கும்புட்டுகிறனுங்... நானுங் கதிர்வேலுங்... ஆத்தா அய்யன் பங்காளிக்கெல்லாம் நான் கதிருங். நம்ம சாமக்கோடங்கி தஞ்சாவூரு பத்தி நெம்பவே சொல்லீட்டாரு. செரி நாமுளும் கொங்கு பத்தி சொல்லோணுமல்லோ.. அப்டீண்டுங்... என்றா எளுதறதுன்னு ஓசிச்சனுங். கெரகம்.. படிக்கறப்பயே ஒண்ணும் எளுதாதலதே உப்ப ஜின்னிங் மில்லுல பஞ்சு அடிச்சுட்ருக்கேன். ஆனா கோயம்புத்தூரு, பொள்ளாச்சி, கெணத்துக்கடவு, உடலப்பேட்டைன்னு நாலு எடஞ் சுத்துனதுல எதோ நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லி வெப்பமுண்டுங் இத எளுதறனுங்... எதாச்சி தப்பா இருந்தாக் கோட நம்ம வாத்தியாரு மணியண்ணன் திருத்திருவாருங்.
நான்ருக்கறதுங் ஜமீன் காளியாபொரமுங். பொள்ளாச்சிக்கு தெக்காலைன்னு வெச்சுக்கங்ளேன். படிச்சதெல்லாம் பூலாங்கெணத்துலயுமு பொள்ளாச்சிலயுமு. பூலாங்கெணத்துல படிக்கைல நாராயணசாமி நாயுடு நகர்ல அப்பத்தா ஊட்லதே இருந்தனுங். நெதமு பிரிமியர் மில்ல தாண்டித்தான் போவமுங்.அப்பத்தான் படிச்சேன் கோயமுத்தூருமு சுத்து வட்டாரமு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்"னு. (இந்தப் பேரு நம்ம வாய்ல நொளஞ்சு ஒளுங்கா வெளிய வர மாசம் மூணாச்சு.)
அது என்ன கணக்குன்னா மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பக்கத்தாப்டியேங்கறதால காத்துல கசகசன்னு எப்பவும் நல்ல ஈரப்பதம் இருக்குதாமா. பஞ்சு நல்லா திரிஞ்சு வாரதுக்கு எதமா. அதுனாலாயே இங்கிட்டு நூல் மில்லுக எக்கச்சக்கம். பின்னி மில்லு, லெச்சுமி மில்லு, சோமசுந்தரா மில்லு, ராதாகிஸ்ணா மில்லு, பிரிமியர் மில்லு, வெங்கடேசா மில்லு, விசியகுமார் மில்லு, திருமூர்த்தி மில்லு, கொங்குரார் மில்லுன்னு பல மில்லுக. கோடவே சிறுசும் பெருசுமா பல ஜின்னிங் பேக்டரிக, வீவிங் மில்லுக, ஸ்பின்னிங் மில்லுக. பளய மிசினுகள ஏலத்துல தூய்ட்டு வந்து, 300 ஸ்பிண்டல்க இருந்தாக்கோட போதும். போர்டுக்கு சந்தனங் குங்குமந் தெளிச்சு மாலையப் போட்டு ஸ்பின்னிங் மில்லு ஆரம்பிச்சர்லாம். சும்மா 3sலேந்து 20s வரைக்கி ஓட்டுனாக் கோட லாபந்தேன். அதென்ன 3 20 ன்னு கேப்பீங்க. சுருக்கமா சொல்லோணும்னா சின்ன நெம்பர்னா நூல் கொஞ்சம் வண்ணமா இருக்கும்... 3 எல்லாம் ஜமுக்காளம், பெச்சீட்டுகளுக்கு.. பெரிய நெம்பர்னா நூல் நயமா சன்னமா வேட்டி சட்டைகளுக்கு. ஜின்னிங் பேக்டரிக பஞ்சை நல்லா அடிச்சு பதமா தாரது. வீவிங்கு உங்குளுக்கே தெரியும்.
