம். எப்போது அடுத்த பாகத்தை ஆரம்பிக்க போறேங்க?