இதொரு பக்கம். இன்னோரு பக்கம், கோயம்புத்தூரு பூரா பவுண்டரிக. இரும்பு வேலை அம்புட்டும். எல்லெம்டபிள்யூ, எல்ஜி இவுங்கள்லாம் பெரிய ஆளுங்க. பொள்ளாச்சிலிருந்து கோயமுத்தூர் போற வளியெல்லாம் மில்லுக, பேக்டரிக. ரேடியேட்டரு, பாய்லரு, பஞ்சு மில்லு மிசின்க, பேப்ரிகேசன் கம்பெனிகன்னு கொத்துக் கொத்தா இருக்கும். இஞ்சினீரிங் கம்பெனிகளுக்கு கொறச்சலே இல்ல. கொங்கு நாட்டு டாடா அய்யா மகாலிங்கத்தோட ஏ பி டி யும், ஆனமலை இஞ்சினீரிங்கும், சக்கரை மில்லுகளும் கொங்கு செஞ்ச புண்ணியம். பி எஸ் ஜி, எல்ஜி, லெச்சுமி குரூப்பு, பிரிமியர் குரூப்பு, ஸ்டேன்சு எல்லாம் தொழில் துறைக்கு ராசபாட்டை போட்டுக் குடுத்த புண்ணியவானுக. அங்கிட்டு மேட்டுப்பாளையத்துல விஸ்கோசு மில்லு. உடுமலப்பேட்டைக்கு பக்கத்தால பள்னி போற வளீல, அமராவதி ஆத்தைச் சுத்தி மட்டும் 7 பேப்பர் மில்லுக, ஒரு சக்கரை மில்லு, ஒரு மாட்டுத்தீவன மில்லு. மதுக்கரை சிமிட்டிக் கம்பெனிய நம்பியே ஒரு 100 குட்டிக் கம்பெனிக. இம்புட்டு இருக்கறதால மக்களுக்கு வேலைக்குப் பஞ்சம் இல்ல.
படிப்புக்கு பாலிடெக்னிக்குக என்ன, ஆட்ஸ் காலேசுக என்ன, இஞ்சினீரிங் காலேசுக என்ன. படிப்புமுங் செரி, தொழிலுமுஞ் செரி, கொங்குக்கு மும்மூர்த்திக உடுமலை ஜி வி ஜி குரூப்பு கெங்குசாமி நாயுடு அய்யா, பொள்ளாச்சி ஏ பி டி குரூப்பு அருட்செல்வர் மகாலிங்கம் அய்யா, கோவைக்கு பி எஸ் ஜி குரூப்பு கோவிந்தசாமி நாயுடு அய்யா. இவிக மூணு பேருமு இல்லீன்னா கொங்கு நாடு எப்பிடி இருக்கும்னு நெனச்சுக் கோடப் பாக்கமுடீல. அமராவதி சைனிக் ஸ்கூலுமு, திருமுர்த்தி நகர் டீச்சர் ட்ரைனிங் ஸ்கூலுமு நெம்ப பேமஸ். பெருசா இல்லாட்டியும் ஒரு ஐ டி ஐ யாச்சும் முடிச்சுப் போட்டு பிட்டராவோ, லேத் மிசின் ஓட்றதுக்கோ போயரலாம். சிப்டு முடிஞ்சு வாரைல அல்லார் தலைலயுமு பஞ்சு ஒட்டீட்ருக்கும். பஞ்சு மில்லுகள்ல ஆம்பளைகள விட பொம்பளையாளுகதான் அதிகம். ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும், தொழில்ல நெம்பவே ஊக்கமான ஆளுக. (பொறுமையா வேலை பாப்பாகல்ல. ஆம்பளையாளுக பீடி குடிக்கறேன், ஒண்ணுக்குப் போறேன்னே ஓப்பியடிச்சுருவாங்க. அதுக்குன்னே பஞ்சு மில்லுகள்லயெல்லாம் கக்கூஸுக்குப் போறதுக்கு சூப்ரைசர் கட்ட டோக்கன் வாங்கீட்டுதான் போகோணும். 10 நிமுசந்தேன். இல்லாட்டி இவிகளையெல்லாம் மேக்க முடியதல்ல. )
வெவசாயம்னு பாத்தம்னா புஞ்சைன்னு அதிகம் கெடயாது. மாரியம்மன் புண்ணியத்துல மளை வருது. கொளங்குட்டைக நெம்புது. பி ஏ பி வாக்யாலு, திருமூர்த்தி டேமு, அமராவதி டேமு, ஆளியாறு டேமுன்னு தண்ணி சேத்தி வெச்சுக்க நல்ல வசதி. நெல்லு, பருத்தி, கரும்பு, போயல, சூரியகாந்தி, ராகி, தட்டு, சோளம், உளுந்துன்னு எல்லாம். முருங்கை, அவரை, தொவரைன்னு அப்பப்ப. தக்காளி, வெங்காயம் சீப்படும்.
தென்னந்தோப்புக ஒரு பெரிய தொழில். அக்ரி காலேஜுமு, தென்னை மேம்பாட்டு ஆராச்சி ஆபீசுகளும் போட்டி போட்டுக்கிட்டு மூணு வருசம், ரெண்டு வருசம், குட்டை, நெட்டை, ஐப்பிரிட்டுன்னு ஏகத்துக்குமு தென்ன ரகங்க கண்டு புடிச்சதுல தோப்புக்காரவிகளுக்கு நல்ல லாபம். கோடவே மட்ட, நாருன்னு எச்சுக் காசு. தேங்கா நாருல இருந்து கவுறு, மெத்தன்னு அது ஒரு தனி தொழில்.
ம்ம்ம்ம்... எல்லாம் ஒரு மூச்சு படிச்சு முடிச்சுட்டீங்களா... இப்ப தரைக்கு எறங்கி வருவமா? இந்த கோயம்புத்தூர்ல குண்டு வெடிப்பு நடந்துச்சு பாருங்க.... அதுக்கும் பொறவு எல்லாம் மாறிப்போச்சுங்க. ஆருதேன் அப்பிடி எங்கூரு மேல கண்ணு வெச்சாங்களோ... தொழில் துறையே நசுங்கிப் போயி... என்னத்தன்னு சொல்றது போங்க? பெரிய கம்பெனிகள்லாம் எப்பிடியோ தாக்குப் புடிச்சுக்கிடாக... சின்னவங்க பாடுதேன் திண்டாட்டமாப் போச்சு. நானெல்லாம் டிப்ளமாப் படிச்சுப் போட்டு பஞ்சு மில்லு மிசின் எரக்சன்லயே நல்ல வருமானம் பாத்தேன். பொறவு பஸ் பாடி, ட்ரைலரு, கதிர் அடிக்கற மிசினு, க்ரஸ்ஸரு, கட்டல் பீரோன்னு பாக்காத தொழிலில்ல. இப்ப நான் பொளைக்கிற பொளப்பு பாத்தீகல்ல. இப்ப என்ரான்னா தோப்புல தென்ன மரங்களுக்குமுங் கோட என்னமோ செலந்தி நோயாமா...அந்தக் கெரகம் வந்து மரங்க மொட்ட மொட்டயா நிக்கிறதப் பாத்தா எங்கிட்டாச்சி கண்ணு காணாத எடத்துக்கு ஓட்ட்றலாமாட்ட இருக்கு. செரி எடந்தாங் கெடக்குதே, வெவசாயந்தேஞ் செய்ய முடீல, காத்தாலை போட்டா கரண்டு வித்து சம்பாரிக்கலாம்னா, ஈ பீ காரவிக கிட்டருந்து கைக்கு காசு வாரதுக்குள்ள இதுவும் ஒரு பொளப்பான்னு ஆயிருது.
இந்தக் கூத்தைக் கேளுங்க. பொள்ளாச்சில்ருந்து வால்பாறை போற வழில, காடம்பாறைல ஒரு நீர் மின் திட்டம் போட்டு, செர்மனில்ருந்து ஆளுக வந்து மலைய 3 கிலோமீட்ரு கொடஞ்சு, உள்ளார செனரேட்டரு, டர்பைனெல்லாம் வெச்சு கரண்ட் எடுக்கலாம்னாக. அதுமு எப்பிடி? மலை மேல ஒரு கொளமாட்ட இருக்குது. அங்கிருந்துதேன் ஆளியாறு டேமுக்கு தண்ணி போகுது. அந்தத் தண்ணிய பைப் போட்டு கீள கொண்டாந்து டர்பைன ஒட்றதாமா. கெடைக்கிற கரண்டுல பகல்ல கொஞ்சம் மிச்சம் பண்ணி மறுக்கா மோட்டர் போட்டு டேமுலேந்து தண்ணிய மேல ஏத்தறதாமா. நாலே நாலு எளுத்து படிச்ச எனக்கெ இதெல்லாம் வேலைக்காகுமா, நட்டமாகாதான்னு தோணும்போது, நாப்பது எளுத்து படிச்ச மகராசனுக கொஞ்ச நாள் ஒட்டிப் பாத்துப்போட்டு, செலவு நெம்ப புடிக்குதுன்னு திட்டத்தை கெடப்புல போட்டுட்டாங்க.
என்னமோ போங்க, இப்ப இது பளய கொங்கு மாதரயே இல்ல. என்னமோ வண்டி ஓடுது. உனி இது மறுக்கா பளய மாதர வருமான்னுந் தெரீல. கோயமுத்தூர் பரவால்ல. இப்ப கே எம் சி எச், தமிழ்நாடு, அரவிந்த் கண்ணாஸ்பத்திரின்னு ஆஸ்பத்திரிக நல்லா போகுது. என்ன செய்யிறது... வெசாதி பெருகிப் போச்சு பாருங்க... ஒண்ணுஞ் சொல்றாப்டி இல்லீங். என்னமோ உலகத்துல அங்கங்க பேங்குக திவாலாகிக்கிட்டே வருதுன்னெலாம் பேப்பர்ல படிக்கிறோம். தொழிலெல்லாம் இன்னுமு மந்தமாகும்கிறாங்க. ஆனா ஒண்ணுங்க... நாங்கள்லாம் தொழில் வெறி புடிச்ச ஆளுங்க. எதயாச்சும் தட்டிக் கொட்டி தலகீளாத் தண்ணி குடிச்சாச்சும் மேல வந்துருவோமுங். அது நம்ம ரெத்தத்துலயே இருக்குதுங். பாத்துக்கிட்டே இருங்க.
சும்மா உங்க கிட்ட எங்கூரப் பத்தி சொல்லோணும்னு தோணுச்சுங். இன்னும் நெறய வெவரமாச் சொல்லோணும்னு ஆசைதேன். இன்னோரு நா சொல்றேன். அதுக்குள்ள நம்ம மணியண்ணன் - அதேன் பழமைபேசி - எதாச்சி அதிகத் தகவல்களோட வந்தாலுமு வருவாரு. இம்புட்டு நேரம் நாஞ் சொல்றதைக் கேட்டுக்கிடுருந்ததுக்கு நன்றிங். வேலை கெடக்குதுங்.நெம்ப நேரமானா அப்பறம் அம்மினி கட்ட பேச்சுக் கேக்கோனுங். வரட்டுங்ளா?
Showing posts with label உடுமலை. Show all posts
Showing posts with label உடுமலை. Show all posts
Thursday, December 4, 2008
Subscribe to:
Posts (Atom)